Tuesday, February 26, 2008

ஆதியும் மூலமுமான ஆதிமூலம்

இரவு பத்து அல்லது பத்தரை மணி இருக்கும். ஆதிமூலம் இன்று மாலை இறந்து விட்டார் என்று நண்பர் எஸ் கே எஸ் மணியிடமிருந்து எஸ் எம் எஸ் வந்தது. பின் மறு நாள் காலை க்ரியா ராமகிருஷ்ணன், சச்சி இப்படியாக தொடர்ந்து தொலைபேசிச் செய்திகள். என்ன சொல்ல? ஒரு வெறுமை, ஒரு வேதனை, ஒரு இயலாமை, ஏதோ என்னிடமிருந்து, தமிழ் சமூகத்திடமிருந்து பறிக்கப்பட்டு விட்ட உணர்வு தாக்கியது. மிக நெருக்கமான பழக்கம் என்றும் சொல்லமுடியாது. பரிச்சயம் என்று மாத்திரம் சொல்லி அதை அவ்வளவுக்கு குறைத்துக்கொள்ளவும் முடியாது. பரிச்சயமும் பழக்கமும் தொடங்கிய கடந்த கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில், நேரில் பார்த்துப் பழகியது அவ்வளவு அதிகம் இல்லை தான். நீண்ட காலமாக நான தில்லியிலேயே இருந்தது காரணமாக இருக்கலாம். ஆனால் நேர் சந்திப்புகளின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு மனத்தின், உறவுகளின் ஆழத்தையும் நெருக்கத்தையும் அளவிட்டு விடமுடியாது. தனி மனித உறவுகளுக்கும் மதிப்புகளுக்கும் மேல் எழுத்துலகில், கலைகள் உலகில், சமூகத்தில், நானும் அங்கம் வகிக்கும் ஒரு உறுப்பினனாக, நானும் என்னைப் போன்ற மற்றோரும் உணரும் அவரது வியாபகமும் தாக்கமும் மிகப் பெரிது. இந்த உணர்வை, அவரை நேரில் அறிந்து பழகாத தமிழர்களில் பகிர்ந்து கொள்பவர்கள் கணிசமாக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நான் இதையெல்லாம் சொல்லக் காரணம் நான் ஆதிமூலத்தைப் பற்றி எண்ணும்போது, அந்த மனிதர், அவரது படைப்புகள், அவர் வாழ்ந்த சமூகத்தின் மதிப்புகள் எல்லாவற்றையும் பின்னிப் பிணைந்த ஒரு வாழ்க்கையின் முழுமையைத் தான் எண்ணத் தோன்றுகிறது.

எப்படியோ அப்படித்தான் நானும் வளர்ந்து விட்டேன். அப்படித்தான் எதையும் பார்க்கத் தோன்றுகிறது. அதைத் தான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே எழுதியும் வருகிறேன். அந்த சமயத்தில் தமிழ் நாட்டில் ஓவியம், சிற்பம் பற்றி யாரும் நினைத்துப் பார்த்ததில்லை. அதிர்ஷ்ட வசமாக அந்த சமயத்தில் எழுத்து பத்திரிகையில் வந்து சேர்ந்த சச்சிதானந்தத்தை பின் வருடங்களில் சந்தித்தபோது அவருக்கு சென்னை ஒவியக் கல்லூரியுடனும், சமீக்ஷா பத்திரிகை கோவிந்தனுடனும் நெருங்கிய பழக்கமும் நட்பும் இருந்தது. இப்படி ஒன்றிரண்டு பேர்களாக, இங்கும் அங்குமாக இருந்தனரே தவிர, ஜெர்மனியில் முப்பதுக்களில் இருந்த பஹௌஸ் ஸ்கூல் போலவோ, இங்கிலாந்தில் இருந்த ப்ளூம்ஸ்பரி போலவோ, ·ப்ரான்ஸில் அபாலினேரைச் சுற்றி இருந்த, அவர் இயங்கி பாதித்த சூழல் போலவோ, ஒரு பெரும் குழுவாக, ஓவியர், கவிஞர்கள், சிந்தனையாளர், நாடகாசிரியர், அனைத்தினரையும் ஒருங்கிணைத்த சிந்தனை மையமாக இருக்கவில்லை. சுதந்திரப் போராட்ட காலத்தில், வங்காளத்தில் அது காணப்பட்டது. அறுபது எழுபதுகளில் பரோடாவை மையமாகக்கொண்ட குழு ஒன்று இயங்கியது. ஓவிய உலகில் பரோடா பள்ளியைச் சேர்ந்தவர்கள் கலகக் காரர்களாகக் கருதப்பட்டார்கள். அத்தகைய ஒன்று இங்கும் முளை விடுவதாக நான் அக்காலத்தில் எண்ணக் காரணம் எழுத்துவில் ஆரம்பித்தது, நடையில் உருப்பெற்று கசடதபறவிலும் தொடர்ந்தது தான். இப்போது எல்லாப் பத்திரிகைகளிலும் காணும் பல துறை விகாசம் எங்கு எப்போது ஆரம்பித்தது என்பது இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. தெரிந்தாலும் தெரிந்ததாகக் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் அவர்கள் தான் மூலவர்கள் என்று ஸ்தாபித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். தொடக்கத்திற்குப் போகவேண்டும்.

இந்த உறவுக்கும் பரஸ்பர அறிதலுக்கும் முக்கிய உத்வேகமாக இருந்தது ஆதிமூலம் தான். அவர் பெயரே சொல்வது போல ஆதியும் அவர் தான். மூலமும் அவர்தான். ஒரு புள்ளி பிரபஞ்சமாக விரிந்து பூதாகரிப்பது நமக்கு அன்னியமான ஒரு விஷயமில்லை. நம் மரபில் சிந்தனையில் ஊறிய விஷயம். அறுபதுகளின் இடைப்பட்ட வருஷங்களிலிருந்துதான், என் நினைவில், தமிழ் ஒவியர்களின் சித்திர கண்காட்சிகளை கூட்டாகவோ தனித்தோ பார்த்து வந்திருக்கிறேன். தில்லியில், ரவீந்திர பவனின் லலித் கலா அகாடமி ஓவியக் கூடத்தில். ஆதிமூலத்தின் கோட்டுச் சித்திரங்கள் இருந்தன. அவரோடு காட்சிக்கு வந்திருந்தவர்கள் என இப்போது என் நினைவுக்கு வருபவர்கள் என, எஸ், என் வெங்கடராமன், வரதராஜன் இருவரைத்தான் சொல்ல முடிகிறது. பெயர்கள் தான். சித்திரங்களை நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. ஆனால் ஆதிமூலமும் அவரது சித்திரங்களும் நினைவுக்கு வரக் காரணம் அவர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்ததும், பின் வருடங்களில் அவருடனான தொடர்பும் பரஸ்பர உறவும் இலக்கிய உலகிலும் விஸ்தரித்தது காரணமாக இருக்கலாம்.

அப்போதெல்லாம் தில்லியில், - நான் அக்காலத் தில்லியைப் பற்றித்தான் பேசமுடியும், - தெற்கிலிருந்து வரும் ஓவியர், சிற்பிகளைப் பற்றி அங்கு அதிகம் பேசப்படுவதில்லை. கொஞ்சம் பிந்தங்கியவர்கள் என்று அவர்களுக்கு மூக்கு வானத்தை நோக்கி உயரும். அவர்கள் கால்கள் இங்கு நிலத்தில் பாவியதில்லை. ஐரோப்பிய தாக்கம் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் உடையிலும் அதிகம் அவர்களுக்கு. ஸ·பாரி சூட்டும் உதட்டில் பைப்பும் ஓவியர் என்ற சீருடையை ஸ்தாபிக்கும். ஆனால் சென்னை ஓவியக் கல்லூரியிலிருந்து வந்தவர்கள் தம் மரபையும் மண்ணையும் விட்டு தம்மை அறுத்துக் கொள்ளாதவர்கள். அதற்கு அவர்கள் பள்ளியில் ஒரு ராய் சௌதுரியும் பணிக்கரும் இருந்தது காரணமாக இருக்கலாம்.

இதையெல்லாம் உடைத்து தன்னை ஸ்தாபித்துக் கொண்டவர் ஆதிமூலம். அவரது பலம் அந்நாட்களில் அவரது கோட்டுச் சித்திரங்களின் பலம் தான். அவரது திறனை இனங்கண்டு, மகிழ்ந்து, ஓவியக் கல்லூரியிலும் சேர்த்து ஆதிமூலத்தின் ஒவிய வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக இருந்த தனபாலே, அவரது சிஷ்யனைப் பற்றி, கிட்டத்தட்ட இந்தமாதிரி வார்த்தைகளில், சொல்கிறார். நினைவிலிருந்து எழுதுகிறேன். "நான் ஆதிக்குக் கற்றுக்கொடுத்தது ஒரு திசை காட்டலே. வழி காட்டியதும், அவன் ஐரோப்பிய மேதைகளுக்கு இணையாக கோடுகள் வரைவதில் வல்லவன். பாடத் தெரிந்து விட்டால் ராக ஆலாபனையில் தன் கற்பனையில் சொல்லிக் கொடுக்காததையும் தன்னை அறியாது பாடிவிட முடிகிறதல்லவா?" ஒரு தனபாலிடமிருந்து இது ஒரு சிஷ்யனுக்குக் கிடைக்கிறது. இந்த சிஷ்யன் ஒரு கீராம்பூர் கிராமத்தில் பிறந்து கோவில் சுவர் சித்திரங்களியும் சுட்ட மண் சிற்பங்களையும் பார்த்து வளர்ந்தவன். "நான் ஒன்றும் அறிவு ஜீவியில்லை. நான் கற்றது சித்தாந்தங்களைப் படித்து அல்ல. படைப்புகளைப் பார்த்து." என்று சொல்வார் ஆதிமூலம். இது வெற்றுத் தன்னடக்கம் இல்லை. தன்னை அறிந்த முழுமை. பந்தா இல்லாத, மூக்கு வானத்தை நோக்காத முழுமை. கீராம்பூர் கிராமத்தில் விளைந்தது லண்டனுக்கும் செல்லும் என்ற தன்னம்பிக்கையின் பிறந்த முழுமை.

இந்த எளிமையும் உண்மையும் தான் அவரை இன்றைய தமிழ்க் கூட்டத்தில் தனித்து உயர்ந்து நிற்கும் மனிதராகக் காட்டுகிறது. அவர் தன்னைச் சுற்றியோ தன் தலைக்குப் பின்னோ ஒரு ஒளி வட்டம் பிரகாசிப்பதாக எண்ணியதில்லை. ஆரம்ப காலத்திலும் சரி, கடைசி வருடங்களில் அவர் படைப்புகள் வேறு எந்த தென்னிந்தியருக்கும் கிட்டாத அளவிற்கு வியாபார வெற்றியடைந்த போதும் சரி. நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது சில வருடங்கள் முன்பு தான். பேசியது தொலை பேசியில் ஒரு வருடம் முன் (ஜனவரி 1907). தில்லி லலித் அகாடமி கண்காட்சி ஹாலில்(1960களின் பின் பாதி) பார்த்துப் பேசிய அதே ஆதி மூலம் தான். இப்போது கொஞ்சம் நெருக்கமும் பரஸ்பர புரிதலும் அதிகம். முதல் சந்திப்பில் அவர் என்னை யாரென்று அறிந்திருப்பாரோ என்னவோ. ஆனால், அடுத்த சந்திப்பு(1973) சென்னை மௌபரீஸ் ரோடில் என்று நினைக்கிறேன். அப்போது அந்தப் பெயரில்தான் அந்த ரோடு இருந்தது. நான் தங்கியிருந்த உறவினர் வீட்டு வாசலில் தற்செயலாக. "அட இங்கு வந்திருக்கி றீர்களா?எவ்வளவு நாட்கள் இருப்பீர்கள்? வாருங்களேன் சாவகாசமாக பேசலாம். இடம் தெரியாதா? சச்சிக்குத் தெரியுமே. அவரோடு வாருங்கள்" எல்லாம் விசாரித்து, கேட்டு அவரே பதில்களும் பிரச்சினைகளுக்குத் தீர்வும் சொல்லியாயிற்று. போனோம் நானும் சச்சிதானந்தமும். நான் அன்று தங்கி இருக்குமிடத்திற்கு நாங்கள் இருவரும் நடந்தே திரும்பினோம். எழும்பூர் Weavers" Centre, -லிருந்து தியாகராய நகர் திருமலைப் பிள்ளை ரோடில் சச்சி எனக்குத் தங்க ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு. தில்லி ரவீந்திர பவன் புல்வெளியில், தில்லி ப்ரெஸ் க்ளப்பில், அவர் ஒரு காலத்தில் இருந்த அடையாறு வீட்டின் முதல் தளத்தில். ஓவ்வொரு முறையும் நிறைய பேச்சும் அவர் வரைந்திருந்த ஓவியங்களைப் பார்ப்பதுமாக பொழுதுகள் போகும். சென்னை வந்த பிறகு நண்பர்களின் வீட்டுக் கல்யாணங்களில். பூந்தமல்லி ஹை ரோடு ஹோட்டலில்(ஹோட்டல் எவரெஸ்டா? நினைவில் இல்லை) முத்துக் கோயா, பிரபஞ்சன், பாஸ்கரனோடு. என் புத்தகங்களுக்கு வரைந்து அவர் கொடுத்தது, நான் நேரில் கேட்டு அல்ல. செல்லப்பாவோ, சச்சிதானந்தமோ அல்லது வேறு யாருமோ கேட்டு. ஒரு முன்னனணி ஓவியரைக் கேட்பது போல அல்ல. ஒரு நண்பரிடம் ஏதோ ஒரு வேலையை நமக்காகச் செய்யச் சொல்வது போல. ஒரு பந்தாவும் இல்லாத மனிதர். இதனால் அவர் பெற்றது ஏதும் கிடையாது. வியாபாரக் கணக்கில் ஒரு பைசா வரவில்லாத விஷயம். இது அறுபதுகளில் இருந்து தொடங்கி இறுதி மூச்சு வரை தொடர்ந்தது. அந்தக் காலத்தில் நடை பத்திரிகைக்கு அவரிடம் கேட்ட போது, அதனால் விளம்பரமும் கிடையாது. பண வருவாயும் கிடையாது. பிரக்ஞையுள்ள ஒரு சிறு வட்டத்திற்குள் ஒரு சலனத்தை, ஒரு பரிச்சயத்தை, ஒரு தெரிவை ஏற்படுத்துவது என்பதே நோக்கம். அவ்வளவே. அவரைத் தொடர்ந்து எண்ணற்ற பலரும் அதற்கு முன் வந்தனர். 1961-ல் எழுத்து பத்திரிகையில் ஒரு சிந்தனை வெளிப்பாடாகத் தொடங்கியது, பின் வருடங்களில் படிப்படியாக சின்ன முயற்சிகளாக இன்னும் பலர் சேர்ந்து செயல்பட்டது, இன்று ஒரு பகுதி சமூகத்தின் ஒட்டு மொத்த செயல்பாடாக வளர்ந்து பெருகியுள்ளது. கலை உணர்வு வளர்ந்துள்ளது, ஆழம் பெற்றுள்ளது என்று சொல்ல மாட்டேன். தெரிந்தும், பல இடங்களில் தெரியாமலும் அதன் மதிப்பு உயர்ந்துள்ளது. "இதென்னங்க ஒரே கிறுக்கலா இருக்கு. இதெல்லாம் அட்டையிலே போட்டா யார் வாங்குவாங்க? என்ற நிலையிலிருந்து, "இதெல்லாந்தாங்க இப்ப போடறாங்க, இதுக்கு ஒரு மதிப்பு இருக்குங்க," என்று அடுத்த பத்து பதினைந்து வருடங்களில் மாறி, இப்போது, "ஆதிமூலத்துகிட்டே போயி நானே இந்த மூணு புத்தகத்துக்கும் வரைஞ்சி வாங்கிட்டு வந்திடறேங்க, அப்பத்தான் நல்லா இருக்கும்" என்று ஆவலோடு முதலாளியே சொல்லும் நிலைக்கு வந்துள்ளது. தெரிவு மாத்திரமல்ல. அது ஒரு சிறு வட்டத்திற்குள் தான் சிறைபடும். ஆனால் snobbery நிறைந்த பலனைக் கொடுக்கும். பணம், செல்வாக்கு இத்யாதி. பாமரத்தனமான அலங்கோலமாக இருந்த புத்தக வெளியீட்டில் தனக்கே உரிய எளிமையைக் குணமாக்கினார் செல்லப்பா. அதற்கு தொழில் நுட்பத்தோடு கலை என்ற பரிமாணத்தையும் தரத் தொடங்கியது க்ரியா ராமகிருஷ்ணன். அதற்கும் அவருக்கு உதவியது ஆதிமூலம் தான். அந்த சிரமம் மிக்க, பலர் நகையாடிய ஆரம்பங்கள் இன்று எங்கு புத்தக வெளியீட்டுத் துறையை கொண்டு வைத்துள்ளது?

இது வேறு எங்கும் நடந்ததில்லை. நடந்திராது. புத்தகங்களுக்கு மாத்திரமில்லை. ஒவ்வொரு கான்வாஸ¥ம் பல பத்து லட்சங்களுக்கு விலை போகும், இன்று கடந்த முப்பது நாற்பது வருடங்களாக, ஆதி மூலம் தன் நண்பர்களுக்கு, அவ்வப்போது அன்புடன் கொடுத்துள்ளது எண்ணிக்கையில், அடங்காது. அவற்றின் பொருள் மதிப்பீட்டை அவரவர் யூகத்திற்கு விட்டு விடலாம்.. ஆனால் ஆதி மூலம் 70 களில் நான் பார்த்த ஆதி மூலம் தான்.

பல விஷயங்களை தமிழ்ச் சூழலின் சந்தர்ப்பத்தில் சொல்லத் தோன்றுகிறது. "நான் அறிவு ஜீவி இல்லை. நான் படித்துக் கற்றுக்கொள்ளவில்லை. உலகக் கலைப் படைப்புக்களைப் பார்த்துக் கற்று வளர்ந்தவன்," என்று தன்னைப் பற்றிச் சொல்லும் ஆதிமூலத்தின் வளர்ச்சியை, அவர் படைப்புக்களின் அவ்வப்போதைய சீரான மாற்றங்களில் பார்க்கலாம். தமிழ் மண்ணும் இந்திய ஓவிய மரபும் கோடுகளின் ஆதாரத்தில் பிறந்தவை. ஆதிமூலம் தன் உள்ளார்ந்த திறமையைக் கண்டுணர்ந்தது, சிறு வயதில் தன் கிராமத்தில் கண்ட சுதைச் சிற்பங்களை, சுவர் ஓவியங்களைக் கண்டு. அவரது வரை கோட்டுத் திறன் தன் வளர்ச்சியில் ஐரோப்பிய மேதைகளுக்கு இணையானது என்று தனபாலையே சொல்ல வைத்துள்ளது. வடநாட்டில், நகரங்களில் கால் வைத்த போது பொதுவாகவே தென்னாட்டு படைப்புக்கள் வரைகோடு சார்ந்து, உருவார்த்த குணம் சார்ந்திருப்பதன் காரணத்தால் ஏளனமாகப் பார்க்கப்பட்டபோதிலும் அவர் தன்னை வழி மாற்றிக்கொள்ளவில்லை. விஷயம் என்னவென்றால், அவர்கள் எப்போதாவது தம் வரைகோட்டுத் திறனை வெளிக்காட்டு சந்தர்ப்பம் நேரும்போது பார்த்தால் அவர்களது பலவீனமும் வெளிப்படுவதைப் பார்த்திருக்கிறேன். வரைகோடுகளின் ராஜ்யத்தில் ஆதிமூலம் மன்னன். அவரது வரைகோட்டுச் சித்திரங்கள் தம்மில் முழுமை பெற்றவை. நாடகார்த்தம், வீரியம், கொடூரம், மிருக பலம், கவித்வம், மெல்லிய இழையோட்டம் ஆகிய எல்லா குணங்களையும் அவை காட்ட வல்லவை. அவை வெளியையும் வெளியை நிரப்பும் திடத்தன்மையும் வெளிக்காட்ட வல்லவை. இவ்வளவுக்கும் ஆதிமூலம் தன்னை தன் இயல்பான வளர்ச்சியில் கண்டவர் தான். வெகு வருடங்களுக்கு அவர் கோட்டுச் சித்திரங்களை விட்டு நகரவில்லை. சில சமயங்களில் வண்ணங்கள் வாங்க பொருள் வசதியின்மையால் தான் என்று சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இருந்தாலும், அது ஒரு குறையாக இருந்ததில்லை. அந்தப் புள்ளியிலிருந்து இன்று அவரது உருவத்தைக் கடந்த வண்ணவெளி என்று சொல்லத்தக்க ஓவியங்கள் வரை அந்த மாற்றத்தின் பாதையை படிப்படியாகப் பார்த்தோமானால், ஒரு மாற்றம் அதன் முந்திய நிலையின் அம்சங்களைக்கொண்டே பிறந்து வெளிப்பட்டுள்ளதைக் காணலாம். எதுவும் முந்தியதை அறவே மறுத்து ஒதுக்கி, புதிதாகப் பிறந்ததல்ல. இயல்பான வளர்ச்சியில் எந்த புதியதும் முற்றிலும் புதியதல்ல. எந்த பழையதும் முற்றிலும் பழையதுமல்ல. பழையதின் குணத்தைக் கொண்டிராத புதியதும் இல்லை. புதியதன் குணத்தைத் தன்னுள் கொண்டிராத பழையதும் ஏதும் இல்லை. ஆதிமூலத்தின் 40 வருட கால ஓவிய வாழ்க்கையே அவரது தன்னின் மலர்ச்சிதான்.
எவ்வெத்துறையிலோ சிற்பிகளை, ஓவியர்களை, கலைஞர்களை நாம் தமிழ் நாட்டில் விருது அளித்து, ஆடிக் கொண்டாடி முடிசூட்டிக் கொண்டாடி வருகிறோம். ஓவியத்துறையில் நாம் பெற்றுள்ள ஒரு தலைசிறந்த கலைஞரை, நாம் கலைஞராக காணவும் இல்லை. ஒரு கட்டத்தில் நாம் விருது பெறாத, ஏதோ ஒன்றிற்கு சிற்பியோ மன்னனோ, அரசோ இல்லாத ஒரு தமிழனைக் காண்பது சிரமமாக இருக்கும் போலிருக்கிறது. ஆனால் ஒரு கலைமாமணியாகக் கூட ஆதிமூலத்தை நாம் காணவில்லை. உண்மையில் பார்க்கப் போனால், அரசியல் சார்பு இருந்தால் ஒழிய ஓவியர்களும் சிற்பிகளும் தமிழ் நாட்டு அரசுகளுக்கு பெருமைப் படும் ஜீவன்களாகத் தெரிவதில்லை. ஆனால் எனக்குத் தோன்றுகிறது. அரசும் வாணிகமும், அரசியலும் இதில் தலையிடாதது நல்லதாகத்தான் இருந்திருக்கிறது. இல்லையெனில் சினிமாவிலும் (இது தான் தமிழ் நாட்டுக் கலை) நாடகத்திலும், இலக்கியத்திலும் நேர்ந்த பாமரத்தனமான விளைவுகளை ஓவிய சிற்ப உலகிலும் கண்டிருப்போம். எல்லாத் துறைகளிலும் இது போன்று அரசிடமிருந்தும், அரசியல் வாதிகளிடமிருந்தும் ஒரு காருண்யமிகுந்த அலட்சியம் (benign neglect) இருந்திருந்தால் எத்தனையோ பேரரசுகள், மன்னர்கள், திலகங்களிடமிருந்து தமிழ் நாடு தப்பிப் பிழைத்திருக்கும்.
ஆனால், ஆதிமூலம் இது பற்றியெல்லாம் கவலைப்பட்டவரில்லை. அது பற்றிய சிந்தனையே அவருக்கு இருந்ததில்லை. ஒரு கட்டத்தில் திருக்குறள் ஒன்றிற்கு அவர் ஏன் ஓவியம் வரைந்து கொடுத்தார் என்று நான் எண்ணியதுண்டு. அவர் அதை அமைதியாக மறுத்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. அந்த கலவரத்தை அவர் விரும்பாத காரணத்தால் தான் அவர் இயல்புக்கு விரோதமான ஒன்றைச் செய்தார் என்றும் தோன்றிற்று. அவர் பந்தா அற்றவர் மட்டும் அல்ல. அமைதியானவர். அமைதியாக, தன் இயல்புக்கான செயல்களைச் செய்து வாழ்ந்தவர். யாரிடமும் அவர் கோபம் கொண்டதாக, எது பற்றியும் அவர் சீற்றம் கொண்டதாக செய்தியில்லை. நான் தில்லியில் இருந்த காலத்தில் அவர் மத்திய லலித் கலா அகாடமிக்கான் சில பொறுப்புகளை வகித்ததுண்டு. அது அவரை வந்தடைந்தது அபூர்வமே. வட இந்தியர்கள் அவ்வளவு சுலபமாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அப்போதெல்லாம் அவர் அலட்சியத்துடன் ஒதுக்கப்பட்டு வந்த தென்னிந்திய ஓவியர்கள் சிற்பிகளை கவனத்தில் கொண்டு வர முயன்ற காரணத்தாலே வட இந்தியர்களிடையே சச்சரவுக்காளானார் என்றும் தெரிந்தது. எது பற்றியும் அவருக்குக் கவலை இல்லை. எந்த பதவியையும் பரிசையும், விருதையும், கௌரவத்தையும் அவர் நாடிச் சென்றதில்லை. அவர் அடைந்த வெற்றிகள் அவர் படைப்புகளுக்குக் கிடைத்த வெற்றி. அவர் படைப்புகள் அவரது ஆளுமையின் வெளிப்பாடுகள். வியாபார வெற்றி அவரை வந்தடைந்ததே தவிர அதை நாடி அவர் தன் படைப்பின் அதற்கான வழிமுறைகளைத் தேடியவரில்லை. இப்படி இந்திய பரப்பளவில் எத்தனை கலைஞர்களைப் பற்றிச் சொல்லமுடியும் என்று தெரியவில்லை.

ஒரு புள்ளிதான் தன் விகசிப்பில் பிரபஞ்ச பரிமாணம் பெறுகிறது என்றேன். தன் சிறுவயது கீராம்பூர் கோவிலும் அதன் சுவர் ஓவியங்களும், சுதைச் சிற்பங்களும், கிராமக் காட்சிகளும் மக்களும் என்று தொடங்கி சென்னை கலைக் கல்லூரி வாழ்க்கையின் காட்சிகளும் மனிதர்களும் (ராமானுஜம்), தான் வியந்த பிக்காசோக்களும், செகாலும், காந்தியும், மகாராஜாக்களும் என்று கடந்து, விரிந்த வெளியும் அதில் மிதக்கும் உருவங்களும் என அந்தப் புள்ளிதான் இப்படி பரிமாணம் பெற்றுள்ளது.

ஆதி மூலம் நிறைய படைப்புகளை, ஓவியக் கூடங்களில், வணிக நிறுவனங்களில், தனி நபர்களிடம், இந்திய, அன்னிய நாட்டு கலைக்கூடங்களில் விட்டுச் சென்றிருக்கிறார். அவை மொத்தமும் தமிழரின் கலைத் திறனுக்கு அடையாளமாக இருக்கும். அவ்வாறு கருதப்படும் ஒரு காலம் வரும். பிக்காஸோ ஸ்பெயினுக்கும் வான் கோ டச்சுக்கும் அடையாளமாகியிருப்பதைப் போல

.
வெங்கட் சாமிநாதன்/17.1.08



ஆதியும் மூலமுமான ஆதிமூலம்வெங்கட் சாமிநாதன்
இரவு பத்து அல்லது பத்தரை மணி இருக்கும். ஆதிமூலம் இன்று மாலை இறந்து விட்டார் என்று நண்பர் எஸ் கே எஸ் மணியிடமிருந்து எஸ் எம் எஸ் வந்தது. பின் மறு நாள் காலை க்ரியா ராமகிருஷ்ணன், சச்சி இப்படியாக தொடர்ந்து தொலைபேசிச் செய்திகள். என்ன சொல்ல? ஒரு வெறுமை, ஒரு வேதனை, ஒரு இயலாமை, ஏதோ என்னிடமிருந்து, தமிழ் சமூகத்திடமிருந்து பறிக்கப்பட்டு விட்ட உணர்வு தாக்கியது. மிக நெருக்கமான பழக்கம் என்றும் சொல்லமுடியாது. பரிச்சயம் என்று மாத்திரம் சொல்லி அதை அவ்வளவுக்கு குறைத்துக்கொள்ளவும் முடியாது. பரிச்சயமும் பழக்கமும் தொடங்கிய கடந்த கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில், நேரில் பார்த்துப் பழகியது அவ்வளவு அதிகம் இல்லை தான். நீண்ட காலம் தில்லியில் இருந்தது காரணமாக இருக்கலாம். ஆனால் நேர் சந்திப்புகளின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு மனத்தின், உறவுகளின் ஆழத்தை நெருக்கத்தை அளவிட்டு விடமுடியாது. தனி மனித உறவுகளுக்கும் மதிப்புகளுக்கும் மேல் எழுத்துலகில், கலைகள் உலகில், சமூகத்தில், நானும் அங்கம் வகிக்கும் ஒரு உறுப்பினனாக, நானும் என்னைப் போன்ற மற்றோரும் உணரும் அவரது வியாபகமும் தாக்கமும் மிகப் பெரிது. இந்த உணர்வை, அவரை நேரில் அறிந்து பழகாத தமிழர்களில் பகிர்ந்து கொள்பவர்கள் கணிசமாக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நான் இதையெல்லாம் சொல்லக் காரணம் நான் ஆதிமூலத்தைப் பற்றி எண்ணும்போது, அந்த மனிதர், அவரது படைப்புகள், அவர் வாழ்ந்த சமூகத்தின் மதிப்புகள் எல்லாவற்றையும் பின்னிப் பிணைந்த ஒரு வாழ்க்கையின் முழுமையைத் தான் எண்ணத் தோன்றுகிறது.
எப்படியோ அப்படித்தான் நானும் வளர்ந்து விட்டேன். அப்படித்தான் எதையும் பார்க்கத் தோன்றுகிறது. அதைத் தான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே எழுதியும் வருகிறேன். அந்த சமயத்தில் தமிழ் நாட்டில் ஓவியம், சிற்பம் பற்றி யாரும் நினைத்துப் பார்த்ததில்லை. அதிர்ஷ்ட வசமாக அந்த சமயத்தில் எழுத்து பத்திரிகையில் வந்து சேர்ந்த சச்சிதானந்தத்தை பின் வருடங்களில் சந்தித்தபோது அவருக்கு சென்னை ஒவியக் கல்லூரியுடனும், சமீக்ஷா பத்திரிகை கோவிந்தனுடனும் நெருங்கிய பழக்கமும் நட்பும் இருந்தது. இப்படி ஒன்றிரண்டு பேர்களாக இங்கும் அங்குமாக இருந்தனரே தவிர, ஜெர்மனியில் முப்பதுக்களில் இருந்த பஹௌஸ் ஸ்கூல் போலவோ, இங்கிலாந்தில் இருந்த ப்ளூம்ஸ்பரி போலவோ, ·ப்ரான்ஸில் அபாலினேரைச் சுற்றி இருந்த, அவர் இயங்கி பாதித்த சூழல் போலவோ, ஒரு பெரும் குழுவாக, ஓவியர், கவிஞர்கள், சிந்தனையாளர், நாடகாசிரியர், அனைத்தினரையும் ஒருங்கிணைத்த சிந்தனை மையமாக இருக்கவில்லை. சுதந்திரப் போராட்ட காலத்தில், வங்காளத்தில் அது காணப்பட்டது. அறுபது எழுபதுகளில் பரோடாவை மையமாகக்கொண்ட குழு ஒன்று இயங்கியது. ஓவிய உலகில் பரோடா பள்ளியைச் சேர்ந்தவர்கள் கலகக் காரர்களாகக் கருதப்பட்டார்கள். அத்தகைய ஒன்று இங்கும் முளை விடுவதாக நான் அக்காலத்தில் எண்ணக் காரணம் எழுத்துவில் ஆரம்பித்தது, நடையில் உருப்பெற்று கசடதபறவிலும் தொடர்ந்தது தான். இப்போது எல்லாப் பத்திரிகைகளிலும் காணும் பல துறை விகாசம் எங்கு எப்போது ஆரம்பித்தது என்பது இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. தெரிந்தாலும் தெரிந்ததாகக் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் அவர்கள் தான் மூலவர்கள் என்று ஸ்தாபித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். தொடக்கத்திற்குப் போகவேண்டும்.
இந்த உறவுக்கும் பரஸ்பர அறிதலுக்கும் முக்கிய உத்வேகமாக இருந்தது ஆதிமூலம் தான். அவர் பெயரே சொல்வது போல ஆதியும் அவர் தான். மூலமும் அவர்தான். ஒரு புள்ளி பிரபஞ்சமாக விரிந்து பூதாகரிப்பது நமக்கு அன்னியமான ஒரு விஷயமில்லை. நம் மரபில் சிந்தனையில் ஊறிய விஷயம். அறுபதுகளின் இடைப்பட்ட வருஷங்களிலிருந்துதான், என் நினைவில், தமிழ் ஒவியர்களின் சித்திர கண்காட்சிகளை கூட்டாகவோ தனித்தோ பார்த்து வந்திருக்கிறேன். தில்லியில், ரவீந்திர பவனின் லலித் கலா அகாடமி ஓவியக் கூடத்தில். ஆதிமூலத்தின் கோட்டுச் சித்திரங்கள் இருந்தன. அவரோடு காட்சிக்கு வந்திருந்தவர்கள் என இப்போது என் நினைவுக்கு வருபவர்கள் என எஸ், என் வெங்கடராமன், வரதராஜன் இருவரைத்தான் சொல்ல முடிகிறது. பெயர்கள் தான். சித்திரங்களை நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. ஆனால் ஆதிமூலமும் அவரது சித்திரங்களும் நினைவுக்கு வரக் காரணம் அவர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்ததும், பின் வருடங்களில் அவருடனான தொடர்பும் பரஸ்பர உறவும் இலக்கிய உலகிலும் விஸ்தரித்தது காரணமாக இருக்கலாம்.
அப்போதெல்லாம் தில்லியில், - நான் அக்காலத் தில்லியைப் பற்றித்தான் பேசமுடியும், - தெற்கிலிருந்து வரும் ஓவியர், சிற்பிகளைப் பற்றி அங்கு அதிகம் பேசப்படுவதில்லை. கொஞ்சம் பிந்தங்கியவர்கள் என்று அவர்களுக்கு மூக்கு வானத்தை நோக்கி உயரும். அவர்கள் கால்கள் இங்கு நிலத்தில் பாவியதில்லை. ஐரோப்பிய தாக்கம் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் உடையிலும் அதிகம் அவர்களுக்கு. ஸ·பாரி சூட்டும் உதட்டில் பைப்பும் ஓவியர் என்ற சீருடையை ஸ்தாபிக்கும். ஆனால் சென்னை ஓவியக் கல்லூரியிலிருந்து வந்தவர்கள் தம் மரபையும் மண்ணையும் விட்டு தம்மை அறுத்துக் கொள்ளாதவர்கள். அதற்கு அவர்கள் பள்ளியில் ஒரு ராய் சௌதுரியும் பணிக்கரும் இருந்தது காரணமாக இருக்கலாம்.
இதையெல்லாம் உடைத்து தன்னை ஸ்தாபித்துக் கொண்டவர் ஆதிமூலம். அவரது பலம் அந்நாட்களில் அவரது கோட்டுச் சித்திரங்களின் பலம் தான். அவரது திறனை இனங்கண்டு, மகிழ்ந்து, ஓவியக் கல்லூரியிலும் சேர்த்து ஆதிமூலத்தின் ஒவிய வாழ்க்கக்கு வழிகாடியாக இருந்த தனபாலே, அவரது சிஷ்யனைப் பற்றி, கிட்டத்தட்ட இந்தமாதிரி வார்த்தைகளில், சொல்கிறார். நினைவிலிருந்து எழுதுகிறேன். "நான் ஆதிக்குக் கற்றுக்கொடுத்தது ஒரு திசை காட்டலே. வழி காட்டியதும் அவன் ஐரோப்பிய மேதைகளுக்கு இணையாக கோடுகள் வரைவதில் வல்லவன். பாடத் தெரிந்து விட்டால் ராக ஆலாபனையில் தன் கற்பனையில் சொல்லிக்கொடுக்காததையும் தன்னை அறியாது பாடிவிடமுடிகிறதல்லவா?" ஒரு தனபாலிடமிருந்து இது ஒரு சிஷ்யனுக்குக் கிடைக்கிறது. இந்த சிஷ்யன் ஒரு கீராம்பூர் கிராமத்தில் பிறந்து கோவில் சுவர் சித்திரங்களியும் சுட்ட மண் சிற்பங்களையும் பார்த்து வளர்ந்தவன். "நான் ஒன்றும் அறிவு ஜீவியில்லை. நான் கற்றது சித்தாந்தங்களைப் படித்து அல்ல. படைப்புகளைப் பார்த்து." என்று சொல்வார் ஆதிமூலம். இது வெற்றுத் தன்னடக்கம் இல்லை. தன்னை அறிந்த முழுமை. பந்தா இல்லாத, மூக்கு வானத்தை நோக்காத முழுமை. கீராம்பூர் கிராமத்தில் விளைந்தது லண்டனுக்கும் செல்லும் என்ற தன்னம்பிக்கையின் பிறந்த முழுமை.
இந்த எளிமையும் உண்மையும் தான் அவரை இன்றைய தமிழ்க் கூட்டத்தில் தனித்து உயர்ந்து நிற்கும் மனிதராகக் காட்டுகிறது. அவர் தன்னைச் சுற்றியோ தன் தலைக்குப் பின்னோ ஒரு ஒளி வட்டம் பிரகாசிப்பதாக எண்ணியதில்லை. ஆரம்ப காலத்திலும் சரி, கடைசி வருடங்களில் அவர் படைப்புகள் வேறு எந்த தென்னிந்தியருக்கும் கிட்டாத அளவிற்கு வியாபார வெற்றியடைந்த போதும் சரி. நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது சில வருடங்கள் முன்பு தான். பேசியது தொலை பேசியில் ஒரு வருடம் முன்(ஜனவரி 1907). தில்லி லலித் அகாடமி கண்காட்சி ஹாலில்(1960களின் பின் பாதி) பார்த்துப் பேசிய அதே ஆதி மூலம் தான். இப்போது கொஞ்சம் நெருக்கமும் பரஸ்பர புரிதலும் அதிகம். முதல் சந்திப்பில் அவர் என்னை யாரென்று அறிந்திருப்பாரோ என்னவோ. ஆனால், அடுத்த சந்திப்பு(1973) சென்னை மௌபரீஸ் ரோடில் என்று நினைக்கிறேன். அப்போது அந்தப் பெயரில்தான் அந்த ரோடு இருந்தது. நான் தங்கியிருந்த உறவினர் வீட்டு வாசலில் தற்செயலாக. "அட இங்கு வந்திருக்கி றீர்களா?எவ்வளவு நாட்கள் இருப்பீர்கள்? வாருங்களேன் சாவகாசமாக பேசலாம். இடம் தெரியாதா? சச்சிக்குத் தெரியுமே. அவரோடு வாருங்கள்" எல்லாம் விசாரித்து, கேட்டு அவரே பதில்களும் பிரச்சினைகளுக்குத் தீர்வும் சொல்லியாயிற்று. போனோம் நானும் சச்சிதானந்தமும். நான் இருக்குமிடத்திற்கு நாங்கள் இருவரும் நடந்தே திரும்பினோம். எழும்பூர் Weavers" Centre, -லிருந்து தியாகராய நகர் திருமலைப் பிள்ளை ரோடில் சச்சி எனக்குத் தங்க ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு. தில்லி ரவீந்திர பவன் புல்வெளியில், தில்லி ப்ரெஸ் க்ளப்பில், அவர் ஒரு காலத்தில் இருந்த அடையாறு வீட்டின் முதல் தளத்தில். ஓவ்வொரு முறையும் நிறைய பேச்சும் அவர் வரைந்திருந்த ஓவியங்களைப் பார்ப்பதுமாக பொழுதுகள் போகும். சென்னை வந்த பிறகு நண்பர்களின் வீட்டுக் கல்யாணங்களில். பூந்தமல்லி ஹை ரோடு ஹோட்டலில்(ஹோட்டல் எவரெஸ்டா? நினைவில் இல்லை) முத்துக் கோயா, பிரபஞ்சன், பாஸ்கரனோடு. என் புத்தகங்களுக்கு வரைந்து கொடுத்தது, நான் நேரில் கேட்டு அல்ல. செல்லப்பாவோ, சச்சிதானந்தமோ அல்லது வேறு யாருமோ கேட்டு. ஒரு முன்னனணி ஓவியரைக் கேட்பது போல அல்ல. ஒரு நண்பரிடம் ஏதோ ஒரு வேலையை நமக்காகச் செய்யச் சொல்வது போல. ஒரு பந்தாவும் இல்லாத மனிதர். இதனால் அவர் பெற்றது ஏதும் கிடையாது. வியாபாரக் கணக்கில் ஒரு பைசா வரவில்லாத விஷயம். இது அறுபதுகளில் இருந்து தொடங்கி இறுதி மூச்சு வரை தொடர்ந்தது. அந்தக் காலத்தில் நடை பத்திரிகைக்கு அவரிடம் கேட்ட போது, அதனால் விளம்பரமும் கிடையாது. பண வருவாயும் கிடையாது. பிரக்ஞையுள்ள ஒரு சிறு வட்டத்திற்குள் ஒரு சலனத்தை, ஒரு பரிச்சயத்தை, ஒரு தெரிவை ஏற்படுத்துவது என்பதே நோக்கம். அவ்வளவே. அவரைத் தொடர்ந்து எண்ணற்ற பலரும் அதற்கு முன் வந்தனர். 1961-ல் எழுத்து பத்திரிகையில் ஒரு சிந்தனை வெளிப்பாடாகத் தொடங்கியது, பின் வருடங்களில் படிப்படியாக சின்ன முயற்சிகளாக இன்னும் பலர் சேர்ந்து செயல்பட்டது, இன்று ஒரு பகுதி சமூகத்தின் ஒட்டு மொத்த செயல்பாடாக வளர்ந்து பெருகியுள்ளது. கலை உணர்வு வளர்ந்துள்ளது, ஆழம் பெற்றுள்ளது என்று சொல்ல மாட்டேன். தெரிந்தும், பல இடங்களில் தெரியாமலும் அதன் மதிப்பு உயர்ந்துள்ளது. "இதென்னங்க ஒரே கிறுக்கலா இருக்கு. இதெல்லாம் அட்டையிலே போட்டா யார் வாங்குவாங்க? என்ற நிலையிலிருந்து, "இதெல்லாந்தாங்க இப்ப போடறாங்க, இதுக்கு ஒரு மதிப்பு இருக்குங்க," என்று அடுத்த பத்து பதினைந்து வருடங்களில் மாறி, இப்போது, "ஆதிமூலத்துகிட்டே போயி நானே இந்த மூணு புத்தகத்துக்கும் வரைஞ்சி வாங்கிட்டு வந்திடறேங்க, அப்பத்தான் நல்லா இருக்கும்" என்று ஆவலோடு முதலாளியே சொல்லும் நிலக்கு வந்துள்ளது. தெரிவு மாத்திரமல்ல. அது ஒரு சிறு வட்டத்திற்குள் தான் சிறைபடும். ஆனால் snobbery நிறைந்த பலனைக் கொடுக்கும். பணம், செல்வாக்கு இத்யாதி. பாமரத்தனமான அலங்கோலமாக இருந்த புத்தக வெளியீட்டில் தனக்கே உரிய எளிமையைக் குணமாக்கினார் செல்லப்பா. அதற்கு தொழில் நுட்பத்தோடு கலை என்ற பரிமாணத்தையும் தரத் தொடங்கியது க்ரியா ராமகிருஷ்ணன். அதற்கும் அவருக்கு உதவியது ஆதிமூலம் தான். அந்த சிரமம் மிக்க, பலர் நகையாடிய ஆரம்பங்கள் இன்று எங்கு புத்தக வெளியீட்டுத் துறையை கொண்டு வைத்துள்ளது?
இது வேறு எங்கும் நடந்ததில்லை. நடந்திராது. புத்தகங்களுக்கு மாத்திரமில்லை. ஒவ்வொரு கான்வாஸ¥ம் பல பத்து லட்சங்களுக்கு விலை போகும், இன்று கடந்த முப்பது நாற்பது வருடங்களாக, ஆதி மூலம் தன் நண்பர்களுக்கு, அவ்வப்போது அன்புடன் கொடுத்துள்ளது எண்ணிக்கையில், அடங்காது. அவற்றின் பொருள் மதிப்பீட்டை அவரவர் யூகத்திற்கு விட்டு விடலாம்.. ஆனால் ஆதி மூலம் 70 களில் நான் பார்த்த ஆதி மூலம் தான்.
பல விஷயங்களை தமிழ்ச் சூழலின் சந்தர்ப்பத்தில் சொல்லத் தோன்று கிறது. "நான் அறிவு ஜீவி இல்லை. நான் படித்துக் கற்றுக்கொள்ளவில்லை. உலகக் கலைப் படைப்புக்களைப் பார்த்துக் கற்று வளர்ந்தவன்," என்று தன்னைப் பற்றிச் சொல்லும் ஆதிமூலத்தின் வளர்ச்சியை, அவர் படைப்புக்களின் அவ்வப்போதைய சீரான மாற்றங்களில் பார்க்கலாம். தமிழ் மண்ணும் இந்திய ஓவிய மரபும் கோடுகளின் ஆதாரத்தில் பிறந்தவை. ஆதிமூலம் தன் உள்ளார்ந்த திறமையைக் கண்டுணர்ந்தது, சிறு வயதில் தன் கிராமத்தில் கண்ட சுதைச் சிற்பங்களை, சுவர் ஓவியங்களைக் கண்டு. அவரது வரை கோட்டுத் திறன் தன் வளர்ச்சியில் ஐரோப்பிய மேதைகளுக்கு இணையானது என்று தனபாலையே சொல்ல வைத்துள்ளது. வடநாட்டில், நகரங்களில் கால் வைத்த போது பொதுவாகவே தென்னாட்டு படைப்புக்கள் வரைகோடு சார்ந்து, உருவார்த்த குணம் சார்ந்திருப்பதன் காரணத்தால் ஏளனமாகப் பார்க்கப்பட்டபோதிலும் அவர் தன்னை வழி மாற்றிக்கொள்ளவில்லை. விஷயம் என்னவென்றால், அவர்கள் எப்போதாவது தம் வரைகோட்டுத் திறனை வெளிக்காட்டு சந்தர்ப்பம் நேரும்போது பார்த்தால் அவர்களது பலவீனமும் வெளிப்படுவதைப் பார்த்திருக்கிறேன். வரைகோடுகளின் ராஜ்யத்தில் ஆதிமூலம் மன்னன். அவரது வரைகோட்டுச் சித்திரங்கள் தம்மில் முழுமை பெற்றவை. நாடகார்த்தம், வீரியம், கொடூரம், மிருக பலம், கவித்வம், மெல்லிய இழையோட்டம் ஆகிய எல்லா குணங்களையும் அவை காட்ட வல்லவை. அவை வெளியையும் வெளியை நிரப்பும் திடத்தன்மையும் வெளிக்காட்ட வல்லவை. இவ்வளவுக்கும் ஆதிமூலம் தன்னை தன் இயல்பான வளர்ச்சியில் கண்டவர் தான். வெகு வருடங்களுக்கு அவர் கோட்டுச் சித்திரங்களை விட்டு நகரவில்லை. சில சமயங்களில் வண்ணங்கள் வாங்க பொருள் வசதியின்மையால் தான் என்று சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இருந்தாலும், அது ஒரு குறையாக இருந்ததில்லை. அந்தப் புள்ளியிலிருந்து இன்று அவரது உருவத்தை க் கடந்த வண்ணவெளி என்று சொல்லத்தக்க ஓவியங்கள் வரை அந்த மாற்றத்தின் பாதையை படிப்படியாகப் பார்த்தோமானால், ஒரு மாற்றம் அதன் முந்திய நிலையின் அம்சங்களைக்கொண்டே பிறந்து வெளிப்பட்டுள்ளதைக் காணலாம். எதுவும் முந்தியதை அறவே மறுத்து ஒதுக்கி, புதிதாகப் பிறந்ததல்ல. இயல்பான வளர்ச்சியில் எந்த புதியதும் முற்றிலும் புதியதல்ல. எந்த பழையதும் முற்றிலும் பழையதுமல்ல. பழையதின் குணத்தைக் கொண்டிராத புதியதும் இல்லை. புதியதன் குணத்தைத் தன்னுள் கொண்டிராத பழையதும் ஏதும் இல்லை. ஆதிமூலத்தின் 40 வருட கால ஓவிய வாழ்க்கையே அவரது தன்னின் மலர்ச்சிதான்.
எவ்வெத்துறையிலோ சிற்பிகளை, ஓவியர்களை, கலைஞர்களை நாம் தமிழ் நாட்டில் விருது அளித்து, ஆடிக் கொண்டாடி முடிசூட்டிக் கொண்டாடி வருகிறோம். ஓவியத்துறையில் நாம் பெற்றுள்ள ஒரு தலைசிறந்த கலைஞரை, நாம் கலைஞராக காணவும் இல்லை. ஒரு கட்டத்தில் நாம் விருது பெறாத, ஏதோ ஒன்றிற்கு சிற்பியோ மன்னனோ, அரசோ இல்லாத ஒரு தமிழனைக் காண்பது சிரமமாக இருக்கும் போலிருக்கிறது. ஆனால் ஒரு கலைமாமணியாகக் கூட ஆதிமூலத்தை நாம் காணவில்லை. உண்மையில் பார்க்கப் போனால், அரசியல் சார்பு இருந்தால் ஒழிய ஓவியர்களும் சிற்பிகளும் தமிழ் நாட்டு அரசுகளுக்கு பெருமைப் படும் ஜீவன்களாகத் தெரியவில்லை. ஆனால் எனக்குத் தோன்றுகிறது. அரசும் வாணிகமும், அரசியலும் இதில் தலையிடாதது நல்லதாகத்தான் இருந்திருக்கிறது. இல்லையெனில் சினிமாவிலும் (இது தான் தமிழ் நாட்டுக் கலை) நாடகத்திலும், இலக்கியத்திலும் நேர்ந்த பாமரத்தனமான விளைவுகளை ஓவிய சிற்ப உலகிலும் கண்டிருப்போம். எல்லாத் துறைகளிலும் இது போன்று அரசிடமிருந்தும், அரசியல் வாதிகளிடமிருந்தும் ஒரு காருண்யமிகுந்த அலட்சியம் (benign neglect) இருந்திருந்தால் எத்தனையோ பேரரசுகள், மன்னர்கள், திலகங்களிடமிருந்து தமிழ் நாடு தப்பிப் பிழைத்திருக்கும்.
ஆனால், ஆதிமூலம் இது பற்றியெல்லாம் கவலைப்பட்டவரில்லை. அது பற்றிய சிந்தனையே அவருக்கு இருந்ததில்லை. ஒரு கட்டத்தில் திருக்குறள் ஒன்றிற்கு அவர் ஏன் ஓவியம் வரைந்து கொடுத்தார் என்று நான் எண்ணியதுண்டு. அவர் அதை அமைதியாக மறுத்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. அந்த கலவரத்தை அவர் விரும்பாத காரணத்தால் தான் அவர் இயல்புக்கு விரோதமான ஒன்றைச் செய்தார் என்றும் தோன்றிற்று. அவர் பந்தா அற்றவர் மட்டும் அல்ல. அமைதியானவர். அமைதியாக, தன் இயல்புக்கான செயல்களைச் செய்து வாழ்ந்தவர். யாரிடமும் அவர் கோபம் கொண்டதாக, எது பற்றியும் அவர் சீற்றம் கொண்டதாக செய்தியில்லை. நான் தில்லியில் இருந்த காலத்தில் அவர் மத்திய லலித் கலா அகாடமிக்கான் சில பொறுப்புகளை வகித்ததுண்டு. அது அவரை வந்தடைந்தது அபூர்வமே. வட இந்தியர்கள் அவ்வளவு சுலபமாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அப்போதெல்லாம் அவர் அலட்சியத்துடன் ஒதுக்கப்பட்டு வந்த தென்னிந்திய ஓவியர்கள் சிற்பிகளை கவனத்தில் கொண்டு வர முயன்ற காரணத்தாலே வட இந்தியர்களிடையே சச்சரவுக்காளானார் என்று தெரிந்தது. எது பற்றியும் அவருக்குக் கவலை இல்லை. எந்த பதவியையும் பரிசையும், விருதையும், கௌரவத்தையும் அவர் நாடிச் சென்றதில்லை. அவர் அடைந்த வெற்றிகள் அவர் படைப்புகளுக்குக் கிடைத்த வெற்றி. அவர் படைப்புகள் அவரது ஆளுமையின் வெளிப்பாடுகள். வியாபார வெற்றி அவரை வந்தடைந்ததே தவிர அதை நாடி அவர் தன் படைப்பின் அதற்கான வழிமுறைகளைத் தேடியவரில்லை. இப்படி இந்திய பரப்பளவில் எத்தனை கலைஞர்களைப் பற்றிச் சொல்லமுடியும் என்று தெரியவில்லை.
ஒரு புள்ளிதான் தன் விகசிப்பில் பிரபஞ்ச பரிமாணம் பெறுகிறது என்றேன். தன் சிறுவயது கீராம்பூர் கோவிலும் அதன் சுவர் ஓவியங்களும், சுதைச் சிற்பங்களும், கிராமக் காட்சிகளும் மக்களும் என்று தொடங்கி சென்னை கலைக் கல்லூரி வாழ்க்கையின் காட்சிகளும் மனிதர்களும் (ராமானுஜம்), தான் வியந்த பிக்காசோக்களும், செகாலும், காந்தியும், மகாராஜாக்களும் என்று கடந்து, விரிந்த வெளியும் அதில் மிதக்கும் உருவங்களும் என அந்தப் புள்ளிதான் இப்படி பரிமாணம் பெற்றுள்ளது.
ஆதி மூலம் நிறைய படைப்புகளை, ஓவியக் கூடங்களில், வணிக நிறுவனங்களில், தனி நபர்களிடம், இந்திய, அன்னிய நாட்டு கலைக்கூடங்களில் விட்டுச் சென்றிருக்கிறார். அவை மொத்தமும் தமிழரின் கலைத் திறனுக்கு அடையாளமாக இருக்கும். அவ்வாறு கருதப்படும் ஒரு காலம் வரும். பிக்காஸோ ஸ்பெயினுக்கும் வான் கோ டச்சுக்கும் அடையாளமாகியிருப்பதைப் போல.
வெங்கட் சாமிநாதன்/17.1.08

Thursday, February 14, 2008

வாலெண்டைனும் தமிழ்க் காதலும்


காதலர் தினம் என்று சொல்கிறார்கள் இம்மாதம் 14-ம் தேதி. இளவட்டங்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் தம் காதலைப் பரிமாறிக்கொள்வார்கள். பரிசுகள் கொடுத்து. காதல் செய்திகள் சொல்லி. தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புது வருட வாழ்த்துக்கள் போல இன்னுமொன்று சேர்ந்துள்ளது. மற்றவை சம்பிரதாயமாக ஆகிவிட்ட, பழகி விட்ட கட்டத்தில், காதலர் தினக் கொண்டாட்டங்கள், பரிசுகள், வாழ்த்துக்கள் அதிகம் பரவசம் தருவதாக, கொஞ்சம் அதிக இரைச்சலுடனேயே, அதிக அலட்டல்களுடனேயே காணப்படுவதாகத் தோன்றுகிறது.


இதென்ன காதலர் தினம்? சில வருஷங்களாகத் தான் இது பற்றிக் கேள்விப்பட்டு வருகிறோம். ஏன் சில வருஷங்களாக? காதலோ, காதலர்களோ நமக்கோ, நம் வாழ்க்கைக்கோ அன்னியமானதா என்ன? அல்ல. ஆனால் காதலர் தினம் என ஒரு நாள் கொண்டாடுவதும் அதைக் கொண்டாடும் முறையும் தான் புதிதாக நமக்கு அறிமுகமானது. நான் இதைக் கேள்விபடத்தொடங்கியது, சிவசேனைக் காரர்கள் இதை எதிர்த்து அவர்கள் வழியில் ரகளை செய்து அது செய்தித் தாட்களில் கொட்டை எழுத்துக்களில் இடம் பெற்று நம்மைத் தாக்கியபோது. எனக்கு அப்போது சிவ சேனையின் எதிர்ப்பு உடன்பாடான ஒன்றாகத் தான் இருந்தது. ஆனால், அவர்கள் தம் எதிர்ப்பைக் காட்டக் கையாண்ட வழி எனக்குச் சம்மதமாக இருக்கவில்லை. சிவ சேனைக்காரர்களின் வழிமுறை நம் ஊர் கட்சிகள் சிலவற்றின் நடைமுறை போல ஒரு அடாவடித்தனமான ஒன்றாக இருந்தது. பல விஷயங்களில் அவர்கள் அடிப்படையான பல நல்ல காரணங்களை வைத்துக்கொண்டு ·பாசிச நடைமுறைகளைக் கையாள்கிறார்கள். நம்மூர் கட்சிகள் மோசமான காரணங்களுக்காக மோசமான நடைமுறைகளைக் கையாள்பவர்கள்.


போகட்டும். காதலர் தினம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வருகை, ஒரு வேற்று நாட்டு இறக்குமதி. இதை இறக்குமதி செய்து தான் ஆகவேண்டும் என்ற ஒன்று அல்ல. காதலர்கள் தமக்குள் செய்தி பரிமாறிக்கொள்வது என்பது எந்த நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்து பெற வேண்டியதில்லை.
ஹாலாவின் காதா சப்த சதியில், தலைவி தன் காதலனுக்கு செய்தி அனுப்புகிறாள், எங்கு சந்திப்பது என்று இடம் குறித்து:


ஆடாது அசையாது அதோபார தாமரை இலைமேல அமர்ந்தே இருக்கும் கொக்குகள் மரகதத் தட்டில் மன்னிய வெண்சங்கிப்பி போல இலங்குமன்றே


நமக்குத் தெரிந்த அகப்பாடல்கள் போல, இங்கு தலைவி யார் தலைவன் யார் என்று தெளிவு படுத்தப் படாதது போல சந்திக்கும் இடமும் குறிப்புணர்த்தப் படுகிறது. இதற்கு அவரவர் மனப்போக்குப் படி பொருள் கூறிக்கொள்வதற்கு சாத்தியம் உண்டு.

" இது அமைதியான இடம், யாரும் வருவார் போவார் இல்லை. இங்கு சந்திக்கலாம் " என்று சொல்வதாகவும் இருக்கலாம். அல்லது.

'" இங்கு வந்து சந்திப்பதாகச் சொன்னாயே, நீ வந்ததாகத் தெரியவில்லையே, வந்திருந்தால் இந்த இடம் இவ்வளவு அமைதியாக இருக்குமா என்ன? அல்லது கொக்குகள் தான் ஆபத்தின்றி இவ்வாறு அமர்ந்திருக்குமா தாமரை இலைமேல்?"

அதுவல்ல விஷயம். ஹாலாவின் காதா சப்த சதி போலவே, நம் அகப்பாடல்கள் அனைத்தும் இவ்வாறான குறிப்புணர்த்தலாகவே அமைந்துள்ளன. காதல் வாழ்க்கை, ரகசியமாக செய்தி அனுப்புதல், சந்தித்தல் எல்லாமே நமக்குத் தெரிந்து சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வந்துள்ளது. கள்ளக் காதல் செய்தி கூட ஒரு அழகுடன் தான் சொல்லப்பட்டு வந்துள்ளது.


"இங்கு தான் என் மாமியாரும் மாமனாரும் பாவம் வயதானவர்கள் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். வேலைக்காரியும் தான். அவளுக்கு வேலை செய்த களைப்பு.. கணவனோ ஊரில் இல்லை. ஆனால் நானோ என் தனிமையில் உறக்கமின்றிப் தவித்துக் கிடக்கிறேன்."


இங்கு சொல்லப்படும் செய்தி, தாராளமாக நீ வரலாம். ஒரு பயமும் இல்லை. இது சமஸ்க்ருத சுபாஷிதானி யிலிருந்து.


இந்த காதலும் காமமும் தான், அதன் பல நூற்றாண்டு கால வளத்தில், பின் பக்திப் பாடல்களுக்கு வழி வகுத்தன. பக்தியில் கூட, பக்தனாக மாத்திரம் அல்ல. திருமங்கை ஆழ்வார் தன்னை பெருமாளிடம் கொண்ட காதலில் உருகும் மங்கையாகவே வரித்துக் கொண்டு விடுகிறார். அது ஒரு கோடி. இது ஒரு கோடி பக்தியில் கூட. இத்தகைய இலக்கிய பரிணாமம் காதல் பெற்றது என்றால், அது எத்தகைய தளத்தில் பேசப்பட்டு எழுதப்பட்டு வந்துள்ளது என்பது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தமிழ் இலக்கிய தந்த பக்தி உணர்வு ஒரு இயக்கமாக பரிணாமம் பெற்று எல்லாக் கலைகளும் பெற்ற மறு மலர்ச்சிக்கு இட்டுச் சென்றது. தமிழ் நாட்டில் மட்டுமல்ல. இந்திய துணைக்கண்டம் முழுதுக்குமே.


ஆக நமக்கு இது வேண்டாப் பொருள் அல்ல. நம் வாழ்க்கைக்கு அன்னியமான ஒன்றுமல்ல. அதனதன் தளத்தில் அவை மனித உன்னதத்திற்கு இட்டுச் செல்கின்றன.


இதற்கும் இங்கு இப்போது ஒரு ·பாஷனாக வருகை தந்துள்ள காதலர் தினத்திற்கும் இடையே உள்ள தூரம் மிக அதிகம். நம் மண்ணிலிருந்து பெறாதது எதுவும், ·பாஷனாகக் கொள்ளப்பட்டது எதுவும், கொச்சைப்பட்டுத் தான் போகிறது. நமது கிராமீயப் பாடல்களும் நடனங்களும் எவ்வளவு கொச்சைப் படுத்தப்பட்டுள்ளன! அவற்றின் பெயரைச் சொல்லி, 24 மணி நேரமும் 38 தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் 'சாங்' என்று சொல்லி, 'டான்ஸ்' என்று சொல்லி கொச்சைப் படுத்தலின் தீவிரம், இரைச்சல், அவற்றின் விஸ்தாரம், நேரம் எல்லாமே அவற்றிலிருந்து தப்புவது இயலாத ஒன்றாக வே ஆகியுள்ளது. இவற்றிற்கு சமூகம், அரசு, மக்கள் பிராபல்யம், பணபலம் எல்லாமே அங்கீகாரம் தந்துள்ளன. இவை தான் கலை என்றே ஆகியுள்ளது. இவ்வளவு பிரம்மாண்ட ராக்ஷத்தன ஆக்கிரமிப்பு பெற்றுள்ள இவை எதுவும் தமிழ் மண்ணின் பிறப்பல்ல. பாப் இரைச்சல் இசை என்று பெயர் பெறுவது போல, 'ரெண்டக்கா, ரெண்டக்கா' நாட்டுப் புற நடனம் என்று பெயர் பெறுவது போல எந்த ஆபாச இரைச்சலுக்கும் கொச்சைப்படுத்தலுக்கும் அங்கீகாரம் தர ஒரு தமிழ் பெயர், மரபு, வரலாறு, வாழ்க்கை அம்சம் கட்டாயம் முன்னிறுத்தப்படும். ஆனால் சொல்லப்படும் பெயருக்கும் நடைமுறைக்கும் எந்த சம்பந்தமும் இராது. அவற்றறை உள்ளீடற்றவையாக போலியாகத் தான் நாம் ஆக்கிக்கொள்கிறோம். எதனது சாரமும் நம் உணர்வுகளுக்கு ஏற்றவையாக இருப்பதில்லை.


அது போல் தான் இந்த காதலர் தின சமாச்சாரமும். எங்கிருந்தோ இறக்குமதியானது இது. அதன் வரலாறு பார்க்கப் போனால் மிக தொன்மையானது. ஆரம்பத்தில் ரோமானியர்களிடையே அது ஒரு அறுவடைத் திருவிழாவாக இருந்தது. நம் தைப் பொங்கல் ்போல, அஸ்ஸாமின் பிஹூ போல, வடக்கே பஞ்சாபில் பைசாகி போல, எங்கு தான் இல்லை. ஆடு மேய்ப்பவர்கள், தம் மந்தையை ஓநாய்களிடமிருந்து காப்பதற்காக லூபர்கஸ் தெய்வத்தை வணங்கி லூபர்காலியா என்ற விழாக் கொண்டாடினராம். அவ்விழாவில் இன்னொரு கொண்டாட்டமும் இருந்ததாம். ஒரு பானையில் இளம் பெண்கள் பெயர்களை சீட்டில் எழுதிப் போட்டு, எந்த வாலிபனுக்கு எந்தப் பெண்ணின் சீட்டு கிடைக்கிறதோ அந்த பெண்ணுடன் அந்த இரவு கழியுமாம். (எப்படியோ இந்த விளையாட்டு நாடு கண்டங்கள், நூற்றாண்டுகள் தாண்டி, நம் ஊர் பெரிய பணக்கார குடும்பங்களின் களியாட்டங்களில் இம்மாதிரியான பகிர்வு விளையாட்டு இன்று இங்கு பதியன் பெற்றுள்ளது. நான் கேள்விப்பட்டது, துண்டுச் சீட்டுக்குப் பதில் ப்ரா-க்கள் போடப்பட்டிருக்குமாம். யாருடைய ப்ரா என்பதை பெண்ணே அடையாளம் காட்டித் தருவாளாம். ஆனால் இது ஐந்தாம் நூற்றாண்டில் கிறிஸ்து மதச் சடங்காகி, புனிதர் வாலெண்டைன் பெயரில், அந்நாளைய போப்பால் உருமாற்றம் பெற்றது. இதிலும் ஒரு சிக்கல். வாலெண்டைன் எந்த வாலெண்டைன் என்பது ஒரு பிரச்சினை. நம்மூரில் எந்த அவ்வையார், என்ற பிரச்சினை இருப்பது போல. மூன்றாம் நூற்றாண்டில் புனித வாலெண்டைன் என்ற பாதிரியார் அன்றைய ரோமானிய அரசன் க்ளாடியஸின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டு விட்டதால் சிறையில் தள்ளப்பட்டான். ஆனால் சிறையிலும் புனிதர் சும்மா இருக்கவில்லை. அரசனின் மகளின் ஆசைக்காளாகி விடவே, வாலெண்டைனைக் கொல்வதைத் தவிர வேறு வழி அரசன் க்ளாடியஸ¤க்கு இருக்கவில்லை. சாகும் முன் வாலெண்டைன் தன் காதலிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி விட்டுத் தான் சாகிறார். அன்றிலிருந்து தான் வாலெண்டைன் கிறிஸ்துவ சமூகத்தின் மன்மதனாக உரு மாற்றம் பெறுகிறார். கி.பி. 496-ல் இருந்த போப் பிப்ரவரி 14-ஐ வாலெண்டைன் தினமாக அறிவிக்கிறார்.

வாலெண்டைன் தினத்தன்று பரிசுகள் தருவதும், காதல் கடிதம் எழுதுவதும் தொடங்கியதன் வரலாறு இதென்று தெரிகிறது. இது பின் வரும் நூற்றாண்டுகளில் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கும் பரவியது. இங்கு இந்தியாவில் நாம் இங்கிலாந்தின் காலனியாக அரசியல் அடிமைப்பட்டுக் கிடந்த போது இது இங்கு பரவியதாகத் தெரியவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்று வெகு காலம் பிந்தித் தான், கலாச்சார அடிமைத் தனத்தின் ஒரு அங்கமாக இது நம்மைப் பீடித்துள்ளது.


டிஸ்கோ டான்ஸ் மாதிரி, பாப் இசை, பாப் நடனம் மாதிரி, இதுவும் ஒன்று கொஞ்சம் தாமதமாகவே வந்து சேர்ந்துள்ளது என்று தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு செய்தி ஒன்று தொலைக் காட்சியில் தரப்பட்டது. சென்னையில் ஆங்காங்கே முளைத்துள்ள மேற்கத்திய டான்ஸ் ஸ்கூல்கள். என்னமோ ஜிம்னாஸ்டிக்ஸ் மாதிரி, கையைக் காலை ஆட்டி அகட்டி, போலிஸ் ட்றில் மாதிரி இடது வலது பக்கம் திரும்பி என்னென்னமோ தேகப் பயிற்சி செய்கிறார்கள். என்ன சமாச்சாரம் என்று விசாரித்தால், இவர்கள் எல்லாம் பெரும்பாலும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். பணம் நிறைய கிடைக்கிறது. நாள் பூராவும் வேலை செய்து சிறிது ஓய்வுக்கு இரவில் பார்ட்டிக்குப் போனால் அங்கு டான்ஸ் செய்ய வேண்டியிருக்கிறது. டான்ஸ் தெரியாவிட்டால் இளப்பமாகப் போகிறது. ஆகவே, பணம் எவ்வளவு செலவானாலும் டான்ஸ் கற்றுக்கொண்டால், இரவு பார்டிகளில் சோபிக்கலாம். இப்படித்தான் நம்மண்ணில் பதியன் பெறுவது எதுவும் தொடங்குகிறது. 60 களிலிருந்து பீட்டில்ஸ், ராக் இசை, டான்ஸ், எல்விஸ் பெஸ்லி, மைக்கேல் ஜாக்ஸன், மதோனா என்று வந்து இப்போது ஒரு நாற்பது பேர் கூட்டமாக காக்கா வலிப்பு வந்து அவஸ்தைப் படுவது போல் குத்தாட்டம் போடாவிட்டால், நம்ம ஹீரோவும் ஹீரோயினும் காதல் பண்ணுகிறார்கள் என்பதை ரசிகர்களுக்குப் புரிய வைப்பது சிரமமாகிப் போயுள்ளது. தமிழ் இசை, தொன்று தொட்டு வந்துள்ள பழமை மரபு தமிழ் கலாச்சாரம், பண்பாடு என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டே, 'மான் ஆட மயிலாட', 'ஆட்டமும் பாட்டமும்', 'டான்ஸ் மச்சி, டான்ஸ்' என்று வெவேறு தலைப்புகளில் ஒவ்வொரு தொலைக் காட்சியிலும் என்னேரமும் ஒரு குத்தாட்டம் இன்றியமையாததாகிறது. இந்த அரசும், "நாங்கள் தரமான பொழுது போக்கும்,. கல்வியும் குடிசை வாழ் ஏழை மக்களுக்கு வழங்கவே இலவச கலர் டிவி கொடுப்பதுடன், கேபிள் இணைப்பையும் அரசே மேற்கொள்ள இருக்கிறோம்" என்று சொல்கிறது. இது மக்களாட்சிக் காலம் இல்லையா? இது தமிழர்களுக்கு பொற்காலம் என்றும் மறுமலர்ச்சிக்காலம் என்றும் பெரியவர்கள் சொல்கிறார்கள்


இன்றைய தகவல் தொழில் நுடப பொறியாளர் களுக்கு இரவு கேளிக்கையில் டான்ஸ் எப்படி புகுந்து கொண்டதோ அப்படித்தான் படித்த இளைஞர் சமுதாயத்திற்கு வாலெண்டைன் என்ற மன்மதன் காதல் தெய்வமாகிப் போனார். குடிசை வாழ் ஏழை மக்கள் என்ன பாவம் செய்தார்கள் அவர்களிடமும் இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்று யார் சொல்லப் போகிறார்களோ, தெரியாது.


வெங்கட் சாமிநாதன்/11.2.08

Tuesday, February 05, 2008

வந்து போகும் சுதந்திர தினங்களும் குடியரசு விழாக்களும்




சுதந்திர தினம் எப்போதும் போல் இந்த வருடமும் வரும். போகும். கொண்டாட இன்னுமொரு தினம் குடியரசு தினம். சுதந்திர தினத்தன்று பள்ளி விடுமுறை. ஆகவே கும்பகோணத்திலோ, பாணாதுறைப் பள்ளியிலோ எப்படி கொண்டாடினார்கள் என்பது தெரியாது. நான் கிராமத்தில் இருந்தேன். ஆனால் அதற்கு ஒரு நாள் முன் சுந்தரம் பிள்ளை என்ற ஆசிரியர், கதர் ஆடை தான் அணிந்திருப்பார், வெகு உணர்ச்சி வசப்பட்டு வரவிருக்கும் சுதந்திர தினத்தைப் பற்றிப் பேசினார். எனக்கு எங்கள் பள்ளியிலேயே அவர் ஒரு பெரிய மகான். சாதாரண வாத்தியார் இல்லை. சரித்திரப் பாடம் தான் எடுப்பார். அவர் பேசுவதையே வகுப்பில் கேட்டுக்கொண்டு இருப்பேன். சரித்திரப் புத்தகத்தை பரிஷைக்கு முதல் நாளன்று தொட்டதைத் தவிர, பிரித்துப் பார்த்ததாக நினைவில் இல்லை. ஆனால் பள்ளிக்கூட நூலகத்திலிருந்து எடுத்துப் படித்த புத்தகங்கள் பாடத்தை மீறியவை, . வ.ரா.வின் 'முஸ்த·பா கெமால் பாஷா, தமிழ் நாட்டுப் பெரியார்கள், சுபாஷ் சந்திர போஸின், 'இளைஞனின் கனவு' (மூல நூலின் பெயர் தெரியாது), நேருவின் 'அரசியல் நிர்ணய சபை' சொற்பொழிவுத் தொகுப்பு, பின் மேலக் காவேரிக்கு அடுத்த கொட்டையூரில் இருந்த நண்பனிடமிருந்து அவன் வீடு சென்று வாங்கி வந்த ஹிடலரின் 'எனது போராட்டம்' கோலாலம்பூரில் பிரசுரமானது, இப்படி. ஆனாலும், புத்தகத்தைப் படிக்காமலேயே சரித்திரத்தில் நல்ல மார்க் எடுத்திருந்தேன். நடுக்கிணற்றில் விழாமல் தடுப்புச் சுவற்றில் கால் வைத்துப் பிழைத்தது ஆங்கிலத்தில் தான். போகட்டும் அதுவல்ல விஷயம். சுந்தரம் பிள்ளை எனக்கு மகானாகத் தோற்றம் அளித்த காரணம் பிழைப்புக்கான வாத்தியார் என்பதை மீறி மிக உயர்ந்த மனிதர் என்ற நினைப்பு எனக்கு. மற்றவர்கள் எல்லாம் நல்ல மனிதர்கள் அவ்வளவே. தமிழ் வாத்தியாரைத் தவிர.


இப்படித்தான் மாணவர்களான எங்கள் பிரக்ஞையும் மதிப்புகளும் இருந்தன. கதர் உடுத்தியவர்கள், காந்தி குல்லா வைத்தவர்கள் எல்லாம், தெரிந்தவர் தெரியாதவர், தெருவில் நடப்பவர் எல்லாம் எங்கள் கண்களுக்கு சாதாரண மனிதர்கள் இல்லை. தேவ புருஷர்கள். எங்களை ரக்ஷ¢க்க வந்தவர்கள். தூர நின்று அவர்களைப் பார்த்து பிரமித்து நிற்கலாம்.


எனக்கு வயது அப்போது பதினான்கு. மதுரையில் படித்துக் கொண்டிருந்தேன். சேதுபதி ஹைஸ்கூலில். பாரதி அங்கு கொஞ்ச காலம் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாராமே. அந்த பள்ளியில். சொன்னார்கள். பள்ளியின் பின் பக்கம் நாட்டு ஓடு வேய்ந்த ஒரு கூடாரத்தில் தான் என் வகுப்பு. வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது பாரதியை அந்த இடத்தில் கற்பனை செய்து கொள்வேன். இப்படித்தானா அவரும் பாடம் நடத்தியிருப்பார் என்று யோசித்துக் கொண்டு.

என்.எம்.ஆர். சுப்பராமன் மதுரையின் காங்கிரஸ் தலைவர். அவர் எங்கள் பள்ளிக்கு வந்து பேசினார். 1942-ம் வருடம் சேதுபதி ஹைஸ்கூல் முன் மாணவர் ஆர்ப்பாட்டம் நடந்ததாகச் சொன்னார்கள். ஒரு நாள் வைகைக்கு அந்தக் கரையில் தல்லாகுளம் தமுக்கம் மைதானத்தில் கூட்டம் நடக்கும், அருணா ஆஸ·ப் அலி வந்து பேசப்போகிறார் என்று சொன்னார்கள். அன்று முத்துராமலிங்கத் தேவரும் அந்தக் கூட்டத்தில் பேசுவார் என்று செய்தி. அருணா ஆச·ப் அலி எனக்கு ஒரு ஜான்ஸி ராணீயாகத் தோற்றம் அளித்தவர், அன்னாட்களில் என்பதையும் சேர்த்துச் சொல்லவேண்டும். காங்கிரஸில் இருந்தவரில்லை. ஜெயபிரகாஷ் நாராயணனின் சோஷலிஸ்ட் பார்ட்டியைச் சேர்ந்தவர். அவரும் ஜெயபிரகாஷ் நாராயணனும் ஹஸாரிபாக் ஜெயிலிலிருந்து சுவர் ஏறித் தப்பி ஓடியவர்கள். நாடு முழுதும் போலிஸ் தேடிக்கொண்டிருந்தனர். அவர்கள் பிடிபடவில்லை. கடைசியில் மகாத்மா காந்தி சரணடையச் சொன்னதன் பேரில் அவர்கள் தாமாகவே போலீஸிடம் சரணடைந்ததாகப் படித்திருந்தேன். கட்சியை மீறிய செல்வாக்கு காந்திக்கு இருந்தது. தல்லாகுளம் தமுக்கம் மைதானத்தில் பெருந்திரளாக மக்கள் கூடியிருந்தனர். அவர்களில் எத்தனை பேருக்கு அருணா ஆஸ·ப் அலியைத் தெரியும் என்பது சந்தேகமே. ஒரு வேளை முத்து ராம லிங்கத் தேவரும் வருவதாக இருந்ததே, அவருக்காகக் கூடிய கூட்டமாக இருக்கலாம். தேவர் இல்லை மேடையில். 'வந்துருவாருங்க, பாருங்க எப்படியாச்சும் வந்துருவார்" என்ற பேச்சுத் தான் கூட்டத்தில் கேட்டது. அருணா ஆஸ·ப் அலி பேசியது ஹிந்தியில். யாரோ தமிழில் மொழிபெயர்த்தார்கள். அவர் என்ன பேசினார், மொழிபெயர்த்தவர் என்ன சொன்னார் என்பதை யார் கேட்டார்கள். எனக்கு நினைவில் இல்லை. தேவரும் வரவில்லை. லேசாக ஆரம்பித்த தூறல் வலுப்பது போல் பட்டது. கூட்டல் கலையத் தொடங்கியது. அப்போது தான் அருணா ஆஸப் அலி கலையும் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார். "நாட்டின் சுதந்திரத்திற்காக் போலீஸிடம் தடியடி பெற்றோம். சிறைச் சாலை சென்றோம். எங்களில் எத்தனை குடும்பங்கள் தவிக்கின்றன. ஆனால் நீங்கள் இந்தத் தூறலைக் கண்டு ஓடுவீர்களா? பின் எப்படி சுதந்திரம் கிடைக்கும்?" என்று சொல்ல, அதை மொழி பெயர்த்தவர் தமிழில் சொல்ல, கலைந்து கொண்டிருந்த கூட்டம் நின்றது. அந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு சினிமா நடிகர், நடிகைகள் யாரும் வரவில்லை. தலைவர்களின் அடுக்கு மொழிச் சொற்பொழிவையும் அவர்கள் கேட்கவில்லை. ஏதோ மொழியில் பேசியதை தமிழில் யாரோ மொழிபெயர்க்கக் கேட்டிருந்தவர்கள் அவர்கள். அவர்களை உசுப்பிவிட சுதந்திரம் பற்றிய பேச்சு போதுமானதாக இருந்தது.


அதற்கு சில வருடங்கள் முன் மதுரைக்குப் போகும் மகாத்மா காந்தியை கொடை ரோடு ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி காந்தியைப் பார்க்கலாம் என்று நிலக் கோட்டை மட்டுமல்ல, சுற்று வட்டார பட்டி தொட்டிகள எல்லாம் காலியாயின. அன்று தலைவர்கள் மக்களுக்குக் கொடுத்தது ஏதும் இல்லை. ஏதோ சொல்ல முடியாத ஒரு பரவச உணர்வைத் தவிர.


இந்த நாட்களில் அறுபது வருடங்கள் கழித்து, உலகத் தமிழினதிற்கே தலைவராக இருந்தாலும், கூட்டம் கோடிக் கணக்கில் செலவழித்துத் தான் கூட்ட முடிகிறது. ஒவ்வொரு மாவட்டம் மாவட்டமாக ஆயிரக்கணக்கில் பேருந்துகள் நெல்லைக்குத் திருப்பிவிடவேண்டியிருக்கிறது, அரசு பலத்தைக் கொண்டு பயமுறுத்தி, லைஸன்ஸ் பறிபோய்விடும் என்று பயமுறுத்தி. அன்றைய கூட்டங்களில் உண்டியல் குலுக்கிக் கொண்டிருந்த காலம் போய், இன்று ஒவ்வொரு கடையாகச் சென்று பலவந்தமாக ஆயிரக் கணக்கில் கட்டாய வசூல் நடக்கிறது. ஒவ்வொரு வட்டமும் 25 லக்ஷம், முப்பது லக்ஷம் என்று வசூல் நிர்ணயிக்கப்படுகிறது. தலைவர்களின் புகழ் பாடி ராக்ஷஸ் பேனர்கள் ஊர் முழுதும் வைக்கப்பட வேண்டி யிருக்கிறது. எத்தனை கோடிக்கணக்கில் வசூல் செய்திருந்தாலும், அரசு மின்சாரத்தைத் திருடித்தான் ஊர் முழுக்க மாநாட்டுப் பந்தல் முழுக்க வண்ணமயமாக்க முடிகிறது. இலவச பஸ் வசதி, விருந்துச் சாப்பாடு, எல்லாம் கொடுத்தால் தான் மாநாட்டுப் பந்தலை நிரப்பமுடிகிறது. அதுவும் ஒவ்வொரு வட்டத்திற்கும் எவ்வளவு பத்தாயிரக்க்கணக்கில் ஆட்களை அழைத்து வரவேண்டும், எவ்வளவு வசூல் செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துத் தான் முடிசூட்டு விழாவை வெற்றிகரமாகக் கொண்டாடியதாக பெருமை பேசிக்கொள்ள முடிகிறது. இவ்வளவும் செய்து நிர்பந்தித்து வரவழைத்த கூட்டத்தைக் காட்டி தங்கள் கட்சியின் பலத்தைக் காட்டவேண்டியிருக்கிறது.


எழுபதுகளில் எம்.ஜி.ஆர். தேர்தலுக்கு நின்ற சமயம். நான் விடுமுறையில் கும்பகோணத்தில் இருந்தேன். என் கடைசித் தம்பி அப்போது எம்.ஜி.ஆர். பக்தன். எம்.ஜி.ஆர். ஊர் ஊராகத் தேர்தல் பிரசாரம் செய்துகொண்டிருந்தவர் வழியில் கும்பகோணத்திற்கும் வருவார், மாலை ஆறு மணி அளவில் என்று அவனுக்கு யாரோ சொல்லி யிருக்கிறார்கள். அவன் வீட்டை விட்டு நாலு மணிக்கே சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டான். இரண்டு மணிநேரமாவது முன்னால் போனால்தானே இடம் பிடிக்கலாம். எம்.ஜி.ஆர். ஒன்றும் குறித்த நேரத்திற்கு வரப்போவதில்லை. ஒரு மணி இரண்டு மணி நேரம் தாமதமாகலாம். பின் கூட்டம் கலைந்து அவன் வர ஒன்பது மணியாகலாம் என்று நினைத்துக் காத்திருந்தோம். அன்று இரவு பூராவும் அவன் திரும்பவில்லை. மறு நாள் காலை ஏழு மணிக்குத் தான் அவன் வீடு திரும்பினான். வீட்டில் அம்மா அப்பாவிடம் வசையெல்லாம் கேட்டு முடிந்த பிறகு, அவனை விசாரித்ததில், எம்.ஜி. ஆருக்காக இரவு முழுதும் அந்தக் கூட்டம் காத்திருந்ததாம். இதோ வந்துட்டார், இதோ வந்துட்டார் என்று. கடைசியில் அவர் வந்தது காலை ஆறு மணிக்குத்தானாம். ஆக, எம்.ஜி.ஆர். தரிசனம் முடிந்த பிறகு தான் கூட்டம் கலைந்தது. அவனும் திரும்பியிருக்கிறான். ஆக, நடிகன் என்றும், மலயாளி என்றும், கட்சி இல்லையெனில் எம்.ஜி.ஆர். ஒன்றுமே இல்லை, அவருக்கு என்ன அரசியல் தெரியும்? என்று தூற்றப்பட்ட எம்.ஜி.ஆருக்காகத்தான் ஒரு கூட்டம் அவர் தேர்தல் பிரசாரத்தில் போகும் வழியில் பார்க்கத்தான், மாலை நான்கு மணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணி வரை காத்திருந்திருக்கிறது. இன்று தமிழினத்தலைவர் பேச்சைக் கேட்க ஆள் சேர்க்க வேண்டியிருக்கிறது. பயணச் செலவு, பிரியாணிச் செலவு, எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. 40 வருட கட்சி என்ற ராக்ஷஸ யந்திரத்தை முடக்கிவிடப்பட வேண்டி யிருக்கிறது. இப்படிக் கூட்டம் சேர்த்துத்தான் தன் தமிழினத் தலைமைப் பெருமையை நிரூபிக்கவேண்டியிருக்கிறது. சிறையில் இருந்தவாறே, பெரிய பெரிய பணக்கார, செல்வாக்கு மிகுந்த தலைகளையெல்லாம் தோற்கடித்து, பி. ராமமூர்த்தி தேர்தலில் ஜெய்க்க முடிந்திருக்கிறது. ஒரு தேர்தல் கூட்டம் பேசியவரில்லை. தொழிலாளர்கள் அவரை ஜெயிக்க வைத்தனர். அவர்களுக்கு ஒரு இட்லி கூட அவர் வாங்கிக் கொடுக்கவில்லை.


தேர்தலில் வெற்றி பெற, இலவச கலர் டிவி தாரேன், இலவச வீட்டு மனை தாரேன், இலவசமா 2 ஏக்கர் நிலம் தாரேன், இலவச காஸ் அடுப்பு தாரேன். வேட்டி தாரேன், சேலை தாரேன் என்று சட்டத்தை மீறி ஆக்கிர மிச்சிருக்கியா, அதுவும் உனக்குச் சொந்தம்னு பட்டா தாரேன். என்று என்னென்ன 'தாரேன்', ' தாரேன்' என்று கெஞ்ச வேண்டியிருக்கிறது தேர்தலில் ஓட்டுப் பெற. 'கூவம் மணக்க வைப்போம்' என்று சூளுரைத்து வருடங்கள் 40 ஆகின்றன. சத்ய சாயி பாபாவிடம் துது அனுப்ப வேண்டியிருக்கிறது, கூவம் சாக்கடையைச் சுத்தம் செய்ய பணம் கேட்டு. ஒரு அரசு தன் நித்தம் வசைபாடும் (பண்டாரங்கள், பரதேசிகள்) ஒருவரிடம் தான் தஞ்சம் அடைய வேண்டியிருக்கிறது. மோதிரம் கொடுத்தார், விபூதி கொடுத்தார், எங்க வூட்டுக்கு வந்தார் என்று பகுத்தறிவை மறந்து பெருமை பேசவேண்டியிருக்கிறது. கூவத்தின் ஆக்கீரமிப்பை அகற்றினால் தான் எதுவும் செய்யமுடியும் என்று சாயி பாபா சொல்ல இன்னமும் கூவம் சாக்கடையாகத்தான் இருக்கிறது. ஆக்கிரமிப்பை அகற்றுவது எப்படி? ஓட்டு என்னாவது? ஆக்கிரமிப்பு சட்டம் மீறிய செயல் என்று நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, பத்து வருஷம் ஆயிருந்தால் அது உனக்குத் தான், இந்த பட்டா, இனி ஐந்து வருஷம் ஆக்கிரமிப்பு இருந்தாலே போதும், பட்டா கொடுப்போம், என்று ஒரு ஆக்கிரமிப்பை நியாயப் படுத்துவதுமட்டுமல்லாமல், இது எதிர்கால ஆக்கிரமிப்புக்கும் வழி செய்து கொடுப்பதாக இருக்கிறது. இதை அரசு என்று எப்படிச் சொல்ல முடியும்?
ஈ.வே.ராவோ அண்ணாவோ காமராஜோ இந்தமாதிரி கூட்டம் சேர்த்ததில்லை. அவர்களைக் கேட்க மக்கள் குழுமினர். அவர்களிடம் மக்களுக்குச் சொல்ல ஏதோ இருந்தது. மக்களைத் தம் வழிப்படுத்த அவர்கள் முயன்றனர். மக்களுக்கு இலவசங்களை அள்ளிக்கொடுத்து வோட்டு சேகரிக்கவில்லை. இது எப்போ ஆரம்பித்தது என்று தெரியவில்லை. எமெர்ஜென்ஸியின் போது நான் தில்லியில் இருந்தேன். அப்போது இந்திரா காந்திக்கு மக்கள் தன்னைத் தான் ஆதரிக்கிறார்கள் என்று காட்ட வேண்டியிருந்தது. தினம் தினம் அவர் வீட்டின் முன் ஒரு கூட்டம் குழுமும். ஏழு மணிக்கு இந்திரா காந்தி வெளியே வருவார். வந்து அவர்களுக்கு ஒரு பிரசங்கம் நிகழ்த்துவார். " நான் சொல்கிறேன். ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்று. இவர்கள் ( ஸ்தாபன காங்கிரஸ் காரர்கள்) சொல்கிறார்கள்; இந்திராவை ஒழி" என்று. உடனே கூட்டம் கோஷம் எழுப்பும். "இந்திரா காந்தி, நீ போராடு. நாங்கள் உன் பின்னே இருக்கிறோம்" என்று. மறு நாள் பத்திரிகைகளில், ரேடியோவில் இது தலைப்புச் செய்தியாகும். இந்த ஒத்திகை செய்த நாடகம் வெகு நாட்கள் தொடர்ந்து நடந்தது. இந்தக் கூட்டத்தை பன்ஸிலால், ஹரியானா முதல் மந்திரியாக இருந்தவர், தினம் நாலைந்து லாரிகளில் ஆள் சேர்த்து அனுப்பி வைப்பார். அவர்களுக்கு அரசுக்குச் சொந்தமாக இருந்த மாடர்ன் பேக்கரியிலிருந்து ரொட்டியும் டீயும் கொடுத்து விடுவார்கள். அன்று அங்கு இரண்டு மூன்று லாரிகள், ரொட்டி டீயோடு கதை முடிந்தது. இந்தியா முழுதுமே இந்திராவின் பின்னால் தான் இருக்கிறது என்று ஸ்தாபித்தாயிற்று. இன்று அதே நாடகம் அதிகச் செலவோடு, 6000 பேருந்துகள், கோடிக்கணக்கில் செலவு, இலவசங்கள் என்ணற்றவை என்று செலவழிக்க வேண்டியிருக்கிறது, தன் கட்சியின் தன் தலைமையின் செல்வாக்கை நிரூபிக்க.


மதிப்புகள் மாறிவிட்டன. மாறி விட்டன என்று சொல்வதை விட தலைகீழாகிவிட்டன என்று தான். சொல்ல வேண்டும். இன்று எந்த கூட்டமானாலும், விழாவானாலும், இடை விடாது, மணிக்கணக்கில் முதல்வரின் புகழ் பாடாத கூட்டமோ விழாவோ கிடையாது. சில வருடங்களுக்கு முன் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது புகழ்பாடிய அதே சினிமாக் கூட்டம், அதே புகழ் மாலையை, இன்றைய முதல்வருக்கும் பாடுகின்றன. இரண்டையும் இரண்டு தொலைக்காட்சியில் பார்க்கும் சௌபாக்கியம் தமிழர்களுக்கேதான் கிடைக்கும். அன்று 'வெறும் காக்கா கூட்டம்' என்று கேலி செய்த (அது உண்மைதான், காக்கா கூட்டம் தான்), இன்று அதே கூட்டம் அதே புகழ் மாலையை ரசித்து முகம் பூரிக்கக் மணிக்கணக்கில் கேட்கிறார் என்றால் என்ன சொல்வது!. மிகுந்த சாதுர்யபுத்தி கொண்டவருக்கு இதுவும் காக்காக் கூட்டம்தானே என்று ஏன் இப்போது தெரியவில்லை. இது தன் பதவிக்குப் பாடும் பாட்டு, தனக்கல்ல என்று ஏன் தெரியவில்லை? இதை எப்படி ரசிக்க முடிகிறது. இதையே நான் வேறு ஒரு இடத்தில் வைத்துப் பார்த்துக் கொள் கிறேன். காமராஜ் இருக்கும் மேடையில் அவரை யாரும் இப்படிப் புகழ்ந்து பேச ஆரம்பித்தால், பேசிய முதல் சில வரிகளுக்குள்ளேயே, பேசும் முதல் ஆளையே, "போதும்ணேன், இதெல்லாம் வேண்டாம்ணேன். உடனே இறங்கு கீழே" என்று மேடையிலேயே அந்த புகழ் பாடியை விரட்டியடித்திருப்பார். ஏன்?. மூப்பனார் மேடையில் கூட நான் இதைப் பார்த்திருக்கிறேன்.


அது ஒரு கலாச்சாரம். அது ஒரு வாழ்க்கை மதிப்பு. அது ஒரு வாழ்க்கை வாழும் ஒழுங்கு. காலங்கள் மாறிவிட்டன. நான் சொல்லும் காலம் பலருக்கு பார்த்த கேட்ட நினைவுகள் கூட இராது. எம்.டி. ராமநாதனிடம் மந்திர ஸ்தாயியில் விளம்ப கால சங்கீதம் ஒரு காலகட்ட மதிப்பைக் கலாச்சாரத்தைச் சேர்ந்தது. "ரெண்டக்கா, ரெண்டக்கா, ... அண்டங்காக்க கொண்டைக்காரி, அச்சு வெல்ல தொண்டைக்காரி, ரெண்டக்க, ரெண்டக்க" என்பதையும் பாட்டு அதுவும் சங்கீதம் தான், நடனம் தான், இது தமிழனுக்கே உரிய 2000 வருட பாரம்பரியம் என்று சொல்லி ரசிக்கும் காலகட்டமும், அது சார்ந்த மதிப்புகளும் கலாச்சாரமும் வேறு.தான் எதுவும் சொல்லிப் பயனில்லை.


அன்று கான் அப்துல் க·பார் கானைப் பார்க்க வேண்டும் என்று தில்லி ராம் லீலா மைதானத்திற்கும், முஜீபுர் ரஹ்மானைப் பார்க்க வேண்டும் என்று தில்லிக் குளிரில் அதிகாலையில் பாலம் விமான நிலையத்திற்கும் ஓடிய காலம் இருந்தது. இப்போது எந்த அரசியல் வாதிக்கும் அரசியலுக்கும் குறைந்த பட்ச மரியாதை கூடத் தரத் தோன்றுவதில்லை. இவர்களை நினனக்கும்போது, பாணாதுரை ஹைஸ்கூலில் எங்களுக்கு சரித்திர பாடம் எடுத்த சுந்தரம் பிள்ளள மிகப் பெரிய மனிதராகத் தோன்றுக்கிறார்.


சுதந்திர தினங்களும், குடியரசு தினங்களும் வந்து போகின்றன தான்.



வெங்கட் சாமிநாதன்/21.1.08

Friday, February 01, 2008

நினைவுகளின் தடத்தில் - (8)

நிலக்கோட்டையின் என் நினைவுகள் ரொம்ப பால்ய பருவத்திலிருந்து தொடங்குவதால், அப்போதிருந்து நான் ஒன்பதாவது வகுப்பு படிக்க மதுரைக்கு பாட்டியுடன் சென்ற 1946 வரை எத்தனை வருஷங்கள் என் நிலக்கோட்டை வாசம் நீடித்தது என்று சொல்லமுடியாது. உத்தேசமாக 12 வருஷங்கள், என் பதிமூன்றாவது வயது வரை, என்று இருக்கலாம். அத்தனை வருஷங்களிலும் மிகப் பெரிய அளவில் எனக்கு உற்சாகம் அளித்த நிகழ்ச்சிகள், வியப்பை அளித்த விஷயங்கள் என்று நான் அதிகம் சொல்ல முடியாது. மகாத்மா காந்தியைப் பார்க்கக் கொடைக்கானல் ரோடுக்கு (அம்மைய நாயக்கனூருக்கு0 நானாக தனியாக செல்லலாம் என்று மாமாவாக எனக்கு அனுமதி தந்ததும், மகாத்மா காந்தியைப் பார்த்ததுமான சம்பவங்கள் என் மனதுக்கு மிக சந்தோஷம் அளித்தவை. அது பற்றி தனியே எழுதியும் இருக்கிறேன். மாரியம்மன் கோவிலில் நடக்கும் பங்குனி உற்சவம் அது போல மற்றொன்று. தமிழ் நாட்டின் சமூக வாழ்க்கையையும் அரசியலையும், மதிப்புகளையும் தம் பகுத்தறிவு பற்றிப் பெருமை கொள்ளும் திராவிட இயக்க அரசியல் ஆக்கிரமித்துக் கொண்ட போதிலும் மாரியம்மன் கோவில் உத்சவம் அதனால் பாதிக்கப்பட்டதில்லை. எங்கும், எப்போதும்.


இது போன்று அந்நாட்களில், அது காறும் நிலக்கோட்டையின் வரலாறு காணாத மிகப் பெரிய நிகழ்வு என்று பேசப்படவேண்டியது 1944ம் வருடம், என்றோ நடந்த எங்கள் பள்ளிக்கூட மானேஜர், கரஸ்பாண்டண்ட் குடும்பத்துக் கல்யாணம். கல்யாணம் அல்ல, கல்யாணங்கள் என்று சொல்ல வேண்டும். நான்கு நாட்கள் மிகக் கோலாகலமாக நடந்த, நிலக்கோட்டையே விழாக் கோலம் பூணவைத்த, ஒரே மேடையில், பந்தலில் ஒரே சமயத்தில் நடந்த மூன்று கல்யாணங்கள். எங்கள் பள்ளிக்கூடத்திற்கு பொறுப்பேற்று நடத்தி வந்த அண்ணன் தம்பிகளான மூன்று குடும்பங்கள் ஒன்றாக நடத்தியதால் அது மிகப்பெரிய விழாக்கோலம் பூண்டது. நான் ஏழாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது என் வகுப்பில் படித்த பெண்களில் ஒரு பெண் சௌந்திரம், அப்போது மானேஜராக இருந்த சுப்புராமய்யரின் பெண், அவள் ஒரு மணப்பெண். அவளுடைய அண்ணன், எனக்கு இரண்டு வருடம் முன்னதாக எட்டாவது வகுப்பு வரை எங்கள் பள்ளியில் தன் படிப்பை முடித்துக் கொண்டு அப்பாவுக்கு உதவியாக சென்று முதலாளியாகிக் கொண்டி ருந்தவன். சுப்புராமய்யர் நிலக்கொட்டை பஞ்சாயத்து சேர்மனாகவும் அந்நாட்களில் இருந்தவர். அன்று மாப்பிள்ளையான அவருடைய மகன் அவரைத் தொடர்ந்து பின்னாட்களில் நிலக்கோட்டை பஞ்சாயத்து சேர்மனானான் என்றும் எனக்கு செய்தி சொல்லப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல், அத்தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஒரு பெண்மணியுடன் அவன் மிக நெருக்கமாக இருந்ததாகவும் ஒரு மசாலாவுடன் அந்த செய்தி என்னை வந்து சேரும். மூன்றாவது மாப்பிள்ளையோ, மணப்பெண்ணோ அந்தச் சகோதரர்கள் குடும்பங்களிலிருந்து யார் என்று எனக்கு இப்போது நினைவில் இல்லை.


இதையெல்லாம் சொல்லக் காரணம் எங்கள் பள்ளிக்கூடம் அக்குடும்பத்தின் பொறுப்பில் இருந்ததால், அந்த மிகப் பெரிய கோலாகல கல்யாண விழாவோடு நாங்கள் மிக நெருங்கியவர்களாக, அந்த உத்சாகத்தில் பங்கு கொண்டவர்களாக உணர்ந்ததால் தான். கொஞ்ச நாட்கள் முன்னும் பின்னும் எங்கள் வாத்தியார்களெல்லாம் அது பற்றியே பேசினார்கள். கல்யாண தினங்களில் எங்களுக்கென்று பள்ளியிலேயே ஸ்பெஷலாக சாப்பாடு கிடைத்தது. அடுத்தடுத்து அக்குடும்பங்களின் பங்களாக்கள் இருந்த இரண்டு தெருக்களையும் அடைத்து பிரும்மாண்டமான் பந்தல் போடப்பட்டது. மாரியம்மன் கோவில் பங்குனி உத்சவத்துக்கு போடுவார்களே அது போல, ஆனால் இரண்டே தெருக்களுக்கு மாத்திரம்.

இன்னொரு குறிப்பிடத்தக்க பெரிய விஷயம், நிலக்கோட்டையின் சரித்திரத்திலேயே முதன்முதலாக இந்த நான்கு கல்யாண நாட்களிலும் சங்கீத கச்சேரி நடந்தது. அது வரை நிலக்கோட்டை பாட்டுக்கச்சேரி என்று எதையும் பார்த்ததில்லை. கேட்டதில்லை. வரலாறு காணாத அத்தகைய பெரு நிகழ்வு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்ததென்றால்..!நிலக்கோட்டையில் அந்நாட்களில் இருந்த இரண்டு காபி க்ளப்புகளில் இருந்த ரேடியோ பெட்டிகளில் (திருச்சி நிலையம் மாத்திரம் கேட்கும்) வரும் சினிமா பாட்டுக்களைத்தான் நிலக்கோட்டை வாசிகள் கேட்டு அறிவார்கள். மேடை அமைத்து வித்வான்கள் பாடுவார்கள் என்கிற சமாச்சாரம் நிலக்கோட்டை அறியாதது. நான் இருந்த வரை அந்நிகழ்வு தனிப்பெரும் நிகழ்வாகவே அது வரலாற்றில் தன்னைப் பதித்துக் கொண்டது. ஏனெனில், அதன் பின் வேறு யாரும் எக்காரணம் தொட்டும் இம்மாதிரி பாட்டுக் கச்சேரி ஏற்பாடு செய்து அத்தடத்தில் மரபு ஒன்றை உருவாக்கி விட வில்லை. மிகப் பெரிய அளவில் நடக்கும் மாரியம்மன் கோவில் பங்குனி உற்சவத்திலேயே கூட பாட்டுக் கச்சேரிகள் நடப்பதில்லை அங்கு. நாங்கள் அறிந்தவை கொடை ராட்டினமும், டூரிங் சினிமாவும் தான் நிலக்கோட்டை வாசிகள் அறிந்த பொழுது போக்குகள். ஒரே ஒரு விதிவிலக்கு. 1942-43 களில் ஒரு நாள் தாலுகா அலுவலகங்கள் இருந்த இடத்திற்கு எதிரேயான மைதானத்தில் ஒரு நாள் பாவைக்கூத்து நடந்தது. இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம் அது. சண்டைக்கு ஆள் சேர்க்க, நடந்த பிரசாரமாக அந்த பாவைக்கூத்து ஆடிய கதை இருந்தது.


ஆனால் அந்த நான்கு நாட்கள் கல்யாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சங்கீத கச்சேரிகள் இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்க, இன்னும் நெருங்கிய வேறு காரணங்களும் இருந்தன. அந்த நான்கு நாட்கள் நடந்த கச்சேரிக்கு வித்வான்களை ஏற்பாடு செய்து அழைத்து வந்தது என் மாமா தான். மாமா தஞ்சைக் காரரா, சங்கீதமே தஞ்சையில் விளைந்தது தானே, ஆகவே அதற்குத் தகுந்த ஆள் மாமா தான் என்று பள்ளி மானேஜ்மென்ட் முடிவு செய்தது என்று நினைக்கிறேன். வேடிக்கை என்னவென்றால், மாமாவுக்கு சங்கீதமும் தெரியாது. சங்கீத வித்வான்களையும் தெரியாது. அவருக்கு அதில் ஏதும் பிடிமானமும் இல்லை. அவர் தஞ்சை ஜில்லாக்காரர்தான் என்றாலும் சங்கீத வித்வான்களை அவர் அறிந்தவரில்லை. ஆனாலும் அவர் தஞ்சை சென்று அதற்கான ஏற்பாடுகளையும் செய்து, வித்வான்களையும் அழைத்து வந்துவிட்டார். அவர்கள் எல்லோரும் எங்கள் வீட்டுக்கு அடுத்து இருந்த ஒரு பெரிய வீட்டில் தான் தங்க வைக்கப் பட்டிருந்தனர். அந்த வீடும் இந்த சகோதரர்களில் மூத்தவரான எஸ்.ஆர். அனந்தய்யர் என்பவரின் வீடு தான். அந்த பெரிய வீடும் அடுத்து இரண்டு சிறிய வீடுகளும் அவருடையவை தான். அந்த சிறிய வீடுகள் ஒன்றில் தான் நாங்கள் வாடகைக்கு இருந்தோம். நாங்கள் அங்கு குடிபோனபோது முத்துசாமி அய்யர் என்பவருக்கு சொந்தமாக இருந்தது. பின்னர் மூன்று வீடுகளையும் எஸ்.ஆர்.அனந்தய்யர் 12,000 ரூபாய் களுக்கு வாங்கிவிட்டதாகவும் நாம் அங்கேயே தொடர்ந்து வாடகைக்கு இருக்கலாம், வேறு வீடு வாடகைக்கு பார்க்க வேண்டியதில்லை என்றும் மாமா ஒரு நிம்மதியோடும் சந்தோஷத்தோடும் சொன்னார். பரம்பரையாக பட்டு நெசவுத் தொழில் செய்யும் சௌராஷ்டிரர்கள் எஸ்,.ஆர். அனந்தய்யரும் அவர் சகோதரர்களும். ஊரிலேயே பெரிய பணக்காரர்கள்.


மாமா சங்கீத வித்வான்கள் யாரையும் அறிந்தவரில்லை. இருந்தாலும் அத்தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து வித்வான்களையும் அழைத்து வந்தவரைத் தெரியும். அவரும் வித்வான்களோடு உடன் வந்து தங்கினார். அவர்கள் எல்லோரும் அந்த பெரிய வீட்டின் பெரிய ஹாலில் உங்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். வெற்றிலைச் செல்லமும், தண்ணீர் கூஜாக்களும் பக்கத்தில் இருக்கும். வெற்றிலை போட்டுக் குதப்பும் செக்கச் சிவந்த வாயோடு தான் அவர்கள் பேச்சும் உடன் வரும். நான் அங்கு போய் உட்கார்ந்து விடுவேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் பேச்சையும் வக்கணையையும், பரஸ்பர கிண்டலையும் கேட்க, புரியவில்லை என்றாலும், அது வித்தியாசமான காட்சியாக வித்தியாசமான மனிதர்களையும் அவர்கள் பேச்சு பாவனைகளையும் கொண்டதாக இருந்ததால் இவற்றையெல்லாம் அது வரை கண்டிராத எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. அவர்கள் ஊர் வம்போடு சங்கீதம் பற்றியும் பேச்சு இருக்கும். அவர்கள் முகங்களையும், தலை, கைகள் எல்லாம் ஆட்டி ஆட்டி பேசுவதையும் பார்த்துக் கொண்டே இருப்பேன். பேசுவது புரியாவிட்டால் என்ன? வேடிக்கையாக இருந்தது.


யார் யார் வந்திருந்தார்கள் என்று இப்போது எல்லாம் எனக்கு நினைவில் இல்லை. ஆலத்தூர் சகோதரர்கள் பாட்டு ஒரு நாள். அது நல்ல ஞாபகம் இருக்கிறது. ஒரு நாள் நாதஸ்வரக் கச்சேரி இருந்தது. மற்றது எதுவும் எனக்கு இப்போது நினைவில் இல்லை. இம்மாதிரியான ஒரு அனுபவம் எனக்கு இரண்டு வருஷங்கள் கழித்து கும்பகோணம் வந்து படிக்கத் தொடங்கிய போது தான் கிடைக்க விருந்தது. அங்கு கல்யாணப் பந்தல் பார்க்கும் இடத்தில் எல்லாம் கட்டாயமாக இரவில் கச்சேரி இருக்கும். நாம் பாட்டில் பந்தலுக்குள் நுழைந்து பாட்டு கேட்கலாம்.


நான் மகாமகக் குளம் மேற்குத் தெருவில் ஒரு விதவைப் பாட்டி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த மாதங்கள். நான் கும்பகோணத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில் இருந்த உடையாளூர் கிராமத்திலிருந்து தான் தினம் பள்ளிக்கூடத்துக்கு வயல் வரப்புகளின் மீது நடந்து போகவேண்டும். இடையில் மூன்று ஆறுகள். குடமுருட்டி, முடிகொண்டான், அரசலாறு என்று மூன்று ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும். ஆற்றில் நீர் நான் கடக்க முடியாத ஆழத்தில் இருக்குமானால், கும்பகோணத்திலேயே தங்கிவிடுவேன். அம்மாதிரியான கும்பகோண வாச நாட்களில் ஒரு இரவு படித்துக்கொண்டிருந்தேன். மறு நாள் பரிட்சை. திடீரென யாரோ ஒருவர் வந்து "சத்திரத்தில் ஒரே கூட்டமா இருக்கு. ராஜமாணிக்கம் பிள்ளை வந்திருக்கார்" என்று சொன்னார். நான் படிப்பதை நிறுத்திவிட்டு அதே தெருவில் நான்கு வீடு தள்ளி இருக்கும் சத்திரத்திற்குச் சென்று என்ன நடக்கிறது என்று பார்க்கப் போனேன். ராஜமாணிக்கம் பிள்ளைக்கு பாராட்டு விழா என்று சொன்னார்கள். தண்டபாணி தேசிகரைப் பார்த்தேன். இன்னும் யார் யார் என்று இப்போது ஞாபகம் இல்லை. தண்டபாணி தேசிகர் பேச எழுந்தார். பிள்ளை வாளுடன் தன் பழக்கம் நட்பு பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தார். எனக்கு அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மனம் வரவில்லை. நான் அங்கேயே உட்கார்ந்து விட்டேன். பரிட்சையாவது மண்ணாவது. அந்த நினைப்பே அப்போது எனக்கு இல்லை. அந்த பாராட்டு விழா முடிந்த பின் தான் வீடு திரும்பினேன். இரவு வெகு நேரம் ஆகி விட்டதால், வீடு திரும்பியதும் தூங்கப் போய்விட்டேன். காலை எழுந்து பரிட்சை எழுத புறப்படத் தான் நேரம் இருந்தது.


என் படிப்பும் நான் பரிட்சை எழுதியதும் அந்த லட்சணத்தில் தான் இருந்தது. எல்லா பாடங்களிலும் பாஸ் செய்துவிட்டேன் தான். ஆனால் வாய்க்காலின் மறு கரை ஓரத்தில் கால் பதிந்து விட்டமாதிரிதான். ஒன்றிரண்டு மார்க் குறைந்திருந்தால் வாய்க்காலில் விழுந்துகிடப்பேன். அதுவும் எனக்கு நல்லதாயிற்று என்று தான் சொல்ல வேண்டும். இந்த மார்க்கெல்லாம் பப்ளிக் ஸர்வீஸ் கமிஷன் பரிட்சை எழுதப் போதாது, மறுபடியும் பரி¨க்ஷ எழுதி நிறைய மார்க் வாங்கு என்று மாமா சொன்னார். எனக்குத் தான் படிக்க கொஞ்சம் கூட விருப்பமிருக்கவில்லை. வடக்கு நோக்கி திக்விஜயம் கிளம்பி விட்டேன். அது பற்றிய கதைகள் பின்னர். நான் பள்ளியில் படித்த லக்ஷணம் இப்படித்தான் இருந்தது என்று சொல்ல வந்தேன்.


வெங்கட் சாமிநாதன்/2.10.07