Monday, January 01, 2007

கருத்தும் பகைமையும்

ஐம்பதுக்களின் ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த முதல் கலை மனமும், இலக்கிய ருசியும் கொண்ட நண்பன், ஒரு வங்காளி, மிருணால் காந்தி சக்ரவர்த்தி, எங்களிடையே இருந்த சுமார் ஆறு வருட நட்பின் ஆழத்திற்கு வெகு சமீபத்தில் வரக்கூடிய ஒரு நட்பு எனக்கு கிடைத்ததில்லை. அது அலுவலகத்தில் தான் ஒரு சிறு ஈகோ தகராறுடன் தொடங்கியது. பின் அவன் தன் ஈகோவை மறந்து என்னுடன் நட்பு கொள்ள அதிக மணி காலம் ஆகவில்லை. நெருக்கமான முதல் சம்பாஷணையை அவன் தொடங்கக் காரணமானது, அப்போது நான் என் இருக்கையில் இருந்து கொண்டு படித்துக் கொண்டிருந்த புத்தகம், அல்டஸ் ஹக்ஸ்லியின் 'Ape and Essence'. இந்த நட்பின் தொடக்கமாக இருந்த உரசலைப் பற்றி நான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு சமயம் அவன் ஒரு சம்பவத்தைக் கூறினான். சாந்தினிகேதனில் ரெவ். சி. எ·ப். ஆண்டிரூஸ் படிப்பித்துக் கொண்டிருந்த காலம். சாந்தினிகேதனில் ஒரு நாள் ரெவ்.ஆண்டிரூஸ் கையிலிருந்த புத்தகத்தில் கண் பதித்து நடந்த வாறே படித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒருவன் அவர் முன் எதிர்ப்பட்டு அவர் தாடியை இறுகப் பிடித்து உலுக்கினானாம். திடுக்கிட்டுப் பார்த்த ரெவ். ஆண்டிரூஸ் அவனைக் கேட்டாராம். "யாரப்பா நீ? நான் உனக்கு எதுவும் நல்லது செய்ததாக நினைவில்லையே அப்பா? உன்னை எனக்குத் தெரியவே தெரியாதே? பின் ஏன் இந்த கோபம்?" என்றாராம். கேட்க இது வேடிக்கையாகத்தான் இருக்கும். சும்மா தமாஷ¤க்காகக் கற்பித்துச் சொல்லப்பட்டது என்றும் தோன்றும். ஆனால் இது ஒரு சில மனித மனோபாவங்களின் உண்மை.
பங்களாதேஷ் இந்தியாவுடன் இப்போது கொண்டுள்ள பகைமை ஒரு உதாரணம். முப்பது வருடங்களுக்கு முன் இன்னொரு முஸ்லீம் நாட்டின் கொடும்பிடியிலிருந்து விடுதலை பெற இந்தியா உதவிவயிருக்கலாம். அது பழைய கதை. இன்று அது ஒரு கா·பிர் களின் நாடு. என்ன இருந்தாலும் பாகிஸ்தான் தனக்கு பயம் தராத ஒரு சகோதர முஸ்லீம் நாடு. ஆக, எந்த உறவின் ஆரம்பமும் எப்படி இருந்தது என்பதில் பிரச்சினை இல்லை, உறவு கொள்பவர் இருவரின் மனோ பாவங்களைப் பொறுத்தது.
47-48 வருடங்களாகின்றன, நானும் மிருணாலும் சந்தித்துக்கொள்ளவில்லையே தவிர, ஒருவருக்கொருவர் மிகவும் மனம் கசியும் நினைவுகளுடனேயே இருக்கிறோம். சமீபத்தில் அத்தனை வருடங்களுக்குப் பின் சந்தித்த தமிழ் நண்பர் அப்படித்தான் மிருணாலைப் பற்றி என்னிடம் சொன்னார். இவை இரண்டு துருவ எல்லைகள். மறுபடியும் ரெவ். ஆண்டிரூஸ் தாடிக்கு வந்த துர்கதிக்குத் திரும்புவோம்.
இன்னுமொன்று. ஜே;பி.எஸ் ஹால்டேன் சூயஸ் பிரச்சினைக்குப் பிறகு கோபித்துக்கொண்டு இந்தியா வந்து தங்க ஆரம்பித்தார். அப்போது அவர் கட்டுரைகள் கல்கத்தா பத்திரிகைகளில் வெளிவரும். ஒரு கட்டுரையில், அவருடைய மனைவி ஒரு விஞ்ஞானிகள் கருத்தரங்கில் தெரிவித்த கருத்துக்கள் கடும் கண்டனங்களை எதிர்கொள்ளவேண்டி வந்தது என்றும், அன்று வீடு திரும்பிய திருமதி ஹால்டேன் அன்று அவர் கடும் கண்டனத்துக்கு உள்ளானது கடைசியில் அவரையும் ஒரு விஞ்ஞானி என்று அவர்கள் அங்கீகரிக்க வேண்டிவந்துவிட்டது என்று சொல்லி மிகவும் சந்தோஷப்பட்டார்" என்று எழுதியிருந்தார். அது காறும் அவரது அங்கீகாரத்திற்காக, திருமதி ஹால்டேன், பெண்ணீய வாதிகளிடம் முறையிடவில்லை. இதுவும் ஒரு கலாச்சாரம். நாம் கற்றுக்கொள்ளவேண்டிய கலாச்சாரம்.
இது தமாஷ¤க்கான கற்பனை அல்ல என்பது நான் எழுத ஆரம்பத்திலிருந்து இன்று வரை எனக்கு பலமுறை என் தமிழ் எழுத்தாள அன்பர்களில் பலர் ஆண்டிரூஸ் உண்மையைத் தான் அவர் வழியில் சொல்லியிருக்கிறார் என்பதை எனக்கு நினைவுறுத்திய வண்ணமாக இருக்கிறார்கள். தில்லியில் எண்பதுகளில் என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னவர்களிடம் சில அன்பர்கள் " என்னத்துக்கு வீணா? அந்த ஆள் மேலேல்லே விழுந்து பிடுங்குவான்?" என்று சொல்லித் தடுத்து விட்டதாக பின்னர் நேர்ந்த தற்செயல் சந்திப்பில் சொன்னவர்கள் உண்டு. அப்படி யார் என்று சொன்னவர் என்று கேட்டறிந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி அவர்கள் தம் நண்பர்களைத் தடுத்தாட்கொள்ளும் வகையில் ஏதும் நிகழவில்லை. அப்படி ஏதும் இந்த இடைத்தரகர்களை நான் பயமுறுத்தியதுமில்லை. அவர்களிடமில்லை, மற்றவர்களிடம் காரசாரமாக கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்ததுண்டு. அது ஏன் பகைமைக்கு இட்டுச் செல்லவேண்டும் என்பது எனக்குப் புரிந்ததில்லை. க.நா.சு வோடு நிறைய நான் வாதிட்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவர் "அப்படியும் சொல்லலாம்" என்பார். செல்லப்பாவோடும் தான். அவர் க.நா.சு. போல விட்டு விட மாட்டார். ஆனால் இந்த காரசார விவாதங்கள் என்றுமே எங்களிடையே பகைமைக்கு இட்டுச் சென்றதில்லை. கருத்துப் பரிமாற்றம் என்பது மிகவும் கொஞ்சப் பேரிடம் தான் சாத்தியமாகியிருக்கிறது. 'சாமிநாதன் விஷயத்தை என்னிடம் விட்டு விடு, அதிலெல்லாம் தலையிட வேண்டாம் " என்று க.நா.சு பதில் சொன்னது என் காதில் விழுந்திருக்கிறது. "அவனோடு உங்களுக்கு என்ன பேச்சு? என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். இந்த மனோபாவம் தான் தமிழ் எழுத்தாள சமூகத்தில் பரவலாகவும் ஆழமாகவும் வேரூன்றியிருக்கிறது. தன்னைப் புகழ் மறுக்கிறானா, வாதமிடுகிறானா, அப்போ அவன் தனக்கு எதிரிதான் என்ற மனோபாவம். சகஜமான, சினேக பூர்வமான கருத்துப் பரிமாற்றம் என்பது இங்கு சாத்தியமில்லாது இருக்கிறது. ஒரு முறை வலம்புரி ஜான், க.நாசு.வின் வீட்டில் அவரைச் சந்தித்து முன்னர் அவரைப்பற்றி தன் 'தாய்" பத்திரிகையில் வசை என்று சொல்லும் தரத்தில் தாக்கியதற்கு மன்னிப்பு கோரியிருக்கிறார். க.நா.சு.வின் வழக்கமான பதில், '" அட சர்த்தான்யா, விடும்" என்பதுதான். இது க.நா.சு.வோடு நெருக்கமாகப் பழகியவர்களுக்குத் தெரியும். கருத்துத் தளத்துக்கு வளம் சேர்க்கும் ஆழமான கருத்துக்கள் தான் பயனுடையவை. பரிமாறிக்கொள்ளும் இருவர் ஆளுமையையும் சிறப்பிப்பவை. க.நா.சு வை அறிந்து கொள்ள முயலும் யாரும் இன்று வலம்புரி ஜான் என்ன எழுதியினார் என்று தேடிச் செல்லப் போவதில்லை. கருத்துத் தளத்தில் வலம்புரி ஜான் இருந்ததே இல்லை. ஒரு கட்டத்தில் ஒரு வட்டத்தில் பரபரப்பை உண்டாக்கியவர். அவ்வளவே.
தமிழ் நாட்டில் கருத்துக்கள் பேணப்படுவதில்லை. கட்சிச் சார்புகள், வாசகப் பெருக்கங்கள், சாதி உணர்வுகள் பேணப்படுகின்றன. தொடக்க காலத்தில், ஐம்பதுக்கள் அறுபதுக்களில், வாசகப் பெருக்கம் ஒரு வாதமாக முன் வைக்கப்பட்டது. "என் எழுத்துக்களை லட்சக்கணக்கான வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். ஒரு சிலரின் முணுமுணுப்பை நான் பொருட்படுத்தப் போவதில்லை" என்பது பிரும்மாஸ்திரமாகக் கருதப்பட்டது. அன்று அந்த பாக்கியத்தைப் பெற்றவர்கள் இன்று மறக்கப்பட்டுவிட்டார்கள். அடுத்த இருபது முப்பது வருடங்களுக்கு கட்சிச் சார்பு துணை கொடுத்தது. முற்போக்கு என்று தன்னை அடையாளம் காட்டிவிட்டால் போதும். பிரசுரம் பெறுவது மிக சுலபம். பின் எழுதியதெல்லாம் பாராட்டப்படும் முற்போக்கு எழுத்தாளர் சங்கங்கள் அனைத்தும் பாராட்டும். அதே போல முற்போக்கு எழுத்தாளர் எவரையாவது நாம் அங்கீகரிக்காது போனால், வந்தது வினை. அவர்கள் தயாராக வைத்திருக்கும் வசைகளை அத்தனையும் நம்மீது வீசப்படும் தமிழ் நாட்டு முற்போக்குகள் அத்தனைபேரின் பகையையும் நாம் சம்பாதித்ததாகும். சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்பார்கள். அமெரிக்க பணம் வருகிறது என்பார்கள். பொய்க் குற்றச்சாட்டுக்களை கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் வீசுவார்கள். எந்த சக முற்போக்கும் பொய் எனத் தெரிந்தும் தடுக்கமட்டார்கள். இப்போதைய கட்டம் வெகுஜன ரசனையோ, முற்போக்கு கோஷங்களோ செல்லுபடியாகாத கட்டம். இபோது அரசோச்சுவது, சாதிப் பற்றும் கும்பல் மனோபாவமும். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒன்றொன்று. யாருடைய கருத்துமோ, படைப்புமோ, செயல்பாடுகளோ பற்றிக் கவலை இல்லை. சாதி பார்க்கப்படுகிறது. எந்த கும்பல் (clique) என்று பார்க்கப் படுகிறது.
முன்னர் வெகு ஜன ரசனையும், முற்போக்கும், திராவிட கட்சிக் கொள்கைகளும் சாதிக்காததை, இன்று தலித் எழுத்தாளர்கள் சாதித்துக் காட்டுகின்றனர். அவர்களுக்கு வழி காட்டும் சித்தாந்திகளோடு மோதிக்கொள்வதில்லையே தவிர வழிகாட்டப்படும் சித்தாந்தங்களோடு தலித் எழுத்துக்களுக்கு ஏதும் உறவு இருப்பதில்லை. இதை நான் சொல்லிக் காட்டுவதாலும், வேறு அடையாளங்களாலும், என் பாராட்டுக்களை தலித் எழுத்தாளர்கள் பலர் மௌனமாக பெற்றுக்கொண்டாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். தனியாக என்னைச் சந்திக்கும்போது அவர்கள் என்னிடம் சொல்வதை வெளித்தெரிய சொல்வதில்லை. தாடியைப் பிடித்து உலுக்கவில்லை. எதிர்ப்பட்டால், ஒதுங்கிச் செல்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். அவர்கள் கருணைக்கு என் நன்றி.
ஆனால், என்னால் வழிகாட்டப்பட்டவர்களாக ஒரு காலத்தில் சொன்னவர்களுக்கு இன்று நான் "அயோக்கியன்" ஆகியிருக்கிறேன். காரணம் நான் அவர்களுக்கு தொடர்ந்து புஷ்பார்ச்சனை செய்யவில்லை. ஒரு சிலரின் இஷ்ட தெய்வத்தின் சன்னதிக்குச் செல்லாததால் "ஞான சூன்யம்" ஆகியிருக்கிறேன். சொன்னவர்கள் இதற்கு பெண்ணீய லேபிள் தந்து தனக்கு ஆதரவாக, கோரஸ் எழவில்லையே என்று குறைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முற்போக்குகள் போல பெண்ணீயம் யூனியனாக செயல்படுவதில்லை. ரொம்ப செலெக்டிவ் அவர்கள்.
வெ.சாவிடம் முன்னர் இருந்த கோபம் இப்போது இல்லை. குரல் மங்கி விட்டது என்று சொல்பவர்களில் ஒரு சாரார், தம் முதல் புத்தகத்திற்கு என் பாராட்டுக்களைப் பெற்றவர்கள். அல்லது என்னிடம் தாம் விரும்பும் அடையாளங்களைக் காணாதவர்கள். திறமை காட்டும் முதல் அடி வைப்புக்கு என் ஆதரவு என்றுமே உண்டு. கன்றுக்குட்டியை யாரும் செக்கிழுக்க வைப்பதில்லை. உழவு மாடாக்குவதில்லை. இது காறும் என் கோபங்கள் ராஜ பார்ட் உடை அணிந்து கொண்டு ஆகாயம் நோக்கி மூக்கை உயர்த்துகிறவர்களை எதிர்த்துத் தான். என் கோபத்தால் அவர்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டதில்லை. வாசகப் பெருக்கம் குறைந்ததில்லை. பரிசுகளும் விருதுகளும் அவர்கள் தான் பெறுகிறார்கள். ஒரு சில நண்பர்கள் என்னைக் கேலி செய்வதுண்டு. "என்னைத் திட்டி எழுதுங்களேன், சாகித்ய அகாடமியோ, சங்கீத நாடக அகாடமியோ எனக்கு பரிசு கொடுப்பார்கள்" என்று. என் கோபம் தணிந்துவிட்டது என்று சொல்பவர்களைக் கேட்பேன், "உங்கள் புத்தகத்தைப் பாராட்டியது தவறு என்கிறீர்களா? உம்மை செம்மட்டியை எடுத்து அடித்திருக்கவேண்டும் என்கிறீர்களா? அப்படியானால் தான் நீங்கள் சொல்வதற்கு அர்த்தமும் பலமும் இருக்கும்." என்று கேட்டால் ஒரு அசட்டுச் சிரிப்புத் தான் பதிலாகக் கிடைக்கும். ஒரு வேடிக்கை. நான் கோபம் தணிந்து சாதுவான பிராணி ஆகிவிட்டேன் என்று சொன்னவர் யாரும் தங்கள் கோபத்தை எங்கும் எதன் மீதும் காட்டியவர்கள் இல்லை. ஒரு பத்திரிகை முதலாளி சொன்னதை, கட்சி சொன்னதை, தம் சாதி உணர்வு சொல்வதை, தம் கும்பல் சொல்வதைச் செய்யும் ஏவல் பணியாளர்களாகவே இருந்தவர்கள். பரிதாபத்துக்குரியவர்கள். அல்லது தம் கோபத்தை காற்றில் கலந்து விடும் பேச்சுக்களில் பாதுகாப்பாகச் சொன்னவர்கள். தைரியமாக தம் கருத்தை என்றும் எப்போதும் முன் வைக்காதவர்கள். They want me to draw their chestnuts out of fire for them. இவர்கள் எட்ட இருந்து சுவைத்துச் சாப்பிட நான் நெருப்பில் என் கைகளைச் சுட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சினிமா என்றால் என்ன என்று தெரியாத ஒருவரை விட்டு என்னைத் தாக்கித் திருப்திப்பட்டுக்கொள்ளும் மலிவான யுக்தியைக் கையாள்பவர் ஒருவர் தரமான சினிமா இதழ் நடத்துவதாகப் பெயர் பெற்ற ஒருவர். அவரது கட்சிக் கருத்து வெளிப்பாடும், மறைமுகமான சாதி உணர்வும் இப்படித்தான் வெளிப்படுகின்றன. பாராட்டு, திட்டு என்று இருவகைகளாகத் தான் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறது இந்த தமிழ் எழுத்தாளர் சமூகம். இந்த இரண்டு வகைகளிலும் ஏதும் வாதமோ பார்வையோ இராது. இரண்டு வெற்று வார்த்தைகளே, தி.க.சி. வல்லிக்கண்ணன் ரகம். இதையெல்லாம் பற்றிக் கவலைப் படாமல் என் வழியில் நான் சொல்வதைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஆனால் ஆச்சரியம் தரும் வகையில், நான் தில்லிப் பத்திரிகைகளில் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் போதும், சாகித்ய அகாடமியில் சிலரிடமும், முற்றிலும் வேறு வகையான எதிர்கொள்ளலைப் பெற்றிருக்கிறேன். மாற்றுப் பார்வைகளை, கருத்துக்களை வரவேற்கும் மனோபாவத்தை எதிர்முனையில் இருந்தவர்களிடம் கண்டிருக்கிறேன். இது பற்றி வேறு இடங்களில் முன்னதாகவே பிரஸ்தாபித்திருக்கிறேன். அவசியம் இருந்தால் ஒழிய மறுமுறை திரும்பச் சொல்லவேண்டியதில்லை. சமீபத்தில் நிகழ்ந்த, நான் சொல்லாத சிலவற்றைச் சொல்லவேண்டும். எனக்கு மிகவும் மன நெகிழ்வைத் தந்தவை இவை.
எனக்கு 2003-ம் வருட இயல் விருது தரப்பட்டதற்குக் காரணமானவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. கனடா இலக்கியத் தோட்டத்துடன் சம்பந்தம் கொண்டிருந்த மகாலிங்கம் ஒருவர் தான் எனக்குப் பழக்கமான பெயர். பழக்கம் 30 வருடங்களுக்கும் நிகழ்ந்தது. 'பூரணி' இதழை எனக்கு வெ.சாமிநாத சர்மாவே நான் என்றெண்ணி அவர்) முகவரிக்கு அனுப்பி, தொடர்பு கொண்டு, க.கைசாசபதி பற்றி நடையில் எழுதிய 'மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்" என்ற நீண்ட கட்டுரையைத் திரும்பப் பிரசுரம் செய்வது பற்றி எனக்கு எழுதியது அவர். அவ்வளவே. பிறகு ஏதும் தொடர்பு இருந்ததில்லை. அதற்குப் பிறகு டோரண்டோவில் தான் அவரைப் பார்க்கிறேன். வேறு யாரையும் எனக்குத் தெரியாது. விருது அளிக்குமுன் பேசிய டோரண்டோ பல்கலைக் கழக பேராசிரியர், மைக்கேல் டான்னொலி, சொன்ன வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். " நான் பரிசு அளிக்கவேண்டும் என்றார்கள். அதற்கு முன் யார் இந்த வெங்கட் சாமிநாதன் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டாமா? என் மகனை கூகிளில் இவரைப்பற்றி ஏதும் கிடைக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன். "பாராட்டையோ, கண்டனங்களையோ பற்றிக் கவலைப்படாமல், தனக்குப் பட்டதை தைரியமாக முன் வைப்பவர்" என்று சொல்லியிருப்பதாகச் சொன்னான் என் மகன். "அட இது நம்மாளைய்யா" (Hey, here is my kind of man!) என்று நான் சந்தோஷப்பட்டேன்" என்றார். இந்த தேடலும், இந்த எதிர்வினையும் எத்தகைய கலாச்சாரம் அங்கு பேணப்படுகிறது என்பதைச் சொல்கிறது, என்று நான் சந்தோஷப்பட்டேன்.
ஒரு நாள் திடீரென்று தொலைபேசி அழைப்பு வந்தது. பாண்டிச்சேரி களம் அமைப்பினர், நாடகத் துறையைச் சேர்ந்த இளைஞர்கள், எனக்கு நவீன நாடக சிற்பி என விருது அளிக்கவிருப்பதாகச் சொல்லி பாண்டிச்சேரி அழைத்தனர். ஒரு பெரிய குழுவான அவர்களில் யாரையும் எனக்குத் தெரியாது. என்னோடு விருது பெறுபவர்கள் கலை ராணியும், ராஜூவும். அவர்கள் சரி. நான் எங்கு இங்கு வந்து சேர்ந்தேன்? ஒரு சிலவைத் தவிர நவீன நாடகம் என்பது தமிழில் வெறும் கேலிக்கூத்து, பந்தா பண்ணும் விவகாரம் என்றெல்லவா நான் சொல்லி வந்திருக்கிறேன். அப்படியிருக்க......தஞ்சையிலிருந்து ராமானுஜம் பேசினார்: "அவர்கள் உற்சாகம் மிகுந்த இளைஞர்கள். உங்களிடம் மரியாதை உண்டு. நானும் வருகிறேன். மறுக்காதீர்கள்" என்றார்.
பாண்டிச்சேரி போனால் அவர்கள் என்னை பாண்டிச் சேரியில் கருத்தரங்கில், நாடக விழாக்களில் பார்த்திருப்பதாகவும் பேசியிருப்பதாகவும் சொன்னார்கள். எனக்கு நினைவில் இல்லை. களம் இளைஞர்கள் ஒரு பெரிய கூட்டம். விழாவுக்குச் சென்றபோது அங்கு முன் வந்து என்னை மிக ஆர்வத்துடன் முக மலர்ச்சியுடன் வரவேற்றவர் எனக்கு அறிமுகமில்லாதவர். மேடையில் என் பக்கத்திலிருந்த ராஜுவிடம் "அதோ அவர் யார்? " என்று கேட்டதற்கு ராஜூ, "அவர் தான் வினோத், அவருடைய மாக்பெத் நாடகத்தைப் பற்றி நீங்கள் எழுதியிருக்கிறீர்கள், மிகக் கடுமையாகத் தாக்கி" என்றார். திகைப்பும் ஆச்சரியமும் எனக்கு. கீழே பார்வையாளரின் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் வினொத், அவரைப் பற்றித்தான் பேசுகிறோம் என்று யூகித்து, சிரித்துக்கொண்டிருக்கிறார். டெல்லி தேசீய நாடக மன்றம் நடத்திய நாடக விழாவில், மிக மோசமான மாக்பெத் ஒன்று பார்த்ததும், அதை, " ஷேக்ஸ்பியரை இவ்வளவு மோசமாக உலகில் வேறு யாரும் தயாரித்து இருக்கமுடியும் என்று தோன்றவில்லை" என்றோ என்னவோ எழுதியிருந்தேன். அகில இந்திய மேடையில் தமிழ் நாட்டிலிருந்து வந்த நாடகத்தை இப்படி தாக்கி எழுதப்பட்டிருந்தால், அந்த இயக்குனர் அதை சந்தோஷத்துடன் வரவேற்றா இருக்கமுடியும்? வினோதின் முகத்தில் எந்த கசப்பையும் காணோம். "என்னிடம் உங்களுக்குக் கோபமே இல்லையா?" என்று கேட்டேன். "உங்களுக்குப் பட்டதை எழுதியிருக்கிறீர்கள்? அதற்கு நான் கோபிப்பானேன்?" என்றோ என்னவோ சொன்னார். எனக்கு விருது கொடுத்த களம் குழுவில் அவர் ஒரு உறுப்பினர். அவர் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. மாறாக என்னிடம் மிகுந்த நட்புணர்வுடன் பழகினார். சென்னை வரை காரில் அவரும் நானும் பேசிக்கொண்டே வந்தோம்.
அது போலத்தான் கருஞ்சுழி ஆறுமுகமும். அவரது கருஞ்சுழி நாடகத்தை தில்லியில் பார்த்து, வட இந்திய பத்திரிகைகள் அதற்கு உரிய மரியாதை கொடுக்காதது கண்டு, நான் அது பற்றி Indian Express- ல் ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அது அவருக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறது. கருஞ்சுழி ஆறுமுகம் என்றே அவர் அறியப்படும் அளவுக்கு அது இந்தியா வெங்கும், உலகமெங்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு அவரது எந்த நாடகமும் எனக்குப் பிடித்ததில்லை. இருப்பினும் அவருக்கு ஏமாற்றம் இருந்ததே ஒழிய, என்னிடம் அவர் பகைமை பாராட்டியது இல்லை. ஆனால் அவரது நாடகங்கள், தயாரிப்புகள் எல்லாவற்றைப் பற்றியும் உயர்ந்த அபிப்ராயம் கொண்டவர். "உங்களுக்கு சில விஷயங்கள் புரிவதில்லை" என்பது தான் சிரித்துக் கொண்டே அவர் சொல்லும் பதில். நான் அவரைப் பாராட்டதற்காக, "அயோக்கியன்" என்று கூச்சலிட்டதில்லை.
கலா ராணி விருது பெற்றவர், சந்திரா, நான் கடுமையாக நிராகரித்த பல நாடகங்களில் மையப் பாத்திரமாக நடித்தவர், இவர்கள் பங்குபெற்ற எந்த நாடகத்தையும் பாராட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. ஆனால், இவர்கள் திறமையில் எனக்கு நிரம்ப நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையை இவர்கள் பங்கேற்பு எனக்குத் தந்ததுண்டு. இவர்கள் என்னிடம் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்கள். நான் பாராட்டவில்லையே என்று இவர்கள் என்னிடம் பகைமை கொண்டதில்லை.
நவீன நாடகச் சிற்பி விருது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்த ஒன்று. அதன் பெயர் என்னவாக இருந்தாலும். 'சிற்பி' என்ற பெயரில் தான், ஏதோ கழகக் கலாச்சார வாடை வீசுவதாகப் படுகிறது. அது இப்போது தமிழ்க் கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. அனேகமாக, நாம் ஒவ்வொருவருமே ஒரு சில வருடங்களில், எதெதற்கோ மன்னர்கள், சிற்பிகள், அரசுகள், ஞாயிறுகள், சுடர்கள், மேதைகளாகிவிடுவோமோ என்று தோன்றுகிறது. போகட்டும். வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி தரப்பட்ட விருது இது. இது தான் தமிழ்க் கலாச்சாரத்திற்கு விரோதமான செயல். பெறுவற்கு மிக உழைத்துப் பெற்ற விருது அல்ல. உரிய விலை கொடுத்தும் பெற்றதல்ல. சிபாரிசுகள் தந்ததும் அல்ல. எத்தனை பேர் இப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? ஆக, என் வழியில் நான் இருந்துவிட்டுப் போகிறேன், மிச்சமிருக்கும் கொஞ்ச காலத்துக்கும்.
கௌரவிக்கத் தரப்பட்ட இந்த விருது பல தரப்பட்ட தோற்றங்களைத் தரும் ஒரு வெண்கலச் சிலையாக, வந்து சேர்ந்துள்ளது. ரொம்ப கனமானது. ஒன்றரை அடி உயரம், ஐந்து கிலோ எடையும் கொண்டது, பீடத்தையும் சேர்த்து. பிரியமான இதை வைக்கும் இடம் தான் தெரியவில்லை.
வெங்கட் சாமிநாதன்/5.9.06

மொழியின் எல்லைகளைக் கடந்து - திலீப் குமார்

இன்றைய தமிழ் இலக்கியத்தில் எழுபதுகளில், தெரியவந்த முக்கியமான பெயர்களில் ஒன்று, திலிப் குமார். அவரது தாய் மொழி குஜராத்தி என்பதும் விசேஷம் கொள்ளும் விவரம். இது ஏதும் அவரை தனியாக முன்னிறுத்தி பார்வைக்கு வைக்கும் காரியத்தைச் செய்வதாக அல்ல. இன்றைய தமிழ் இலக்கியத்தில், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சௌராஷ்டிரம், போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள எழுத்தாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் எழுத்துக்கள் மைல்கற்கள், க்ளாஸிக்ஸ் என்று சொல்லத்தக்கவை. இது இன்றைய விசேஷம் அல்ல. தமிழ் இலக்கியத்தின் தொன்று தொட்டே, வரலாற்றின் தொடக்கம் தொட்டே காணப்படும் அம்சமாகும். சங்க காலப் புலவர்கள் பலரின் பெயர்கள் தமிழ் பெயர்களாக இல்லை. (உதாரணமாக, தாமோதரனார், கேசவனார், உருத்திரனார், ப்ரஹ்மசாரி, கண்ணனார், நாகனார், தேவனார்...) அப்பெயர்கள், காதா சப்த சதி தரும் பெயர்களைப் போலவே இருக்கின்றன. மேலும், பாடு பொருள், பாடல்கள் இயற்றப்பட்டுள்ள விதி முறைகள், பெயர் தரப்படாது, அவன் அவள், தோழி என்றே குறிக்கப்பட்டு வரும் மூன்றே பாத்திரங்கள், அவர்களது காதல் ஏக்கங்கள், காத்திருத்தல்கள், தூது எல்லாம் பிராகிருத மொழியில் உள்ள காதா சப்த சதியிலும், சங்க கால அகப் பாடல்களிலும் காணப்படும் பொது அம்சங்களாயிருப்பது நமக்கு இன்னும் திகைப்பூட்டுகிறது. ஒரு வேளை இரண்டிலும் பொதுவாகக் காணப்படும் புலவர் பெயர்கள் ஒருவரையே குறிக்குமோ. ஆனால் இந்த இழையைப் பற்றிக்கொண்டு மேற்செல்வது சங்கடமான காரியம் .
நிகழ் காலத்தில் கூட தமிழ் நாட்டில் இருக்கும் கன்னடம், தெலுங்கு பேசும் எழுத்தாளர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு கணிசமாக பங்களித்துள்ளனர். இவற்றில் சில மிக முக்கியமான சிறப்பான படைப்புகளாகவும் விளங்குகின்றன. சௌராஷ்டிரர்களும் தான். ஆனால் அவர்கள் விஜயநகர அரசர்கள் காலத்தில், பின் நாயக்கர்கள் ஆட்சி செய்த காலத்தில் தெற்கு நோக்கி வந்து இங்கேயே தங்கி விட்டவர்கள். அது பல நூற்றாண்டுகளுக்கும் முன்னராதலால், அவர்களுக்கு தாம் எங்கிருந்து வந்தோம், என்ற நினைப்போ, தாம் இப்போது எழுதிக்கொண்டிருப்பது ஒரு அந்நிய மொழியில் என்ற நினைப்போ அறவே அற்றவர்கள். அவர்கள் வீடுகளில் தம் தாய் மொழியில் தான் பேசுகிறார்கள் என்ற போதிலும் அது மிகவாக சிதைந்த ஒன்று தான். தமிழ் மொழி பேசுகிறவர்களான போதிலும், டி.பி. கைலாசமும், மஸ்தி வெங்கடேச ஐயங்காரும் கர்னாடகத்தில் வாழ்ந்ததால் கன்னடத்திலும், கேரளாவில் வாழ்ந்ததால் உள்ளூர் பரமேஸ்வர ஐயர் மலயாளத்திலும் எழுதுவது போலத்தான் இவர்கள் தமிழில் எழுதுவதும் இயல்பு. கடந்த பல நூற்றாண்டுகளாக, தென்னிந்திய மாநிலங்களிடையே இம்மாதிரியான இடம் பெயர்தலும் கொடுக்கல் வாங்கலும் தொடர்ந்த வருவதனால், இது ஏதும் விசேஷமாக, புதுமையான ஒன்றாக கருதப்படுவதில்லை. வாழ்க்கையின் கதியில் மாற்றங்களில் இது இயல்பான நிகழ்வாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு வேடிக்கையாக இன்றைய நிகழ்வைச் சொல்லவேண்டும். இன்று தமிழில் வார்த்தைகளை அடுக்கி கவிதை எழுதுவதான பிரமையில் இருக்கும் செய்யுட்காரர்களில் பெரும்பாலோர், இன்றைய மலையாள கவிதைகளில் புழங்கும் சொற்களை தம் செய்யுட்களில் இடையிடையே கோர்த்து கேட்போரை தம் வார்த்தை ஜாலங்களால் மயக்கும் வித்தைகளில் ஈடுபட்டிருக்கும் தருணத்தில், ஒரு மலையாளம் பேசும் கவிஞர், சுகுமாரன், அந்த மலையாளக் கவிதைகளில் காணும் சொற்கூட்டங்களை பிரக்ஞை பூர்வமாகவே ஒதுக்கிவிடுகிறார். அவரது சாதாரண தமிழ். அந்த சாதாரண தமிழ், ஏதோ செயற்கையான அலங்காரங்களில் உயிர்ப்பின்றி மயங்கிக் கிடக்கும் சமூகத்தின் கூட்டு மனவியாதிக்கு ஒரு மாற்றாக வந்து சேர்கிறது. இது போன்ற ஒரு விசேஷமாகத்தான் திலீப் குமாரின் பெயரை குறிப்பிட்டுச் சொன்னேன்.
திலீப் குமார் தமிழில் பேசி எழுதும் ஒரு குஜராத்தி என்று சொல்வது அவருடைய எழுத்துக்களைப் பற்றியோ அவரது தனித்த ஆளுமை பற்றியோ எல்லவற்றையும் சொல்லிவிடுவதாகாது. அவருடைய ஆளுமையிலும், உணர்வுகளிலும், தமிழ் நாட்டின் பொதுஜன கலாச்சாரத்திலிருந்து அவரை அந்நியப்படுத்தும் கூறுகளும் உண்டு. அதே சமயம் அவர் பிறந்து வளர்ந்த ஏழை சமுதாயத்தோடு அவர் தன்னை இனங்காட்டிக் கொள்ளும் கூறுகளும் உண்டு. அவர் எழுத்துக்கள் விவரிக்கும் அடித்தள மத்திய தள ஏழை மக்களையே எடுத்துக் கொள்ளலாம். இந்த கூட்டத்தில் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழும் பொறுக்கி வர்க்கமும் அடங்கும். இவர்களைப் பற்றிய திலீப் குமாரின் எழுத்துக்கள், இதே மக்கள் கூட்டத்தைப் பற்றி எழுதும் தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களின், மற்ற வெகு ஜன பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு மாறுபட்டது. முற்போக்குகள் ஏழை மக்களைப் பற்றி எழுதுவது, தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் சித்தாந்தத்தின் பிரசாரத்திற்காகத் தான். அவர்கள் அந்த சித்தாந்தத்ததைத் தழுவியதும் கூட, ஒரு சௌகரியத்திற்காகவே அல்லாது, அதை அவர்கள் உறுதியோடு நம்புவதன் காரணத்தால் அல்ல. அவர்கள் எழுத்துக்களைப் பார்த்தால், அந்த ஏழை மக்களின் ஏழ்மை தொடர்வதில் தான் அவர்கள் எழுத்து வாழ்க்கையின் ஜீவிதம் அடங்கியிருப்பது போலும், மக்களது ஏழ்மை நீங்கத் தொடங்கினால், பின் எதை எழுதுவது என்ற சங்கடத்தில் ஆழ்ந்து விடுவார்கள் என்றும் தோன்றும். வேறு எவருக்காக இவர்கள் தம் கண்ணீரை உகுப்பார்கள், எந்த பொருளாதார அரசியல் அமைப்பை இந்த ஏழ்மைக்கு காரணமாக கண்டனம் செய்ய முடியும்? அவர்கள் ஏழ்மையில் தொடர்வதே இவர்கள் எழுத்து வாழ்க்கைக்கு சோறு போடும்.
முற்போக்குகள் அல்லாத வெகுஜன பிராபல்ய எழுத்தாளர்களுக்கோ, இது அவர்களது கதைகளுக்கு வெறும் காட்சி மாற்றம். ஏதோ ஒரு பின்னணி வேண்டும் அவர்களது காதல் கதைகளுக்கு. ராஜ் கபூர் 'அவாரா' வாகி காதல் பண்ணுவது போல. இதில் வெகு சுவாரஸ்யமான விஷயம், இந்த இரண்டு வகை எழுத்தாளர்களுக்கும், அவர்கள் எந்த மக்களைப் பற்றி எழுதுகிறார்களோ அவர்களைப் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதுதான். ஆனால், திலீப் குமார் அவர் எழுதும் மக்களிடையே பிறந்தவர், அவர்களை தம் சிறுவயதிலிருந்தே நன்கு அறிந்தவர். அவர்கள் ஏழைகளாகவும், சமூகத்தில் பின் தங்கியவர்களாகவும் இருப்பது தற்செயலான விஷயம் தான். வேடிக்கையாக, குஜராத்தி என்றால் தமிழர்கள் மனதில் எழும் பிம்பம் கொள்ளைப் பணக்காரனான வியாபாரி ஆகும். அதுவும் உண்மை தான். ஆனால், திலீப் குமார் சிறு பையனாக வாழ்ந்த வாழ்க்கை, எந்த ஏழைத் தமிழனதும் போலத்தான். அவர் பள்ளி சென்று படித்தது, மத்திய தர பள்ளிக் கல்வி வரை தான். அதற்குள் அவர் தந்தை காலமாகிவிட்டார். விதவையாகி விட்ட அவரது இளம் வயதுத் தாய், பரம்பரை குடும்ப ஆசாரத்தில் தோய்ந்தவர். சமூகம் என்ன சொல்லுமோ என்ற பயத்தில் எல்லா வெளி உலக சம்பந்தங்களையும் துண்டித்துக் கொண்டவர். அவ்வளவையும் மீறி தன் மகனை வளர்த்து ஆளாக்கினார். அந்த சிறு வயதிலேயே திலீப் என்னென்னவோ எடுபிடி வேளைகள் எல்லாம் செய்து தானும் சம்பாதிக்க ஆரம்பித்து, சுயமாக தன்னைப் படிப்பித்துக் கொண்டார். இம்மாதிரியான நிலையில் வளரும் பையன், சுற்றி ஆக்கிரமித்துக் கொண்டுள்ள பாமரத்தனமும் கூச்சலும் நிறைந்த தரமற்ற வெகுஜன கலாச்சாரத்துக்கு இரையாகாமல் தன் நுண்ணிய உணர்வுகளை காத்துக்கொண்டது எப்படி என்பது ஆச்சரியப்படவேண்டிய அதிசய விந்தை தான். ஸ்டாலினின் அவ்வளவு நீண்ட கால யதேச்சாதிகாரத்தையும் மீறி போரிஸ் பாஸ்டர்னக் போன்ற கவிஞர்களும், பீட்டர் கபீட்ஸா போன்ற பௌதீக விஞ்ஞானிகளும் எப்படி உயிர் வாழ்ந்தார்கள், தம்மைக் காத்துக் கொண்டார்கள்! தமிழ் வெகுஜனகலாச்சாரத்தின் அசுர பாமரத்தனம் அப்படி ஒன்றும் குறைந்த யதேச்சாதிகாரம் இல்லை. திலீப் குமாரும் எழுதுகிறார். எப்போதாவது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதே, அதனால் எழுதுகிறார். தான் எழுத்தாளராகவேண்டும் என்ற தூண்டுதலால் அல்ல. அவர் எழுதத்தொடங்கிய இது வரையான 15 வருடங்களில் அவர் எழுதிய சிறுகதைகள் அவ்வளவு தான் இருக்கும். அதுவும் அவர் எழுத்துக்கள் வெகு சிலரையே சேரும் சிறுபத்திரிகைகளில் தான் பிரசுரமாயின. அவர் தான் அறிந்த பழகிய மக்களைப்பற்றி, அன்றாடும் வாழ்க்கையில் உறவாடும் மனிதர்களைப் பற்றி - மத்திய தர, அல்லது ஏழை தமிழ், குஜராத்தி மக்கள் - எழுதுகிறார். சரி, ஆனால், அவர் அவர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் பாங்கு, அவர் வெளிப்படுத்தும் உலகம் அவரதே. அவர்களை, அசட்டு உணர்வுகளின்றி, சித்தாந்தப் பூச்சுக்களின்றி, அவர்களது ஏழ்மை, இயலாத்தன்மையை கவர்ச்சிகரமாக்காமல், பழகிய மனிதர்களாகவே தான் அவர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இந்த தந்திரங்கள் ஏதும் செய்திருந்தால், அதைத் திரும்பத் திரும்பச் செய்திருந்தால், அவர் பிரபலமாகியிருப்பார். வெற்றியடைந்த எழுதாளராகியிருப்பார். அவர் அப்படி ஏதும் செய்யவில்லை.
'மூங்கில் குருத்து' என்ற தலைப்பை கொண்ட அவரது முதல் சிறுகதைத் தொகுப்பில், அத் தலைப்புக் கதையில் ஒர் கடைச் சிப்பந்தியின் ஒரு நாள் அவஸ்தையைச் சொல்கிறது. அவன் இறந்த தந்தையின் சிராத்த தினம் மறுநாள். அவனது தந்தைக்கு மிகவும் பிரியமானது மூங்கில் குருத்து. அது என்னவோ வெளியூரிலிருக்கும் கல்யாணமான அக்கா தந்தது வீட்டில் இருக்கிறது சிரார்த்தத்திற்கு என்று. ஆனால் சிராத்தத்திற்கு வேண்டிய அரிசி இன்னும் மற்ற பொருட்கள் எல்லாமே இனித்தான் வாங்கியாக வேண்டும். அதற்கு கடை முதலாளியிடம் ஒரு ரூபாய் அட்வான்ஸாகக் கேட்க, அவர் முதல் நாள் இரவு கடையை மூடுவதற்கு முன் வாடிக்கைக்காரர்களிடமிருந்து வரவேண்டிய பாக்கியை வசூல் செய்து அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டார். அந்த நாள் முழுதும் அந்த பாக்கியை வசூல் செய்ய அலைவதிலேயே கழிகிறது. அலைந்தது தான் மிச்சமே ஒழிய ஒரு பைசாகூட வசூல் ஆகவில்லை. வெறுங் கையோடு வீடு திரும்பியவனுக்கு அம்மாவிடம் திட்டு கிடைக்கிறது. ஆக, மறுநாள் அந்த வருட சிரார்த்தம் நடக்கப் போவதில்லை. அந்த வீட்டில் மூங்கில்குருத்து வருஷத்தில் ஒரு நாள் தான் சமைத்தாகிறது. அதுவும் அப்பாவுக்குப் பிடிக்கும் என்பதால் அவர் நினைவில் அவர் சிரார்த்த தினத்தன்று தான் சமைக்கப்படும். அது இருந்தும் பயனில்லாது போய்விட்டது. அதை இனி தூக்கி எறியத்தான் வேண்டும். இன்னொரு கதை. ஒரு முற்போக்கு எழுத்தாளர். அவரது கதைகளில் காணும் மனிதாபிமானம், சுரண்டப்படும் வர்க்கத்தின் மீது அனுதாபம், முற்போக்கு கருத்துக்கள் ஆகியவற்றிற்காக அறியப்படுபவர். அவருக்கும் கஷ்டகாலம். என்னென்னவோ நிறைய கெட்ட பழக்கங்கள். கையில் பணமிருப்பதில்லை. ஆகையால் அடிக்கடி தன் பணத்தேவைக்காக அறிந்தவர் அறியாதவர் எல்லோரிடமும் கையேந்திக் கடன் வாங்குவார். அவருடைய கதைகளைப் படித்து ரசிக்கும் ஒரு புதிய வாசகரின் பரிச்சயம் கிடைக்கவே அவரிடமும் தன் அப்போதைய கஞ்சா தேவைக்காகக் கடன் கேட்கிறார். ரசிகர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி வசமாகத் திட்டு வாங்கிக் கட்டிக்கொள்கிறார், மனிதாபிமான கதைகள் எழுதும் தன் அபிமான கதாசிரியரிடம். திலீப் குமார் யாரைம் குற்றம் சாட்டுவதில்லை. யாரையும் ஐயோ பாவம்! என்று இரக்கத்திற்கு உரியவராக்குவதில்லை. தீய வழிகளில் செல்கிறவர்களைக்கூட கீழ்நோக்கிப் பார்ப்பதில்லை. அப்படி ஏதும் சொல்வது அவர்கள் மனம் நோகச் செய்யும் என்று பயப்படுவதாகத் தோன்றுகிறது. அதைத் தான் பார்க்காதது போல இருந்து விடுகிறார். ஓவ்வொருவருக்கும் அவரவர் குறை பாடுகள், பலவீனங்கள் உண்டு. அவை வறுமையின் காரணமாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இந்த குறைபாடுகள் எப்போதும் இருக்கப்போவதில்லை. அவை பின்னால் நீங்கிவிடக்கூடும். ஆகவே அதை வைத்துக்கொண்டு கூச்சல் போடவேண்டாம், கோஷங்கள் இடவேண்டாம், அதை வைத்துக்கொண்டு தன் பிழைப்பை நடத்தவேண்டாம். எல்லாவற்றிலும் மோசமாக அவற்றைக் கதைபண்ணி கவர்ச்சியாக்க வேண்டாம். அவற்றோடு தான் வாழவேண்டும். கடைசியில் அடிப்படையான சக மனித உணர்வுகள் மேலெழும். கண்ணாடி என்ற கதையில் தம்பதிகள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்கின்றனர். ரகளை நடக்கிறது. கடைசியில் சமாதானம் ஆகி பிரிய தம்பதிகளாகவும் ஆகின்றனர். இந்த சங்கிலித் தொடர் மாறுவதில்லை.
திலீப் குமார் போன்ற எழுத்தாளர்கள் அபூர்வ ஜீவன்கள். தமிழ் எழுத்தைப் பொறுத்த மட்டிலாவது. தற்கால தமிழ் இலக்கியத்திற்கு இவர்கள் வளம் சேர்ப்பவர்கள்.
(ஆங்கிலம்) 'Crossing the Language Barriers'- Patriot, New Delhi, ஆகஸ்ட், 13, 1989-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------