Tuesday, April 08, 2008

பதங்களும் ஜாவளியும் - பக்தியும் சிருங்காரமும்


காதல், விரஹ தாபம், தோழியைத் தூது அனுப்புதல், பின் இந்தக் காதலே இறைவனிடம் கொள்ளும் பக்தியாக பரிணாமம் பெறுதல், இவை அத்தனையும், கவிதையாக, சங்கீதமாக, நடனமாக, பல ரூபங்களில் பரிணாமம் பெறுதல், அத்தனையும் ஒரு நீண்ட வரலாறாக, இடைவிடாத பிரவாஹமாக சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் தமிழ் வரலாற்றில், வாழ்க்கையில், அதன் கலைகளில் பரிணமித்திருப்பது போல வேறு எங்கும் இதற்கு இணை உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை. தமிழில் பரதநாட்டியப் பாடல்கள் என்ற ஒரு தொகுப்பைப் பார்த்த போது, நமக்குத் தெரிந்த ஒரு இரண்டாயிர வருஷ நீட்சி என் முன் விரிந்தது.


ஊடலும் கூடலும் குகையில் வாழ்ந்த காலத்திலேயே தொடங்கியது தான். ஆனால்


"நில், ஆங்கு நில், நீ நாறு இருங் கூதலார் இல செல்வாய், இவ் வழி ஆறு மயங்கினை போறி, நீ வந்தாங்கே மாறு."

என்று அது கவிதையாக மலர்ந்து நம் முன் விரிகிறது. பரத்தை வீடு சென்று வந்த தலைவனை 'வந்த வழியைப்பார்த்துப் போய்யா', என்று விரட்டுகிறாள் காதலி. ஏதோ சட்டென கிடைத்த ஒன்றைச் சொன்னேன். தமிழ்க் கவிதையில் இதற்கும் பின்னோக்கி நாம் செல்லக்கூடும். இதற்கு மாறாக, திருமங்கை ஆழ்வார் தன்னையே திருமாலின் அழகில் மயங்கி நிற்கும் மங்கையாகக் கற்பித்துக் கொள்கிறார்.


தஞசம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சித்த்¢த்தேற்குவஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்தது ஒன்று பணித்தது உண்டு.


இப்படி நாம் அகப்பாடல்களிலும் ஆண்டாள் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் பாசுரங்களிலும், மாணிக்கவாசகர் திருக்கோவையாரிலும் நெடுக காணலாம். அது இசையிலும் ஆடலிலும் தொடர்ந்து வந்துள்ளது. கானல் வரியிலிருந்து இந்த காதலும், பிரிவாற்றாமையும், தவறாகப் புரிந்து பிணங்குதலும் ஆடலிலும் சங்கீதத்திலும் சேர்ந்தே வெளிப்பாடு பெற்று வந்துள்ளன. இது நமக்கே உரிய சிறப்பு.


இப்போது நான் யோசிக்கும் போது, காதலும், அது பக்தியாக மேல் நிலைப்படுத்தப்பட்டு உன்னதமாக்கப் பட்டும் சங்கீதமாகவும், நடனமாகவும் பரிணாமம் பெற்றுள்ள ஒரு உதாரணம், ஜெயதேவர். ஜெயதேவர் இல்லாது ஒடிஸ்ஸி ஏது? ஒடிஸ்ஸி இல்லாது கொனாரக் சிற்பங்களும் ஏது?


தெற்கிலும், தமிழ் நாட்டிலும் இந்த கூட்டுக் கலவையான மரபு தொடர்ந்து வந்துள்ளது தான். ஆனால் இப்போது நமக்குக் கிடைக்கும் பதங்கள் அதிகம் பின்னோக்கிப் போனால் 16-ம் நூற்றாண்டு முத்துத் தாண்டவரோடு நின்று விடுகிறோம். ராமானுஜரும் வைஷ்ணவ ஆச்சாரியார்கள் சிலரும் சரியாக நூறாண்டு வாழ்ந்ததாக சொல்கிறார்கள். அது போல முத்துத் தாண்டவர் வாழ்ந்ததும் சரியாக ஒரு நூறாண்டு (1525-1625) காலம். தஞ்சையில் நாயக்கர்கள் ஆண்ட காலம். கிட்டத்தட்ட 200 வருஷங்களுக்கு மேலாக விஜயநகர் ஆட்சியிலும் நாயக்கர்களின் ஆட்சியிலும் தமிழ் நாடு இருந்த போதிலும், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகளுக்கு அவர்கள் தந்த ஆதரவு ஒரு புறம் இருந்த போதிலும், 17-ம் நூற்றாண்டு கடைசி வரையிலும் இசையிலோ நாட்டியத்திலோ அல்லது நாடகத்திலுமோ தமிழ் தான் தொடர்ந்து வெளிப்பாட்டு மொழியாக இருந்து வந்துள்ளது. தெலுங்கு இன்னும் மேலாண்மை பெற்று விடவில்லை. இசைக்கு ஏற்ற மொழி தெலுங்கு தான் என்று யாரும் சொல்லத் தொடங்கவில்லை. இசைக்கும் நாட்டியத்துக்கும் கீர்த்தனங்களும் பதங்களும் தந்தவர்கள் என, முத்துத் தாண்டவர், பாப விநாச முதலியார் போன்ற தெரிந்த பெயர்களோடு வென்றி மலைக்கவிராயர் என்று அவ்வளவாகத் தெரிய வராத பெயர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் இதற்குள் ஆந்திராவிலிருந்து தஞ்சைக்கு சொக்கநாத நாயக்கர் காலத்தில் தான் §க்ஷத்திரக்ஞர் வருகிறார். வேங்கட மஹியின் சதுர்தண்டி பிரகாசிகை அப்போது தான் எழுதப்பட்டு வருகிறது. ஆக, சுமார் 200 வருஷங்களுக்கு மேல் நீண்ட விஜய நகர, நாயக்கர்கள் ஆட்சியிலும் கூட இசையிலும் நடனத்திலும் தமிழே வெளிப்பாட்டு மொழியாக இருந்து வந்திருக்கிறது. அதற்குக் காரணம் இவ்விரண்டு கலைகளும் தமிழ் மண்ணில் ஊன்றியிருந்த ஆழ்ந்த வேர்கள் என்று தான் நினைக்கிறேன்.


தொடர்ந்து, மாரிமுத்தா பிள்ளை (1712-1782), அருணாசலக் கவிராயர் (1711-1779), ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யர் (1715-1794) போன்றோரின் கீர்த்தனைகளும் பதங்களும் வெளிவருகின்றன. இப்படிப் பெயர்களைச் சொல்லிக்கொண்டு போனால் சட்டென இவர்களுடைய ஆளுமையின் கீர்த்தி புலப்படாது. "சேவிக்க வேண்டுமய்யா, சிதம்பரம் சேவிக்க வேண்டுமய்யா" (முத்துத் தாண்டவர்) "தெண்டனிட்டேன் என்று சொல்லடி", "காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே, என்னைக் கைதூக்கி ஆள் தெய்வமே" (மாரி முத்தா பிள்ளை), "ஏன் பள்ளி கொண்டீரய்யா, ஸ்ரீரங்க நாதரே நீர் ஏன் பள்ளி கொண்டீரய்யா" (அருணாசலக் கவிராயர்), "தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி", "ஆடாது அசையாது வா கண்ணா" (ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யர்) போன்றவை நமக்கு இன்றும் பழகிய பதங்கள் கீர்த்தனைகள்.
இடைக்காலத்தில் சங்கீத மும்மூர்த்திகளின் ஆளுமையின் காரணமாகவும், இசைக்கும் நடனத்திற்கும் தமிழ்நாட்டின் படைப்பு மையமாக இருந்த தஞ்சை மரட்டிய மன்னர்கள் காலத்தில் தெலுங்கு பெற்று ஆதரவின் காரணமாகவும் தமிழ் பின்னுக்கு நகர்ந்தது. தமிழ்ர்களே ஆன முத்துசாமி தீக்ஷ¢தரும், சியாமா சாஸ்த்ரிகளும், பட்டனம் சுப்பிரமணிய ஐயரும் கூட சமஸ்கிருதம் தெலுங்கின் பக்கமே சாய்ந்தனர். அதோடு மட்டுமல்லாமல், மராட்டிய மன்னர்களே இசைக்கும் நடனத்துக்கும் போஷகர்களாகி விட்ட காரணத்தால், பதங்களுடன் ஜாவளி என்ற புதிய இசை வடிவமும் வந்து சேர்ந்தது. அது ஒன்றும் புதிய இசை வடிவம் அல்ல. இசையும் நடனமும் சொல்ல வந்த புதிய செய்தி என்று சொல்லவேண்டும். பதங்களில் பக்தியின் இடத்தில் சிருங்காரம் வந்து உட்கார்ந்து கொண்டது. தலைவி தலைவனுக்காக ஏங்கியதைச் சொல்லும் அகப்பாடல்கள், நேரடியாகவும், தலைவி எனத் தன்னைக் கற்பித்துக்கொண்டும் இறைவனைச் சரணடையும் மார்க்கமாகக் கொண்ட பதங்கள், பக்தியின் இடத்தைச் சிருங்காரமே மேலோங்கச் சொல்லும் ஜாவளிகள், மராட்டிய மன்னர்கள் காலத்தில் இறைவனுக்குப் பதிலாக, தன் கால நிர்ப்பந்தத்தில் மன்னனையே காமுறும் நிலையைச் சொல்லி மன்னனைத் திருப்திப் படுத்தின.


இதற்கு அதிக கால விரயம் தேவையாக இருக்க வில்லை. நடனம் ஆடுபவர்கள் மாதவி காலத்திலிருந்து தாசிகளே. நடனத்தை போஷித்தவர்களோ மன்னர்கள். அல்லது ஆங்காங்கே இருந்த பெருந்தனக்காரர்கள், ஜமீன்கள். சிருங்காரமே பதங்கள் சொல்லும் செய்தியாக மாற அதிகம் கஷ்டப்படவேண்டியிருக்கவில்லை. கோவலன் கானல் வரியில் கடலைப் பாடினாலும், மாதவி என்ன பாடினாள்? சரி, ஜெயதேவர் கண்ணனுக்காக ஏங்கும் ராதையைக் கற்பித்துக்கொள்ள அவருக்கு அருகிலேயே பத்மாவதி நடனமாடிக்கொண்டிக்க அவருக்கு வேறென்ன வேண்டும்?. சிருங்காரம் அல்லாமல் வேறு என்ன வரும்? இந்த சிருங்காரத்தைப் பதங்களில் வார்த்து தஞ்சைக்குக் கொண்டு வந்த §க்ஷத்திரக்ஞரை என்னேரமும் சூழ்ந்திருந்த வர்கள் தாசிகள். தாசிகள் மத்தியிலேயே திளைத்தவர் அவர். ஆக, அவ்ருக்கு, சிருங்காரம் அல்லாமல் வேறென்ன வரும்?. இருந்தாலும் அவை சிருங்காரத்திலிருந்து பக்திக்கு நம்மை இட்டுச் சென்றன. சடகோபரையும், திருமங்கையாழ்வாரையும், அரையர் சேவை செய்யும் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் அரையர்களையும் பக்திக்குத் தான் இட்டுச் செல்கின்றன.


என்னதான் சொன்னாரடி,

அன்னமே அவர் எப்போது வருவாரடி


என்று பல்லவி அமைத்துக்கொண்டால் கேட்கும் ஜமீந்தாருக்கோ மன்னருக்கோ சுகமாகத்தான் இருக்கும். பின்னால் அனுபல்லவியில் தான் அவள் விசாரிப்பது புதுவை வளர் பங்கயத் திருமார்பன், வெங்கடேஸ்வர ஸ்வாமியை என்பது தெரிய வரும். அதனால் என்ன? பின் வரும் சரணங்களும் திரும்பத் திரும்ப வரும் பல்லவியும் சொல்வது தன்னைத் தானென்று கற்பித்துக் கொள்ளலாம்.
ஆனால் இந்த கொஞ்சமளவு சால்ஜாப்பு கூட இல்லாது,


காசிருந்தால் இங்கே வாரும் -

சும்மா கடன் என்றால் வந்த வழி பாரும்


என்று கவி குஞ்சர பாரதி நேராகவே விஷயத்துக்கு வந்து விடுகிறார். கிட்டத் தட்ட இந்த மாதிரிதான் வேறு ஒரு ஜாவளி நான் கேட்டிருக்கிறேன். அது யார் எழுதியது என்பது தெரியவில்லை. அனேகம் பதங்கள் நமக்கு எப்போது எழுதியது, யார் எழுதியது என்பது தெரிவதில்லை. ஆனால் வெகு பிரபலமான பதங்கள் அவை. ஒன்று நான் கேட்டது,
காசில்லாதவன் கடவுளே ஆனாலும்

கதவைச் சாத்தடி....
என்று நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறார் அவர்.
அழகுள்ள துரை இவர் யாரடி?
என்று ஒரு பதம் ஆரம்பித்தால் அது என்னத்தைச் சொல்லும்?
நேற்று ராத்திரிப் போன பெண் வீடு இதுவல்லநிலவரமாக உற்று பாரும்


என்பது சுப்புராமய்யர் என்பவர் இயற்றிய ஒரு பதம். ஜாவளி என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா?
பதங்களையோ ஜாவளியையோ இப்படி வார்த்தைகளைக் கேட்டு நாம் எந்த முடிவுக்கும் வரமுடியாது. ஏனெனில் அன்று ஆடிக்கொண்டிருந்தவர்கள், கௌரி அம்மாள், பாலசரஸ்வதி போன்றவர்கள். அபிநய தர்ப்பணை ஆங்கிலத்தில் எழுத ஆனந்த குமாரஸ்வாமிக்கு உதவியவர் மைலாப்பூர் கௌரி அம்மாள் என்று தெரிகிறது. பாலசரஸ்வதியைப் பற்றி ஏதும் சொல்லவே தேவையில்லை. ரவீந்திர நாத் தாகூரையும், மாயா ப்ளீசெட்ஸ்காயாவையும், சத்யஜித் ராயையுமே தன் நடனத்தில் மயங்கச் செய்தவர் அவர். ஒரு உன்னத நிகழ்ச்சி. பரதமே சிருங்காரம் தானே, சிருங்காரத்தை விட்டால் பரதம் ஏது? என்பவர் அவர். இப்படி ஒரு பார்வை வித்தியாசத்துக்கெல்லாம் இக்கலையில் இடம் உண்டு தான். சிருங்காரத்தையே முற்றிலுமாக ஒதுக்கி பக்தியையே அழுத்தமாகக் கொள்ளும் ருக்மிணி தேவிக்கும் இதில் இடம் உண்டு தான். அதுதானே நடனம் பிறந்த பரிணாமம் பெற்ற வரலாறே. ஆனாலும் நான் பார்த்த ஒரு காட்சி

.
உன்னைத் தூதனுப்பினேன் என்னடி நடந்தது உள்ளது உரைப்பாய் சகியே


என்று தொடங்குகிறது அந்த பதம். 'தலைவனுக்கு என்ன ஆயிற்று? ஏன் அவர் வரவில்லை? என்று போய் பார்த்து வா' என்று தன் தோழியை அனுப்புகிறாள் தலைவி. தோழி திரும்பி வருகிறாள். தலை கலைந்து, நெற்றி குங்குமம் அழிந்து நெற்றியில் பரவியிருக்கிறது. ஆடையும் கலைந்து காணப்படுகிறது. கன்னங்களோ கன்னிப் போய் சிவந்திருக்கிறது


என்னடி நடந்தது? என்ற கேள்வி கேட்கும் முகத்தின் பாவங்களும், ஆங்கீகா அபிநயமும், கண்கள் பேசும் பாவங்களும் ஒன்றல்ல, இரண்டல்ல. முதலில் சாதாரண கேள்வி, பின்னர், தோழிக்கு வழியில் ஏதோ நேர்ந்து விட்டதோ என்ற கவலை, பின்னர், போன இடத்தில் வேறு யாரும் அவளை ஏதும் செய்து விட்டனரோ என்ற கலக்கம், இது தலைவன் செய்துவித்த கோலம் என்றால், அது தன்னை நினைந்து தூது சென்றவள் இரையானாளா, அல்லது, தலைவன்தான் தூது வந்தவளைத் தான் விடுவானேன் என்று செய்த அலங்கோலமா, அல்லது, தூது சென்றவளே தலைவனை மயக்கித் தனக்குச் செய்த துரோகமா... இப்படி 'என்னடி நடந்தது?" என்ற சாதாரணமாகத் தோன்றும் கேள்வியில், நடனமாடும் பெண்ணின் கற்பனைக்கும் நடனத் திறனுக்கும் ஒரு விஸ்தாரமான வெளியை பரதமும் அதன் சஞ்சாரி பாவமும் உருவாக்கிக் கொடுத்து விடுகின்றன. அது ஒரு உலகம். ஒரு அனுபவம். அப்போதே நடனமாடும் கணத்தில் தோன்றி அப்போதே மறையும் அனுபவம். நினைவுகள் மாத்திரம் தங்கி, பின் காலம் மெதுவாக மங்கி மறையச் செய்துவிடும் அனுபவம். இப்போது தங்கி இருப்பது பதம் மாத்திரமே.


இது தான் ஒரு சில கலைகளின் உன்னதமும் சோகமும். அகப்பாடல்களும் சரி, பக்தி கால தேவாரமும், பாசுரங்களும் சரி. எழுதப்பட்டவை அல்ல. பாடப்பட்டவை. பின்னர் நினைவு கூர்ந்து சேர்க்கப்பட்டவை. எத்தனை அழிந்தனவோ தெரியாது. லக்ஷக்கணக்கில் ஞான சம்பந்தர் பாடியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மிஞ்சியுள்ளது முன்னூத்திச் சொச்சம். இப்படித்தான் கீர்த்தனைகளும் பதங்களும். தியாகய்யர் பாடியதில் கிடைப்பது எழுநூறோ என்னவோ தான். இராமலிங்க ஸ்வாமிகள் பாடிச் செல்ல பாடிச் செல்ல உடன் சென்றவர்கள் பின் நினைவிலிருந்து எழுதியவை தாம் மிஞ்சியவை. இப்படித்தான் பதங்களும், ஜாவளிகளும். §க்ஷத்திரக்ஞர் பாடப் பாட அருகில் இருந்து கேட்டவர்கள் எழுதி வைத்தவை தான் எஞ்சியவை. தமிழிசை இயக்கம் இருந்திருக்க வில்லையெனில், எவ்வளவு பதங்களும் கீர்த்தனை களும், மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர், சுப்புராமயயர் போன்றவர்களது கிடைத்திருக்கக் கூடும் என்பது தெரியவில்லை. கிடைத்த ஜாவளிகள் என, டி.பிருந்தா தொகுத்து ம்யூசிக் அகாடமி பிரசுரித்தது என ஒரு குறிப்பு மு. அருணாசலம் ஆங்கிலத்தில் எழுதியுள்ள தமிழ் இசைப் பாடலகள் பற்றிய புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. என் பிரதியில் புத்தகத்தின் பெயர் கூட இல்லை.
எத்தனை பேருக்கு
என்றைக்கு சிவகிருபை வருமோ - ஏழைஎன் மனச் சஞ்சலம் அறுமோ


என்ற பதம் நீலகண்ட சிவன் எழுதியது என்பது தெரிந்திருக்கும். இதே போல,


வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்உள்ளங்குழையுதடி கிளியே - ஊனுமுருகுடீ


என்ற கிளிக்கண்ணி ஏதோ சித்தர் பாடல் என்று நான் என் அறியாமையில் ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். இது அம்பா சமுத்திரம் சுப்பராயஸ்வாமி என்பவர் இயற்றியது. இது இன்னும் நிறைய கண்ணிகளைக் கொண்டது. அவர் ஒரு தலைமைக் காவலராக (ஹெட் கான்ஸ்டபிள்) இருந்தவர் என்றும் தெரிகிறது. அவர் கண்ணிகள் தான் ஏதோ சித்தர் பாடல் போல், நாட்டுப் பாடல் போல மிகப் பிராபல்ய மாகியிரு க்கிறதே தவிர பாவம் அம்பா சமுத்திர ஏட்டையாவை நாம் மறந்துவிட்டோம் என்று தோன்றுகிறது. "என்னடி நடந்தது" எனற பதத்திற்கு அபிநயித்த நடனமணி யார் என்பதும் அவரது அன்றைய மாலை கலையும் அன்று பார்த்த ரசிகர்களின் நினைவுகளோடு மறைந்து விட்டது போல.


நமது வரலாற்றில் எல்லாமே வாய்மொழியாகத்தான் ஒரு தலைமுறை தன் கலைகளை இன்னொரு தலைமுறைக்கு கொடுத்து வந்துள்ளது. அப்படித்தான் கலைகள் ஜீவித்து வந்துள்ளன. எழுத்து தோன்றிய பின்னும் வாய்மொழி மரபின் முக்கியத்துவம் முற்றாக மறைந்து விடவில்லை. பாரதியே தனக்குச் சொல்லிக்கொடுத்துள்ள பாடம் வேறு, அச்சில் வந்துள்ள பாடம் வேறு என்று சிறுமியாக பாரதி பாடக்கேட்டு வளர்ந்த யதுகிரி அம்மாள் தன் பாரதி நினைவுகளில் எழுதுகிறார். பாரதிக்கே அந்த கதி என்றால், தாசிகளின் நடன வாழ்க்கையில் தான் பதங்கள் வாழும் என்ற நிலையில், தாசிகளும் சமூகத்தால் இழிவுபடுத்தப்பட்டு, கோவில்களும் அவர்களைக் கைவிட்ட நிலையில், பதங்களுக்கும் ஜாவளிக்கும் நேரும் கதியைப் பற்றிச் சொல்லவேண்டும். நேற்று மறைந்த பால சரஸ்வதியின் ஆட்டப் பட்டியலைப் (repertoire) பார்த்தால் பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையில் அதில் வர்ணங்களும்(13), பதங்களும்(97), ஜாவளிகளும்(51) இருக்கும். அவ்வளவு நிறைவான ஆட்டப்பட்டியல் வேறு யாருக்கும் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் பாலசரஸ்வதிக்கு இவை எல்லாம் தஞ்சை சகோதரர் காலத்திலிருந்து அவர் குடும்பத்திற்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தவை. அவர் குடும்ப சொத்து போல. அந்த வரலாற்றின் தாக்கம் அதில் இருக்கும். எதற்குச் சொல்கிறேன் என்றால் பாலசரஸ்வதியின் இந்த ஆட்டப்பட்டியலில் தமிழின் பங்கு என்ன என்று பார்த்தால் ஏமாற்றமாக இருக்கும். 13 வர்ணங்களில் 2 தமிலிலும், 97 பதங்களில் தமிழ்ப்பதங்கள் 39-ம், இருந்தன. 13 ஜாவளிகளில் தமிழ் ஜாவளி என ஒன்று கூட இல்லை. இப்போது பால சரஸ்வதி இல்லை. அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை. அன்றைய நிலை அப்படி. மேடையில் ஆடப்பட்டால் தான் தமிழ்ப் பதங்களும் வர்ணங்களும், ஜாவளிகளும் வாழும். வாய்மொழி மரபின் இடத்தை அச்சு எடுத்துக்கொண்டுவிட்ட பிறகு அவை அச்சிலாவது பதிவாக வேண்டும்.


தற்செயலாக நடை பாதையில் கிடைத்த புத்தகங்களில் அச்சிடப்பட்டிருக்கும் பதங்களையும் ஜாவளிகளையும் ஒன்று சேர்த்துத் தரலாமே என்ற எண்ணம் ஒரு கிருஷாங்கினிக்குத் தோன்றி இந்த தொகுப்பு நம் கைகளுக்கு இப்போது வந்துள்ளது. நிறைய இன்னும் இருக்கின்றன. கிருஷாங்கினியைப் போல நம் கண்ணுக்குப் படுவதையெல்லாம் நாம் தொகுப்பது நம் மண்ணுக்கும், மொழிக்கும், கலைகளுக்கும் நாம் ஆற்றும் கடமையாகும்.


கடைசியில் எனக்கு ஏற்பட்ட ஒரு ஆச்சரியத்தைச் சொல்லத் தோன்றுகிறது. எனக்குள் கோபால கிருஷ்ண பாரதியைப் பற்றி ஒரு பிம்பம் இருக்கிறது. அது அவரது நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, பின் அவரைப் பற்றி உ.வே. சா எழுதியுள்ள சின்ன வாழ்க்கைச் சரிதம் இவற்றிலிருந்து பெற்றது. கிருஷாங்கினியின் தொகுப்பில் கோபால கிருஷ்ண பாரதியின் பெயரில் ஒரு கீர்த்தனை இருக்கிறது.


பேயாண்டி தனைக் கண்டு நீயேண்டி மையல் கொண்டாய்பெண்களுக்கழகாமோ...


என்ற பல்லவியுடன் தொடங்குகிறது அது. சிவனைப் பற்றியது தான். நிந்தாஸ்துதி தான். இருப்பினும் இப்படியும் கோபால கிருஷ்ண பாரதி எழுதியிருக்கிறாரா? என்று ஆச்சரியப்பட வைத்தது இது.
-_______________________________________________________________________________________________ தமிழில் பரத நாட்டியப் பாடல்கள்: தொகுப்பு: கிருஷாங்கினி: சதுரம் பதிப்பகம், 34- சிட்லபாக்கம் 2-வது பிரதான சாலை, தாம்பரம் சானடோரியம், சென்னை-47 பக்கம் 204 -ரூ 100


வெங்கட் சாமிநாதன்/4.3.08