Saturday, October 27, 2007

நினைவுகளின் தடத்தில் - (4)

நான் நிலக்கோட்டையில் பாட்டியுடனும் மாமாவுடனும் இல்லாதிருந்தால், அப்பாவும் அம்மாவும் இருக்கும் உடையாளூர் கிராமத்திலியே இருந்திருந்தால், என் விருப்பங்களும், ரசனையும் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன். எனக்கு விருப்பமானது என்பது ஏதும் உள்ளிருந்து சதா கொதித்துக் கொண்டு இருக்கும், என்றோ மூடியை உதறித் தள்ளிக்கொண்டு வெளியே பீறிடும் ஏதும் ஆன்மீக, கலைப் பசி என்கிற சமாச்சாரங்கள் ஏதும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். விதவைப் பாட்டிக்கு புராணப்படங்களே தஞ்சம் எனவாகிப் போனதும், வீட்டுக்கு நேர் எதிரே ரோட்டுக்கு அந்தப் புறம் சினிமாக் கொட்டகை என்று ஆகிப் போனதும் சந்தர்ப்பங்கள் தான். நிலக்கோட்டையில் தங்கியிருந்த வீடு ஊருக்குள்ளே இருந்திருந்தால் பாட்டிக்கு இதெல்லாம் சாத்தியமாகியிராது. எனக்கும் அந்த சந்தர்ப்பங்கள் கொசுராகக் கிடைத்திராது. பாட்டிக்கு இது புண்ணியம் சம்பாதிக்கும் நவீன மார்க்கமாகிப் போனது. எனக்கு விளையாடுவது போல, சோளக்கொல்லையில் புகுந்து சோளக கதிரைத் திருடித் தின்பது போல, கல்லெறிந்து மாங்காய் அடித்துத் தின்பது போல, வேறு ஒருவிதமான பொழுது போக்கு. இப்போது என் சொந்த கிராமம் என்றும், நான் பிறந்த இடம் என்றும் சொல்லிக்கொள்ளும், (அது பிறந்த இடமும் இல்லை, சொந்தமும் இல்லை) உடையாளூரில் இருந்திருந்தால், சினிமா, நாடகம், சோளக்கதிர் திருடித் தின்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், முதலில் ஊடையாளூரில் அப்போதிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தாண்டி மேற்சென்றிருப்பேனா என்பதே சந்தேகம். என் பாட்டிக்கு நான் பிரியமாகிப் போனது, தன் பேரப்பிள்ளையைத் தானே வளர்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் என் நிலக்கோட்டை வாசத் திற்குக் காரணமாகிப் போயின. பாட்டி ஆசைப்பட்டது இருக்கட்டும், அம்மாவுக்கு எப்படி தன் முதல் குழந்தையை அதன் இரண்டு வயதில் விட்டுப் பிரிய மனம் வந்தது என்று சில சமயம் யோசிப்பேன். பதில் கிடைக்காது. அத்தோடு அந்தக் கேள்வி மறைந்து விடும்.

மாமாவால் அவருக்கு வந்த சம்பளத்தில் எங்களையெல்லாம் ரக்ஷிப்பது என்பது சாத்தியமாக இருக்கவில்லை. என் சின்ன வயதில் பாட்டி கொடுத்த செல்லத்தில், ஒரு சில சமயங்களில் நான் மாமாவை மிகவும் வருத்தியிருக்கிறேன் என்பதை பின்னர் வடக்கே வேலையில் சேர்ந்து என் பிழைப்பை நானே பார்த்துக்கொள்ள ஆரம்பித்த போது உணர ஆரம்பித்தேன். அன்றைய நிலையில் வரம்புக்கு மீறி நான் எதற்கும் ஆசைப்பட்டேன் என்று சொல்வதற்கில்லை. அப்படி ஆசைப்பட ஒரு உலகம் என்பதே என் பிரக்ஞையில் இல்லாதது. நான் தான் முன்னாலேயே சொல்லியிருக் கிறேனே . மூ ன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை எதிரிலிருக்கும் கீற்றுக் கொட்டைகயில் படம் மாறும் என்று. அவற்றில் வரும் எல்லா புராணக்கதைப் படங்களையும் பாட்டி பார்த்து விடுவாள். மாமா ஒன்றும் சொல்ல மாட்டார். பாட்டிக்கு மாத்திரம் தானே டிக்கட் வாங்கவேண்டும். அந்நாட்களில், தரை டிக்கட் முக்கால் அணாதான். அணா என்றால் இன்றுள்ளவர் எத்தனை பேருக்குப் புரியும் எனபது தெரியவில்லை. ஒரு ரூபாய்க்கு பதினாறு அணாக்கள். ஒரு அணாவுக்கு பன்னிரண்டு காசுகள். ஒரு காசுக்கு விலைக்கு வாங்கக் கூடிய பொருடகள் அன்று இருந்தன. ஒரு கூறு கடலையோ, இலந்தைப் பழமோ, சின்ன கொய்யாப் பழமோ ஒரு காசுக்குக் கிடைத்து விடும். முக்காலணா கொடுத்தால் நானும் பாட்டியும் ஒரு சினிமா பார்த்து விடுவோம். தான் பார்ப்பது மட்டுமல்லாமல், பாட்டிக்கு சில படங்கள் ரொம்பவும் பிடித்து விட்டால், எல்லோரிடமும் அதை மிகவும் சிலாகித்து நிறைய பேசுவாள். எனக்கு ஞாபகம் இருக்கிறது. அனேகமாக, ஹரிச்சந்திரா என்று நினக்கிறேன். பி.யு.சின்னப்பாவம் கண்ணாம்பாவும் நடித்த படம். அதில் கண்ணாம்பா நிறைய வசனம் பேசி நெடு நேரம் பாடி கதறி அழும் கட்டம் உண்டு. மயானத்தில் தன் பிள்ளை லோகிதாசனின் சடலத்தை வைத்துக் கொண்டு, அவனைப் பெற்று வளர்த்த கஷ்டத்தை யெல்லாம் சொல்லி ஒப்பாரி வைப்பாள். ஒன்றாம் மாதம், இரண்டாம் மாதம், என்று ஒவ்வொரு மாத கஷ்டத்திற்கும் ஒரு வேதனை வர்ணணை, பாட்டு இப்படி. பாட்டி மனம் உருகிவிட்டது. வீட்டுக்கு பத்து பாத்திரம் தேய்க்க ஒரு கிழவி வருவாள். அவளுக்கு மாதம் சம்பளம் ஒன்றே கால் ரூபாய். அந்தக் கிழவியிடம் கண்ணாம்பாவின் உருக்கமான புலம்பலைச் சொல்லிச் சொல்லி அந்தக் கிழவியும், அவ்வப்போது, 'ஆமாம்மா இருக்காதா அம்மா, சும்மாவா இருக்கு ஒரு பிளையைப் பெத்து வளக்கறது, அதே செத்துப் போய், அதப் புரிஞ்சுக்காத புருஷன் முன்னாலேயே கொள்ளி வைக்கறதுன்னா,' என்று அவ்வப்போது சந்தர்ப்பத்தை ஒட்டி குரல் கொடுத்துக் கொண்டிருப்பாள். கடைசியில் கிழவிக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது. பாட்டிக்கு மனம் இளகி விட்டது. தன் கதையைக் கேட்க இப்படி ஒரு ரசிகை கிடைத்த சந்தோஷம். 'இந்தா கிழவி, நான் காசு தரேன். நீயும் போய்ப் பாரு' என்று சொல்லி விட்டாள் அந்த உணர்ச்சி வசத்தில். கிழவிக்கு எப்படி முக்காலணா கொடுத்தாள் என்று எனக்கு ஞாபகமில்லை. கட்டாயம் கொடுத்திருப்பாள். ஆனால் காசு மாமாவிடமிருந்து தான் வாங்க வேண்டும். நான் கொஞ்சம் பெரியவனாகி விட்ட காலத்தில், எப்போதாவது மாமா எனக்கு காலணா கொடுப்பார், 'பாவம் பசங்க ஒண்ணுமே கேக்கறதில்ல, ரொம்ப ஏங்கிப் போயிட்டதுக" என்று பாட்டியிடம் சொல்லுவார். நான் அந்த காலணாவுக்கு மூன்று கொய்யாப் பழங்கள் வாங்கி, நான், என் மாமா பெண், பையன் மூன்று பேறும் ஆளுக்கு ஒன்றாக வாங்கிக் கொள்வோம்.

ஒரு சமயம் ஏதோ ஒரு படம் வந்திருந்தது கொட்டகையில். அது நிச்சயமாகப் புராணப் படமாக இல்லாதிருந்தக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பாட்டி அழைத்துச் சென்றிருப்பாளே. நான் தனித்து விடப்பட்டேன். படம் பார்க்கவேண்டும், காசு வேணும் என்று மாமாவை நச்சரித்துக் கொண்டி ருந்தேன் இரண்டு நாட்களாக. பாக்கலாம்டா என்று சொல்லி மாமா தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார். காசு பெயரும் வழியாக இல்லை. அன்று தான் கடைசி நாள். எனக்கோ வாழ்க்கையில் ஏதோ ஒன்று மகத்தான ஒன்று என்றென்றைக்குமா இழக்கப்போகிறோம் என்ற துக்கம். இந்த சினிமா பார்க்க முடியவில்லை என்றால் வாழ்க்கைக்குத் தான் என்ன அர்த்தம்? நம் வாழ்க்கை ஏன் இப்படி ஒரு சுகமும் ஒருசந்தோஷமும் இல்லாமல் ஆகிவிட்டது? எத்தனை பேர் மூன்று நாட்களாக சினிமாவுக்கு போய்க் கொண்டிருக் கிறார்கள்? அவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்? எனக்கு என்று ஏன் இத்தனை துரதிர்ஷ்டம்? கடைசியாக, 'அடி பின்னிப் பிடுவேன் ராஸ்கல், ரொம்பத்தான் அடம் பிடிக்கிறே? எத்தனை சினிமா பாத்திருக்கே, ஒண்ணு பாக்காட்ட என்ன குடி முழுகிப் போறது?' என்று சீறினார். இன்னம் அதிகம் முரண்டு பிடித்தால் நாலு சாத்து சாத்திவிடுவார் என்று தோன்றியது. துக்கமோ, என் துரதிர்ஷ்டத்தை நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் பீறிட்டுக் கொண்டு வந்தது. அஸ்தமனம் ஆயிற்று. வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. எங்கெங்கோ மனம் போனபடி சுற்றிக் கொண்டிருந்தேன். வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. இப்படியும் ஒரு வீடு, ஒரு மாமா, ஒரு பாட்டி, ஒரு சினிமா பாக்க காசு கொடுக்காதா மாமாவும் பாட்டியும். சே. நினைக்க நினைக்க மனம் கொதிப்படைந்து கொண்டு வந்தது. ஓடையைத் தாண்டியதும், ஒரு பார்க் இருக்கும். அதில் தான் ஒரு வாசக சாலை, ஒரு ரேடியோப் பெட்டி; கூட ஒரு ஒலிபெருக்கியும் இருக்கும். . திருச்சி வானொலியை அதில் கேட்கலாம். திருச்சி மாத்திரமே. செய்திகள், பாட்டுக்கள், நாடகங்கள், இத்யாதி. நல்ல பார்க் அது. மாலை நேர பொழுது போக்குக்கு நிலக்கோட்டை வாசிகளுக்கு அது உகந்த இடம். நிலக்கோட்டை பஞ்சாயத்தின் பொறுப்பில் இருந்தது. பார்க்கில் இருக்கும் மரங்கள் கொடி செடிகள், நிறைய க்ரோட்டன்கள் எல்லாவற்றுக்கும் ஒரு கிணறும் ஏற்றமும் உண்டு. அந்த வாசக சாலையில் நிறைய பத்திரிகைகள், யுத்த செய்திப் படங்கள் நிறைந்த பத்திரிகைகள் இருக்கும். அந்த பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். இனி வீட்டுக்குப் போவதில் அர்த்தமில்லை. இவ்வளவு அநியாயம் நடக்கும் வீட்டுக்கு யார் போவார்கள்?

பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தேன். இருட்டியது. என்ன செய்யலாம்? எங்காவது மாமா கண்டு பிடிக்க முடியாத ஊருக்குப் போய்விடலாம். ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம். வேலை கிடைகாதா என்ன? கிளப்பில், பஸ்ஸில் எத்தனை என் வயதுக் கார சின்ன பசங்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் சினிமா பார்க்க யாரிடம் காசு கேட்க வேண்டும்? எவ்வளவு அதிர்ஷ்டம் அவர்களுக்கு? ரேடியோவில் ஒலி பரப்பு முடிந்தது. விளக்கை அணைத்தும் விட்டார்கள். பார்க்கைச் சேர்ந்த ரீடிங்க் ரூம் வட்ட வடிவில் இருக்கும். அதைச் சுற்றிய ஒரு வராண்டா. அந்த வராண்டாவில் யார் யாரோ படுத்திருப்பார்கள். நானும் அங்கேயே படுத்து விட்டேன். எப்போது தூங்கினேன் என்பது தெரியாது.

Sunday, October 21, 2007

நினைவுகளின் தடத்தில் - (3)

எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே, நான் பாட்டியை விதவைக் கோலத்தில் தான் பார்த்திருக்கிறேன். அப்படித்தான் பாட்டி இருப்பாள், அது தான் பாட்டி என்று எனக்குள் நினைத்திருப்பேன். ஏதும் வேறு விதமாக, ஏன் பாட்டி இத்தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்போது அது பற்றி என் சிந்தனைகள் சென்றதில்லை. பின்னாட்களில், கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு, பாட்டியின் வைதவ்ய கோலம் மிகப் பெரிய சோகமாக நினைப்புகளில் கவிழும். அவ்வப்போது பாட்டி தன் மனம் நொந்து போன வேளைகளில் தனக்குள் சொல்லிக்கொள்வாள். தனக்கு விதிக்கப்பட்ட விதியை எண்ணி, இப்போது வாழும் வறுமையை எண்ணி. 'ஒண்ணா ரெண்டா, ஒண்ணொணா குழிலேண்ணாடா போட்டேன்" என்று சொல்லிச் சொல்லி புலம்புவாள், மாய்ந்து போவாள். மாமாவுக்கு அடுத்து என் அம்மா, பின் ஒரு பெரிய இடைவெளி. கடைசிகுழந்தை என் சின்ன மாமா. என் அம்மாவுக்கும் சின்ன மாமாவுக்கு இடையே பிறந்த குழந்தைகள் குழந்தைகளாகவே இறந்து விட்டன. அதைத் தான் நினைத்து நினைத்து பாட்டி புலம்பிக் கொண்டிருப்பாள். மாமா கும்பகோணம் காலேஜில் FA பரிட்சை எழுதப் போயிருக்கிறார். தாத்தா இங்கு சுவாமி மலையில் இறந்து விட்டார்,. "உடனே கூட்டிக்கொண்டு வா," என்று காலேஜுக்கு ஆள் அனுப்பி, மாமா வந்தவர் தான். பின் படிப்பைத் தொடரும் வசதி இல்லை. இதெல்லாம் பாட்டி அவ்வப்போது தன் விதியை நொந்து புலம்பும் போது சொன்ன விவரங்கள்.

படிப்பை நிறுத்திய பிறகு, குடும்பம் எப்படி நடந்தது, ஆசிரியப் பயிற்சி மாமா பெற்றது எங்கே, எப்படி, என்பதெல்லாம் தெரியாது. தாத்தாவின் மறைவிற்குப் பிறகு குடும்பம் எப்படி நடந்தது என்பதும் தெரியவில்லை. மறைந்த தாத்தாவுக்கு உடன் பிறந்தவர்கள் ஆணோ, பெண்ணோ யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. எனக்கு விவரம் தெரிந்தபோது, பிறகு, உமையாள்புரம், பாபுராஜபுரம், சுவாமி மலை என்று அடுத்தடுத்து இருக்கும் ஊர்களில், தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஒன்று விட்ட சகோதரர்கள், சகோதரிகள் என்று தான் இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியவந்தது. அவரவர் குடும்பம், வாழ்க்கை அவரவர்க்கு என்றாகியிருக்க வேண்டும். மாமா பிறந்த வருடம் 1910. அவர் FA பரிட்சை எழுதிக் கொண்டிருந்த போது தாத்தா இறந்தார் என்றால், அனேகமாக அது 1927-28 வருட வாக்கில் இருக்க வேண்டும்.

ஆசிரியப் பயிற்சி பெற்று மாமா பெற்ற முதல் உத்தியோகம் நிலக்கோட்டை சௌராஷ்டிரா உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக. 60-வது வயதில் ஓய்வு பெற்றதும் அப்பள்ளியிலிருந்து தான். மாமாவின் ஆசிரிய சேவைக்குக் கிடைத்த ஒரே அங்கீகாரம், மத்திய அரசு தரப்பிலிருந்து டாக்டர் ராதாக்ருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாட மத்திய அரசு வருடா வருடம் தரும் ராஷ்டிரபதியே வழங்கும் சிறந்த ஆசிரியர் விருது. அந்த விருது வாங்க மாமா தில்லி வந்திருந்தார், 1969-ம் வருடம். என்று என் நினைப்பு. மாமா பள்ளிக்கூட வாத்தியார். நான் நிலக்கொட்டை சௌராஷ்டிரா உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் போது மாமா ஏழாம் வகுப்பு ஆசிரியர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் வாங்கிய சம்பளம் ரூ 25 அணா 4. அனேகம் மற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் ரு 19 ஆக இருந்தது. இடைநிலையில் பலர் இருந்தனர். வீட்டு வாடகை நான் அங்கிருந்த கடைசி வருடங்களில் (1945-46) ரூ 6. மிகுந்த பணத்தில் தான், மாமா எங்கள் எல்லோரையும் சம்ரக்ஷ¢த்தார். நாங்கள் மாமா. மாமி, இரண்டு குழந்தைகள், நான், சின்ன மாமா பின் பாட்டி, ஆக மொத்தம் ஏழு பேர் மிகுந்த 19 ருபாயில் தான் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. பாட்டி எப்போதும் மாமாவிடம் புகார் செய்து கொண்டிருப்பாள். மாமாவுக்கு பதில் சொல்ல ஏதும் இராது. 'நான் என்னதான் செய்யறது சொல்லேம்மா' என்று தன் இயலாமையில் கதறுவார். நான் மாமாவை அறிந்த நாட்களில், அவர் முகம் மலர்ந்து பார்த்ததில்லை. பள்ளிக்கூடத்திற்கு நான் மேல்சட்டையில்லாமல் போன நாட்களும் உண்டு. மாமா ஆசிரியர் ஆதலால், எனக்கு சம்பளம் கிடையாது. புத்தகங்களும் விலைக்கு வாங்க வேண்டாம். ஆனால் சிலேட் நோட்புக் எல்லாம் வாங்கித் தான் ஆகவேண்டும்.


நான் மாமா பற்றியும், அம்மா பாட்டி பற்றியும் தான் எழுதி வருகிறேன். ஏனெனில், அந்த வயதில் அந்நாட்களில் நான் அறிந்தவர்கள் மாமாவும் பாட்டியும் தான். முதலில் தெரிந்த ஊர், மதுரை ஜில்லாவின் ஒரு சின்ன ஊரான நிலக்கோட்டை தான். இப்போது அது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும். நான் படித்த காலத்தில் மதராஸ் மாகாணத்தில் மொத்தம் எட்டு ஜில்லாக்கள் தாம். இப்போது நாம் வாழ்வது தமிழ் நாடு சரித்திரத்தின் பொற்காலம் என்று சொல்லப்படுவதால், அத்தகைய வளத்தில் 27-ஓ 28-ஓ மாவட்டங்களாக தமிழ் நாடு வளம் பெற்றுள்ளது. நிலக்கோட்டையில் இருந்த காலத்தில் என் பெற்றோர்கள், நிலக்கொட்டையில் இருக்கும் மாமாவும் பாட்டியும் இல்லை, அவர்கள் தஞ்சை ஜில்லாவின் ஒரு குக்கிராமத்தில், உடையாளுரில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிய வந்தது, எனக்கு ஏழோ எட்டோ வயதிருக்கும் போது, எனக்கு பூணூல் போடவேண்டுமென்று மாமா எல்லோரையும் உடையாளுருக்கு அழைத்துச் சென்றார். அப்போது தான் உடையாளூரிலிருக்கும் என் அப்பா அம்மா, ஒரு தங்கை எல்லோரையும் தெரிந்து கொண்டேன்.


நான் குழந்தையாக இருந்த போதே பாட்டி என்னைத் தன்னோடு அழைத்துக்கொண்டு நிலக்கோட்டைக்கு வந்து விட்டாள். மாமாவும் பாட்டியும் தான் என்னை வளர்த்தார்கள். படிக்க வைத்தார்கள். பாட்டியை நான் 'அம்மா' என்று தான் கூப்பிடுவேன். ஏனெனெல், வீட்டில் எல்லோரும், மாமா, மாமி, சின்ன மாமா எல்லோரும் பாட்டியை 'அம்மா' என்று தானே கூப்பிடுவார்கள். பூணூல் போட உடையாளூருக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த என் நிஜ அம்மாவை, "அம்மா' என்று அழைக்க எனக்கு வரவில்லை. இயல்பாக இல்லை. பாட்டிதானே எனக்கு அம்மா.

பாட்டிக்கு நான் மிகவும் செல்லம். தன் பிள்ளைகள் இருவரில், சின்ன மாமாவிடம் பாட்டிக்கு மிருந்த கரிசனம். சின்ன மாமா என்ன செய்தாலும் பரிந்து பேசுவாள். இடி படுவது மாமா தான். அவர் எதற்குத் தான் பதில் சொல்வார், எதைத்தான், எப்படித்தான் சமாளிப்பார், என்பதெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் மனம் மிகவும் நொந்து போகிறது. அவருக்கு எல்லாப் பக்கங்களிலும் இடி. அவர் சாது. அதே சமயம் முன் கோபியும் கூட. இப்போது நினத்துப் பார்க்கும் போது, அவருக்கு இருக்கும் வேதனைகள் போதாதென, நானும் அவரை மிகவும் வருத்தியிருக்கிறேன்.
பாட்டிக்குத் தெரிந்த, கிடைத்த மன நிம்மதி தரும் பொழுது போக்கு சினிமா தான். அதுவும் டூரிங் டாக்கீஸ் முகாமிடும் மூன்று மாத காலம். அதிலும் வருவது புராணப்படமாக இருந்தால். நிலக்கோட்டையில் ஒரு பிராமண விதவைக்கு வேறு ஏது போக்கிடம்? கதா காலட்சேபமா, பஜனையா, ஏதும் இல்லை. எந்த சுப காரியங்களிலும் பாட்டிக்கு இடம் இல்லை. பெண்கள் கூடிப் பேசும் வழக்கம் இன்னும் வரவில்லை. வந்தாலும், பாட்டி அந்த வயதைத் தாண்டியவள். புராணக் கதைகள் சொல்லும் தமிழ் படங்கள் தான் பாட்டியின் பக்தி சிந்தனை அறிந்த ஒரே பொழுது போக்கு மார்க்கம். நான் பாட்டிக்குச் செல்லமாதலால் என்னையும் சினிமாவுக்கு பழக்கி விட்டு விட்டாள். நாடகங்களும் அப்படித்தான். எத்தனையோ பாய்ஸ் கம்பெனிகள். அவற்றில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்று ஒரு பெயர் நினைவில் தங்கியிருக்கிறது. அது தவிர சில சமயம் ஸ்பெஷல் நாடகங்கள் என்று வேறு போடுவார்கள். அக்கால சூப்பர் ஸ்டார்கள் சிறப்பு வருகை தருவார்கள். V.A. செல்லப்பா என்று தான் நினைக்கிறேன்.அல்ல்து V.S செல்லப்பாவா, தெரியவில்லை. பின் எஸ். பி. தனலெக்ஷமி என்று ஞாபகம். இவர்கள் ஸ்பெஷல் நாடகங்கள் நடக்கும். எல்லாம் வீட்டுக்கு எதிரிலேயே, நிலக்கோட்டை- பெரியகுளம் ரோடுக்கு ஒரு புறம் சினிமா கொட்டகை. மறுபுறம் எங்கள் வீடு. அந்த நாடகங்களிலும் வள்ளியும், முருகனும், தெய்வயானையும் வருவார்களாதலால், பாட்டி அவற்றையும் பார்த்து விடுவாள். செல்லப்பா- தனலக்ஷ¢மி ஜோடி மிகப் பிராபல்யம் பெற்ற ஜோடி. நன்றாக பாடுவார்கள். என்ன நாடகம் என்று சொல்லி விட்டால் போதும். கதை தெரியும். பாத்திரங்கள் தெரியும். வசனங்கள் அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் கற்பனை செய்து பேசிவிடுவார்கள். பாட்டுக்களும் தெரிந்தது தான். அவர்களுக்கு எந்த ஒத்திகையும் தேவையில்லை. எந்த நாடகத்தில், எந்த சந்தர்ப்பத்தில் எந்த பாட்டு என்பதெல்லாம் ஏதும் கட்டுப்பாடுகள் கிடையாது. ஜனங்கள் கேட்டு ரசித்த எந்தப் பாட்டானாலும், எந்த நாடகமானாலும், பாடிவிடுவார்கள். கைதட்டலும் பெற்று விடுவார்கள்.

ஒரு சமயம் சிவராத்திரி அன்று இரவு முழுதும் விழித்திருக்க ஏதுவாக ஒரு படம் போட்டார்கள். படத்தின் பெயர் ஞாபகமில்லை. ஒரே பாட்டாகவே இருந்ததால், வேடிக்கையாக இருந்தது. வேடிக்கையாக இருந்ததால், பாட்டுக்களை எண்ண ஆரம்பித்தேன். 45-46 பாட்டுக்களை எண்ணியதாக ஞாபகம். இதற்கிடையில். ஒரு சீன் முடிந்து இன்னொரு சீன் ஆரம்பிக்கும் முன் திரை விழும் அந்நாட்களில். அப்போதெல்லாம். அந்த சிவராத்திரி தினத்திற்கென்று ஒரு டான்ஸ் ஷோவும் ஏற்பாடாகியிருந்தது. ஒரு பெண் பாவாடையும், குட்டையான சட்டையும் அணிந்து, லம்பாடிப் பெண் போன்ற தோற்றத்தில் ஒரு டோலக்கோ தம்பொரீனோ என்னவோ ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதை மற்றொரு கையால் தட்டியோ, அல்லது ஆடிக்கொண்டே தொடையில் அல்லது தூக்கிய முட்டியில் அடித்தோ 'சல் சல் என்ற தாள சப்தமெழுப்பிக்கொண்டு ஆடினாள். சிவராத்திரிக்கு சிவனின் நாமத்தை இரவு முழுதும் ஜபிக்க இதுதான் சரியான வழியென்று நினைத்தார்களோ என்னவோ. இம்மாதிரியான மசாலாக்கள் சேர்த்து மக்களுக்குக் கலைத்தொண்டும் ஆற்றி அத்தோடு பக்தி பாவத்தையும் இணைத்துவிடும் சாமர்த்தியம் அன்று ஒருவருக்கு அந்த சினிமாக் கொட்டகை முதலாளிக்கு இருந்தது.


ஒரு சமயம் ஒரு ஸ்பெஷல் ஷோவுக்கு வரவிருந்த ஒரு நல்ல அந்த வட்டாரத்தில் புகழ் பெற்ற பாடகர்/நடிகர் வரவில்லை. 'நான் இல்லாமல் நீ எப்படி நாடகம் போடப்போகிறாய், பார்த்துவிடுகிறேன்" என்று கருவிக்கொண்டு கழுத்தறுத்தாரோ என்னவோ. இன்னொருவரை உடனே எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வந்துவிட்டார் நாடக சபா முதலாளி. புதிதாக வந்தவர் எமகாதகர். கறுப்பும் ஒல்லியுமான சரீரம். ஆனால் சாரீரமல்லவா நாடகத்திற்குத் தேவை. தினம் ஒரு பாத்திரம், சில சமயம் ஒன்றுக்கு மேல். எந்தப் பாட்டு, எந்த நாடகத்திற்கான பாட்டு என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கவில்லை. கருவிக்கொண்டு போன ஸ்டார் கருவிக்கொண்டு போனது நல்லதாயிற்று. இந்த புதிய கறுப்பு ஒல்லி வித்வான் தன் பாட்டால், சாரீரத்தால் எல்லோரையும் மயக்கி விட்டான்,. எத்தகைய திறன்களெல்லாம் அந்நாட்களில் எந்த பட்டி தொட்டிகளில் எல்லாம் காணக் கிடைத்தன என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அதோடு கொஞ்சம் துக்கமாகவும் இருக்கிறது. அவர்கள் பிறந்த, காலம் அவர்களை அப்படி ஆக்கிவிட்டிருந்தது. இப்போதோ அவர்கள் எவ்வளவு லக்ஷக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டு, தமிழ் நாடு முழுதும் எவ்வளவு பிரபலமாகியிருப்பார்கள் என்று எண்ணித் திகைக்கத் தோன்றுகிறது. சம்பாத்தியமும் பிராபல்யமும் கிடைத்திருக்கலாம். ஆனால் இதைப் பெற அவர்கள் அன்று பெற்றிருந்த சங்கீதத் திறனைக் கொண்டவர்களாக இன்றிருந்திருப்பார்களா என்று நினைத்தால், பதில் அவ்வளவு சுலபமும் இல்லை. கிடைக்கும் பதில் மகிழ்ச்சி தருவதாகவும் இராது என்று தான் எண்ணுகிறேன்.


வெங்கட் சாமிநாதன

Wednesday, October 10, 2007

என்னைப் பற்றி சில வரிகளும், என் புத்தகங்கள் பற்றி முழுதும்


வெங்கட் சாமிநாதன் - தஞ்சை மாவட்டம், உடையாளூர் கிராமம். - 1.6.1933

வேலை தேடி வடக்கே பயணம் ஆகஸ்ட் 1949. 1950 லிருந்து 1991 வரை மத்திய அரசாங்கத்தின் பல்வேறு இடங்களில் வேலை. தொடக்கம் ஜெம்ஷெட்பூரில். கடைசியாக தில்லி. சென்னை திரும்பியது நவம்பர் 1999-ல்.
தொடர்புக்கு: தொலை பேசி: 2243 0483: செல்: 938088 0639


வெளியீடுகள்:

இலக்கிய விமர்சனம்: (கட்டுரைத் தொகுப்புகள்)

1. பாலையும் வாழையும்: அன்னம் பதிப்பகம், (1976)
2. எதிர்ப்புக் குரல், அன்னம் பதிப்பகம்(1978)
3, என் பார்வையில், அன்னம் பதிப்பகம் (1982)
4. என் பார்வையில் சில கவிதைகள்: கலைஞன் பதிப்பகம் (2000)
5. என் பார்வையில் சில கதைகள், நாவல்கள்: கலைஞ்ன் பதிப்பகம்(2000)
6. சில இலக்கிய ஆளுமைகள்: காவ்யா பதிப்பகம் (2001)
7. பான்ஸாய் மனிதன்: கவிதா பதிப்பகம், (2001)
8. இச்சூழலில்: மதி நிலையம் (2001)
9. விவாதங்கள், சர்ச்சைகள்: அமுத சுரபி பிரசுரம்(2003)
10, ஜன்னல் வழியே: சந்தியா பதிப்பகம் (2005)
11. புதுசும் கொஞ்சம் பழசுமாக: கிழக்கு பதிப்பகம்(2005)
12. யூமா வாசுகி முதல் சமுத்திரம் வரை: எனி இந்தியன் பிரசுரம் (2006)
13. க்டல் கடந்து: விருட்சம் பிரசுரம்: (2006)
14. இன்னும் சில ஆளுமைகள்; எனி இந்தியன் பிரசுரம் (2006)

நாடக விமர்சனம்:

15. அன்றைய வரட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை: அன்னம்
பதிப்பகம், (1985)
16. பாவைக் கூத்து அன்னம் பதிப்பகம்.(1986)
17. இன்றைய நாடக முயற்சிகள்: தமிழினி பிரசுரம்(2004)


திரைப்படம்

18. அக்கிரகாரத்தில் கழுதை {திரைப்பட பிரதி} (இரண்டாம் பதிப்பு: காவ்யா
பதிப்பகம்(1997)
19. திரை உலகில் (திரை விமர்சனங்கள்) காவ்யா பிரசுரம்(2003)

கலை விமர்சனம்

20. கலைவெளிப்பயணங்கள்: அன்னம் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு (2003)
21. கலை உலகில் ஒரு சஞ்சாரம்: சந்தியா பதிப்பகம்(2004)
22. சில கலை ஆளுமைகள், படைப்புகள்: சந்தியா பதிப்பகம் (2004)

தொகுப்புகள்

23. தேர்ந்தெடுத்த பிச்சமூர்த்தி கதைகள்: சாகித்ய அகாடமி (2000)
24. பிச்சமூர்த்தி னைவாக: மதிலையம்(2000)
25. யாத்ரா இதழ் தொகுப்பு: பாகம் ஒன்று, : சந்தியா பதிப்பகம்(2005)
26. யாத்ரா இதழ் தொகுப்பு: பாகம் இரண்டு: சந்தியா பதிப்பகம்(2005)

மொழி பெயர்ப்புகள்

27. A Movement for Literature: Ka.Naa.Subramaniam: சாகித்ய அகாடமி(1990)
28. தமஸ்: (நாவல்: ஹ’ந்தி மூலம்: பீஷ்ம சாஹ்னி) சாகித்ய அகாடமி(2004)
29. ஏழாம் முத்திரை: (Ingmaar Bergman's filmscript); (தமிழில்) : தமிழினி, (2001)

வாழ்க்கை விமர்சன குறிப்புகள்

30. வியப்பூட்டும் ஆளுமைகள்: தமிழினி (2004).

உரையாடல்கள்:

31. உரையாடல்கள்: விருட்சம் வெளியீடு, (2004)

விருது:

டோரண்டோ பல்கலைக் கழகமும் கனடா இலக்கியத் தோட்டமும் இணைந்து அளிக்கும வாழ்நாள் சாதனைக் கான இயல் விருது 2003.

பிற:

1. Consulting Editor for Tamil: Encyclopaedia of Indian Literature, Sahitya Akademi, Delhi

2. Script,commentary and conception: Yamini Krishnamoorthy's TV serial, Natyanjali (1991)

Sunday, October 07, 2007

நினைவுகளின் தடத்தில் (2)

என் மிகப் பழைய ஆரம்ப ஞாபகங்கள் சில அடிமனதில் பதிவானவை அவ்வப்போது மேலெழுந்து நினைவில் நிழலாடிச் செல்லும். இப்போது அவற்றை எழுத்தில் பதியத் தோன்றுகிறது.


அப்போது எனக்கு இரண்டரை அல்லது மூன்று வயதிருக்கலாம். அந்த வீட்டில் பாட்டியை நன்கு நினைவிருக்கிறது. மாமா வையும் நன்கு நினைவிருக்கிறது. கொல்லைப்புறம் இருக்கும் கிணற்றிலிருந்து தான் தண்ணீர் எடுத்து வரவேண்டும். பாட்டி குடத்துடன் கிணற்றுக்குச் செல்வாள். குடத்தில் தண்ணீர் நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டு திரும்பும் போது நான் பாட்டியை முந்திக்கொண்டு வீட்டுக்கு ஒடுவேன். இது ஒரு நினைவோட்டம்.

பின் மங்கலாக மனத்தில் திரையோடும் ஒரு துண்டுக் காட்சி. குரங்கு ஒன்று என்னைத் துரத்துகிறது. ஒரு பெரிய உயர்ந்த மண்டபத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு என்னை மிரட்டுகிறது. வெகு வருடங்களாக இந்த மாதிரி ஒரு காட்சி என்னில் அவ்வப்போது திரையோடினாலும், அந்த மாதிரி ஒரு இடத்தில் நான் இருந்ததாகவே நினைவில் இல்லை. என்னவோ என் மனதுக்குள் கற்பனை செய்து கொண்டிருக்கிறேனோ என்று நினைத்துக்கொள்வேன். ஆனாலும், அந்த மண்டபம், குரங்கு மிரட்டுவது எல்லாம் அவ்வப்போது, சிறுவயது ஞாபகங்கள் வரும்போது, இக்காட்சியும் உடன் வந்து மறையும். பின் ஒரு முறை பழனிக்குப் போயிருந்தேன், என் சின்ன மாமா பெண்ணின் கல்யாணத்திற்காக. பத்து வருடங்களுக்கு முன். அப்போது தான் நான் பழனிக்கு முதன் முறையாகச் செல்கிறேன். நிலக்கோட்டையிலிருந்து அப்படி ஒன்றும் வெகு தூரத்தில் இல்லை பழனி. அருகில் இருந்த போதிலும், என் மாமா தீவிர முருக பக்தர் என்ற போதிலும், பழனி சென்றதில்லை அது வரை.


அப்படித்தான்நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், கல்யாணத்திற்குப் பழனி சென்றவன் கோவிலைப் பார்க்கச் சென்ற போது அடிவாரக் கோயிலின் முகப்பு மண்டபம், என் சிறு வயதிலிருந்து திரையோடிக்கொண்டிருக்கும் மண்டபம் போலவே இருந்தது. சிறு வயதில் குரங்கு என்னைப் பார்த்து மிரட்டியது இங்கு தானோ? ஒரு வேளை மாமா என்னையும் அழைத்துக் கொண்டு பழனி வந்திருப்பாரோ? இருக்கலாம். என்னவோ தெரியவில்லை. ஆனால் அந்த அடிவார முகப்பு மண்டபத்தைப் பார்த்ததும், சட்டென சிறுவயதிலிருந்து இன்று வரை அவ்வப்போது நிழலாடிச் செல்லும் நினைவு, இப்போது கண்முன் பிரத்யட்சமாகியுள்ளது போன்று ஒரு திகைப்பு. எப்படியும் விளக்கவோ, விளங்கிக் கொள்ளவோ முடியாத dejavu -க்கள்.

வீட்டுத் திண்ணையில் கம்பி அடைப்பிற்குள் நின்று எதிரிலிருக்கும் ரோடையும் வண்டிப் பேட்டையையும் பார்த்து நின்று கொண்டிருப்பேன். அந்த வண்டிப் பேட்டையில் அடிக்கடி டூரிங் டாக்கீஸ் வந்து கொட்டகை போடுவார்கள். மூன்று நான்கு மாதங்களுக்கு சினிமா பார்க்கலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை படம் மாறும். திண்ணையில் உட்கார்ந்து கொண்டே சினிமா வசனங்களையும் பாட்டுக்களையும் கேட்கலாம். தியாகராஜ பாகவதர் நடித்த அசோக் குமார் படம் நன்கு நினைவிருக்கிறது. படத்திலிருந்து ஒரே ஒரு காட்சியும் ஒரே ஒரு பாட்டும் தான் இன்னமும் நினைவிலிருக்கிறது. குழந்தையை தூளியில் இட்டு தூங்கச் செய்யும் காட்சி: 'கண்மணி நீயே கண்ணுறங்காயோ' என்ற பாட்டு. என் பாட்டிக்கு சினிமா பார்ப்பதில் ஆர்வம் அதிகம். ஒரே ஒரு நிபந்தனை. அது புராணப்படமாக இருக்கவேண்டும். புராணப்படம் என்றால் சாயந்திரம் ஆறு மணி ஆட்டம் பார்க்கக் கிளம்பி விடுவாள். என்னையும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு. தரை டிக்கட். முக்காலணா. பாட்டிக்கு மாத்திரம் தான் டிக்கட். எனக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. அந்த டூரிங் டாக்கீஸ் முதலாளி நல்ல கறுப்பு. ஆனால் மிக வசீகரமான முகமும் சுபாவமும் கொண்டவர். மிகவும் சிரமப்பட்டு என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவர், 'பாட்டியம்மா, ஏன் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு சிரமப்படுறீங்க. இறக்கி விடுங்க. நான் டிக்கட் கேக்க மாட்டேன்.' 'அதுக்கு இல்லேடாப்பா, 'தூக்கிக்கோ'ன்னு ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறான். என்ன பண்றது சொல்லு, எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு" என்று பாட்டி சமாளிப்பாள். பின் வருடங்களில் ஒரு சமயம் 'திருவள்ளுவர்" என்ற படம் வந்தது. பாட்டி கேட்டாள். 'என்னடா இது புதுசா இருக்கே. புராணப் படமாடா?' என்று மாமாவைக் கேட்டாள். மாமா இல்லையென்று சொல்லிவிட்டார். ஆனால், மறு நாளே படம் பார்க்கக் கிளம்பி விட்டாள். " புராணப்படம் இல்லேன்னு சொன்னியே, அதிலே நாரதர் வரார். விஷ்ணு பகவான் வரார்'னு பாத்தவா சொல்றாளேடா" என்று மாமாவைக் குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கிவிட்டாள். 'பிடிச்சிருந்தா போய்ட்டு வாயேம்மா, ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன்' என்று மாமா சமாதானமாகச் சொன்னார்.

நான் நிலக்கோட்டையில் என் பதிமூன்றாவது வயது வரை மாமாவின் வீட்டில் தான் வளர்ந்து படித்து வந்தேன். வண்டிப்பேட்டைக்கு எதிர் வீட்டில் எவ்வளவு வருடங்கள் இருந்தோம் என்பது நினைவில் இல்லை. அந்த வண்டிப் பேட்டையின் அருகிலேயே, அந்த ரோடில் சற்றுத் தள்ளி எதிர்புறமாக நீளும் தெருவில் ஒரு வீட்டுக்குக் குடி பெயர்ந்தோம். குடி பெயரும் போது, ரொம்ப சின்னச் சின்ன சாமான்களை, புது வீட்டுக்கு நான் எடுத்துச் சென்றது ஞாபகம் இருக்கிறது. வண்டிப்பேட்டையில் அவ்வப்போது முகாமிடும் சினிமாக் கொட்டகை அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய இடம் பிடித்துக் கொள்ளும். புதிதாகக் குடிபெயர்ந்த வீடும் அப்படி ஒன்றும் தூரத்தில் இல்லை. புதிய வீட்டின் தெரு முனையில் வண்டிப் பேட்டையின் வலது பக்கச் சுற்றுச் சுவரைப் பார்க்கலாம். படம் பார்க்க முடியாதே தவிர, சினிமா வசனங்கள், பாட்டுக்கள் எல்லாவற்றையும் புதிய வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டே கேட்கலாம். இப்போ என்ன சீன் நடக்கிறது?, அடுத்தாற்போல் யார் வரப்போறா? என்று எங்கள் பேச்சுக் களிடையே பரிமாறிக் கொள்வோம். மூன்று நாட்களுக்கொரு முறை புராணப்படமாக இருந்தால் பாட்டி என்னையும் அழைத்துக் கொண்டு போவது தொடரும்.

ஒரு முறை டூரிங் டாக்கீஸ் முகாமிட்டிருந்த காலத்தில் சிவராத்திரி இடைப்பட்டது. அப்போது இரவு முழுதும் படம் ஒடும்படியான படம் ஒன்று, பெயர் நினைவில் இல்லை. ஒரே பாட்டாக இருந்தது. வந்தால், வந்தேனே என்று ஒரு பாட்டு. போகும்போது 'போய் வருவேன்' என்று நீட்டி முழக்கி விடை பெற்றுக்கொள்ள ஒரு பாட்டு. அந்தக் காலத்தில் எந்த படமும் பாட்டுக்கள் நிறைந்ததாகவே இருக்கும். பாட்டுக்கள் தான் படத்தின் வெற்றிக்கு அச்சாரமாக இருக்கும். நாங்கள் இருந்த இடத்திலிருந்து, வீடு மாறிய போதிலும், வீட்டுக்கு அருகாமையில் தான் ஒரு பெரிய சுற்றுச் சுவர் கொண்ட மைதானத்தில் சனிக்கிழமை தோறும் வாராந்திர சந்தை கூடும். பெரிய மைதானம். பெரிய சந்தை அது. காய்கறி, மீன் வியாபாரத்தோடு, மாட்டுச் சந்தையும் அப்போது உண்டும். சந்தை தினத்தன்று வியாபாரம் முடிந்து சினிமாப் பார்க்கக் கூட்டம் நெரியும். படம் முடிந்ததும், தங்கள் கிராமத்துக்குத் திரும்பும் வண்டிகள். அப்போது சினிமாப் பாட்டுக்களை பாடிக்கொண்டே தான் வண்டி ஓட்டிச் செல்வார்கள். 'மானமெல்லாம் போன பின்பே, வாழ்வதும் ஓர் வாழ்வாமோ?' என்ற பாட்டை சந்தையிலிருந்து திரும்பும் வண்டியோட்டிச் செல்பவர்கள் பாட அடிக்கடி கேட்டிருக்கிறேன். சில நினைவுகளும் காட்சிகளும் மிக ஆழமாகப்பதிந்து விடுகின்றன. மிகச் சிறு பிராயத்தில் கேட்டவை, நினைவில் பதிந்தவை.; காரணம் வீட்டின் எதிரிலேயே சினிமா கொட்டகை இருந்ததா. இரவு பூராவும் சினிமா கேட்டுக்கொண்டிருந்ததா? பாட்டிக்கு புராணப் படங்களாக சினிமா பிடித்து விட்ட காரணமா? புராணப்படங்கள் தான் பாட்டிக்கு ஒரே பக்தி மார்க்கமாக இருந்தது காரணமாக இருக்கலாம். தெரியாது. என்னவாக இருந்தாலும், 'எனக்குங்க இரண்டு வயசிலேர்ந்தே கலை ஆர்வம் வந்துட்டதுங்க' என்று நான் என் அவதார மகிமைகளை சினிமா நடிகர்களைப் போல சொல்லிப் பெருமை பேசிக்கொள்ள முடியாது. நிலக்கோட்டையிலும் சுற்று வட்டாரத்தில் இருந்த பட்டி தொட்டிகளிலும் இருந்த எல்லா ஜனங்களுக்கு இருந்த சினிமாப் பைத்தியம் தான் எனக்கும் இருந்தது.

நிலக்கோட்டையில் தஞ்சை மாவட்ட சூழல் கிடையாது. கோவில் பிர வசனங்கள், கதா காலட்சேபங்கள் கிடையாது. ராமாயண பாரதக் கதைகள் கேட்க கதா காலட்சேபங்கள் நிலக்கோட்டையில் கிடையாது. நிலக்கோட்டையில் இரண்டு பெரிய கோயில்கள் இருந்தன. மிகப் பிரசித்தமானது மாரியம்மன் கோயில். அதை ஒட்டி பெருமாள் கோயில் ஒன்றும் உண்டு. நானோ மாமாவோ அல்லது நாங்கள் வேறு யாருமோ பெருமாள் கோயிலுக்குப் போய் ஞாபகமில்லை. மாரியம்மன் கோயில் தான் மிகப் பிரசித்தம். மாரியம்மன் உத்சவமும் மிகப் பெரிய அளவில் நடக்கும். கடைத் தெரு முழுதும் பந்தல் போட்டு விடுவார்கள். என் சிறுவயதுப் பிராய நிலக்கோட்டை சின்ன ஊர்தான். சுமார் 6000 பேர் வசிக்கும் ஊர். ஆகவே மாரியம்மன் உத்சவத்தின் போது ஊரே விழாக்கோலம் கொள்ளும். இரண்டு கோயில்களும் நிலக்கோட்டையின் ஒரு கோடியில். நாங்கள் இருந்தது நிலக்கோட்டையின் மறு கோடியில். பாட்டியை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு போன நினைவு எனக்கில்லை. நானும் மாமாவும் தான் போவோம். மாமா மிகவும் பக்தி நிறைந்தவர். பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆக, புராணக் கதை சொல்லும் தமிழ் சினிமாப் படங்களில் தான் பாட்டி பக்தி பரவசம் அடைவாள். மிக நன்றாக நினைவிருக்கும், காதில் இன்னமும் பாட்டியின் குரலில் ஒலிப்பது, ஏதோ ஒரு படத்தில் செருகளத்தூர் சாமா கிருஷ்ணனாக நடித்திருப்பார். அவர் அடிக்கடி குந்தியை, 'அத்தை', என்று விளித்துப் பேசுவார். பாட்டிக்கு அதைக் கேட்டு மிகவும் பரவசமடைந்து போவாள். படம் பார்த்து வீடு திரும்பிய பாட்டி, வீட்டுக்கு வருவோரிடம் தான் சினிமா பார்த்ததைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போவாள். "கிருஷ்ணன் 'அத்தே' 'அத்தே', ன்னு கூப்டறது ஒண்ணே போறுமே. எத்தனை தடவ வேணும்னாலும் கேட்டுண்டே இருக்கலாம் போல்ருக்கு" என்பாள்.