Sunday, September 30, 2007

எங்களைச் செல்லரிக்கும் தாலிபான்கள்

மனித சிருஷ்டிகள் சிலவற்றைப் பற்றி நினக்கும்போதெல்லாம் எழும் உணர்வை வியப்பு என்று சொல்வது மிக மிகச் சாதாரணமாகத் தோன்றுகிறது. இரண்டாயிரம் வருஷங்களுக்கு மேலாக வானளாவ நின்ற பாமியான் புத்தர் சிலைகள், எலிபெண்டா குகைகளில் காணும் திரிமூர்த்தி, சிரவணபேலாவில் உள்ள கோமதேஸ்வரர் மூர்த்தி, எல்லாம் மிகப் பிரும்மாண்டமானவை. மனிதனின் கற்பனைக்கு எல்லை இல்லை என்றாலும், அதன் செயல் சாத்தியம் கற்பனைக்கு ஒரு எல்லை வகுக்கும். அந்த எல்லையைப் பற்றியே சிந்தனை இல்லாது, தன் கற்பனக்கு உருக்கொடுக்க முனைந்து அதை சாத்தியமாக்கிக் காட்டியுள்ளானே, அதை நினைத்து அடையும் வியப்புக்கு எல்லை இல்லை.
சரிவின்றி, நெட்ட நெடிதுயர்ந்து நிற்கும் மலை, அதைக்குடைந்து ஒரு பிரும்மாண்ட சிலை எழுப்புவதென்றால், அதன் செயல் சாத்தியம் என்ன, மலையைக் குடையவும் உருவம் செதுக்கவும், அவ்வளவு உயரத்தில், அதற்கான கருவிகள் தொழில் நுட்பங்கள்.... 2000 வருடங்களுக்கு முன், மனித சஞ்சாரமோ, வாழும் வசதிகளோ அற்ற வனாந்திரமான மலை அடுக்குகளில்... என்று யோசனைகள் படர்கின்றன. அது சாத்தியமாகியிருக்கிறது. ஆஃப்கனிஸ்தான் இவ்வளவு நீண்டகால தன் சரித்திரத்தில் அடுக்கடுக்கான படையெடுப்புகளை, ஆக்கிரமிப்புகளை, வன்முறை நிறைந்த சரித்திர மாற்றங்களை, கொள்ளைகளை அது கண்டிருக்கிறது, கிரேக்கர்களிலிருந்து தொடங்கியது, இன்று அமெரிக்கர்கள் வரை நீண்டுள்ளது. இவ்வளவுக்கிடையிலும் பாமியான் புத்தரின் நின்ற திருக்கோலம் அவ்வளவு மாற்றங்களுக்கும் சாட்சியாய் நின்றிருக்கின்றது. எலிபெண்டா குகை சிற்பங்கள் போர்த்துகீசியரின் குண்டுப் பயிற்சிக்கு களமாகியிருந்திருக்கிறது. உலக மக்களின் வியப்பிற்கும், ஆஃப்கன் மக்களின் கர்வத்திற்கும் காரணமாகி இவ்வளவு ஆயிரம் ஆண்டுகாலமாக உயிர்த்திருந்த அந்த புத்தர் சிலைகள், ஆஃப்கானியர் சிலருக்கு, பாகிஸ்தானின் மதரஸாக்களில் இஸ்லாமியக் கல்வி பயின்ற தாலிபான்களுக்கு, 'இஸ்லாம் என்னும் இனிய மார்க்கத்திற்கு' விரோதமான ஒன்றாகிவிட்டன. பீரங்கி குண்டுகளுக்கு இரையாக அதிக நேரம் ஆகவில்லை. அலெக்ஸாண்டிரியா, யாழ்ப்பாணம் நூலகங்கள், ஜெர்மானிய நகர தெருக்களில் யூதர் எழுதிய புத்தகங்கள் குவிக்கப்பட்டு எரிந்து சாம்பலாக எவ்வளவு மணிகள் தேவையாயிருக்கும்? குண்டு வீசித் தகர்த்தவர்கள், செயல்வீரர்கள், சரித்திரத்தையே மாற்றி எழுத முனைந்தவர்கள். உலகை காஃபிர்களின் ஆபாசத்திலிருந்து காப்பாற்றும் புனித காரியத்தில் தம்மை தியாகம் செய்யத் தயாராகிவிட்டவர்கள். தினம் ஐந்து முறை அல்லாவை தியானிக்க நமாஸ் படிப்பதை கட்டாயமாக்கியவர்கள். நமாஸ் வேளை வந்ததும், வீதியில் நடப்பவர்களையெல்லாம் அல்லாவைத் தொழ நமாஸ”க்கு துப்பாக்கி முனையில் விரட்டியவர்கள். பாட்டும் கூத்தும் இஸ்லாமுக்கு பகை எனக்கண்டு அவற்றுக்கு தடை விதித்தவர்கள். அனேக கலை வெளிப்பாடுகள் இஸ்லாத்துக்கு விரோதமாக கருதப்படுகின்றன. காபூலின் புகழ் பெற்ற புராதனப் பொருட்காட்சியகத்தின் கலைச் செல்வங்களையெல்லாம் தாலிபான்கள் உடைத்து நாசமாக்கினர். அவற்றைக் காப்பாற்றப் பட்ட பெரும் பாட்டைப் பற்றி காட்சியகத்தின் பொறுப்பில் இருந்த முஸ்லீம் அறிஞர்களின் கதை வேதனை தருவது. எல்லாம் அல்லாவின் பெயரில் நடப்பவைதான். அதே அல்லாவின் பெயரைத் துதித்து வாழும், படிப்பு வாசனையற்ற சாதாரண ஆஃப்கன் ஏழைத் தொழிலாளி, புத்தர் சிலைகள் சிதைக்கப் பட்டது குறித்து வேதனைப் பட்டுப் பேசுகிறான். அவனும் அல்லாவின் பிரியத்துக்குரியவன் தான்.
விஷயம் என்னவென்றால் இவர்கள் காரியத்திற்கும் அல்லாவுக்கும் ஏதும் சம்பந்தமில்லை. எகிப்தில் நைல் நதியின் குறுக்கே அஸ்வான் அணைக்கட்டில் மறையவிருந்த அபுஸ’ம்பல் கோவிலின் பிரும்மாண்ட சிற்பங்கள் எல்லாம் சிதைவுறாது பெயர்க்கப்பட்டு பாதுகாப்பாக வேறு இடத்தில் திரும்ப் நிர்மாணிக்கப்பட்டன. அவர்களும் இஸ்லாமியர்கள் தான். அல்லாவைத் தொழுபவர்கள் தான். ஆனால் தாலிபான்கள் இஸ்லாமைப் பற்றியும் அல்லாவைப் பற்றியும் இவர்கள் கொண்டிருக்கும் நினைப்புகள், இந்நினைப்புகள் குடிகொண்டிருக்கும் இவர்கள் மன அமைப்புகள் கொடூரமானவை. கெட்டிப்பட்டவை. மாறுபட்ட சிந்தனையோ, பார்வையோ வாழும் உரிமை மறுப்பவை. இத்தகைய மன அமைப்பு அதிகாரம் பெற்று விட்டால், தனது தவிர மற்றெல்லாவற்றையும் அழித்து ஒழிப்பவை. பாமியான் புத்தர், ஒரு சிலையல்ல. அது ஒரு உருவகம். ஒரு கால கட்டத்தின் மனித சிந்தனையின், கற்பனையின், வரலாற்றின், வாழ்வின் பின் இரண்டாயிரம் ஆண்டு தொடர்ந்த அதன் நீட்சியின் இது அவ்வளவின் உருவகம் அது. அந்த உருவகம் கடந்த காலத்தின் எண்ணற்ற வேறுபட்ட சிந்தனைகளை மனதில் எழுப்பும் சக்தியை தன்னுள் கொண்டது. அது இடையில் வந்த ஒரு சிலரின் வன்முறை அழிவு நோக்கால் சில மணி நேரங்களில் ஒன்றுமில்லாததாகி விட்டது. ஜப்பான், ஸ்ரீலங்கா போன்ற பல நாடுகள் அச்சிலைகளை பெயர்த்து எடுத்துச் செல்லக் கோரியது மறுக்கப்பட்டது
தாலிபான்கள் பாமியான் சிற்பங்களை அழித்தது உலகையே அதிர வைத்தது. அதன் ஃபாஸ’ஸ்ட் செயல்பாடும் வன்முறையும்தான் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட இந்த அளவில் இல்லாவிட்டாலும் இதே மனப்பான்மையை மாவோவின் கலாச்சாரப் புரட்சி காலத்தில் சைனாவும் அழிபடத் தொடங்கியது. நல்ல வேளையாக, இப்போது, žன அரசு தன் சரித்திரத்தையும் கலைகளையும் பராமரிப்பதில் தீவிர அக்கறை காட்டுகிறது. பல பழங்கால வீடுகள், தெருக்கள் கூட அதன் சரித்திரப் பழமை மாறாது பாதுகாக்கப் படுகின்றன. மாவோ காலத்தில் வேதாகமமாக மதிக்கப்பட்ட கம்யூனிஸமும், மாவோ சிந்தனைகளும் இப்போது பிரார்த்தனைப் பீடத்தில் இல்லை. ஒரு கால கட்ட சிந்தனை அவ்வளவே. ஆனால். பாகிஸ்தான் தொலைகாட்சியிலோ வானொலியிலோ குரான் பற்றிய பிரசங்கங்களைக் கேட்பவர்கள், முகம்மது நபியின் தோற்றத்திற்குப் பின் தான் அதுகாறும் இருளடைந்திருந்த உலகம் ஓளிபெற்றது என்று பேசப்படுகிறது. And Then there was Light என்ற விவிலிய வாசகங்கள் போல.
இதெல்லாம் போகட்டும். நான் சொல்ல வந்தது நம்மைப் பற்றி. ஐந்து வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்ததும், நான் பெற்ற முதல் அதிர்ச்சி, சோழா ஹோட்டலோ என்னவோ பலமாடிகள் கொண்ட பெரிய கட்டிடம், அதன் சுற்றுச் சுவர் மூன்று அடி அகலமே கொண்ட நடைபாதையை ஒட்டி இருக்கும். அதன் ஒர் மூலையில் உட்புறமாக ஒரு சிறு அறிவுப்பு குறுஞ்சுவர் எழுந்திருக்கும், கரிய சலவைக்கல் தாங்கி. அக்கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகங்கள் இப்போது ஹோட்டல் இருக்கும் இடத்தில் தான் காந்தி சென்னைக்கு முதன் முதலாக வந்து இங்குள்ள தலைவர்களைச் சந்திக்க தங்கியிருந்த வீடு. வீடு போன இடம் தெரியவில்லை. இருப்பது இச்சலவைக்கல் வாசகம் தான். கடந்த நான்கு வருடங்களாக, ஜெயா தொலைக்காட்சியின் செய்தித் தொகுப்பில் இடையே 3 நிமிடத்திற்கு 'காலச்சுவடுகள் ' என்றொரு ஒளி பரப்புவார்கள். அனேகமாக நான் அதை தவற விடுவதில்லை. காலை 7.10லிருந்து 7.13க்குள் அதைப் பார்த்துவிடலாம். தமிழனின் இருபது நூற்றாண்டு கால சரித்திரத்தில் பாழ்பட்டு மறைந்து கொண்டிருக்கும் சரித்திர, கலைச் சின்னங்களை ஒவ்வொரு நாளும் காலச்சுவடுகள் பகுதியில் பார்க்கலாம். நாயக்கர் கட்டிய அரண்மனைகள், 8-ம் நூற்றாண்டு பாண்டிய, சோழ அரசர் நிர்மாணித்த கோயில்கள் சேதுபதி அரசர் கட்டிய சத்திரங்கள், படித்துறைகள், என. அவ்வளவும் பாழடைந்து சிதிலமாகிப் போனவை. மண்டிக்கிடக்கும் புதர்களுக்கிடையே பாதி மறைந்து கிடக்கும் கோபுரத்தில் செடிகளும் மரங்களும் செழிப்புடன் வளர்ந்து வான் நோக்கும். இப்பகுதி எப்போது ஆரம்பித்தது எனத் தெரியாது. எனக்கு ஐந்து வருடங்களாக நாள் தவறாது தரப்படுவது தெரியும். இந்த ஐந்து வருடங்களில் 5 x 365 = எவ்வளவு ஆயிற்று? நான் கணக்குப் போடவில்லை. 1700 க்கும் மேலாக இருக்கும். இந்த பகுதி இன்னும் எத்தனை வருடங்களுக்கு தொடருமோ தெரியாது. அவ்வளவுக்கு இந்த அரும் பெரும் தமிழ் நாட்டில் பாழடைந்து கிடக்கும் வரலாற்று கலைச் செல்வங்கள் மண்டிக்கிடக்கின்றன. இஸ்ரேலிலிருந்து வந்த ஒரு நாடகக் கலைஞர் சொன்னார், 'எங்கள் நாட்டில் ஒவ்வொரு கல்லும் ஒரு வரலாறு சொல்லும்' என்று. கை நிறைய கூழாங்கற்களை வைத்துக் கொண்டே அவர் ஒரு நாடகம் நிகழ்த்திச் சென்று விட்டார். கள்ளிக்கோட்டையில் ஒரு கடைத்தெருவின் நடுவில் இருந்த எஸ்.கே பொற்றெக்காடின் சிலையைக் காட்டி, இந்த கடைத்தெருவுக்கே அமரத்வம் தந்து விட்டார் பொற்றெகாட் என்றார் கேரள நண்பர். இந்த பூமி ஜான் ஆபிரஹாம் நடந்த பூமி என்றார். எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. அவர்களது பெருமை உணர்வும் கர்வமும் மன நெகிழச் செய்தது. ' ஆனால், தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரும் வரலாறு சொல்லும்" என்றார். இப்பெருமையும் கர்வமும் நிறைந்த சொற்களை நான் தமிழ் நாட்டில் யாரிடமும் கேட்டதில்லை. நமது கலைகளைப் பற்றிய, வேறு யாருக்கும் இல்லாத நீண்ட வரலாற்றைப்பற்றிய உணர்வு இங்கு யாரிடம் கண்டோம். ஜெயா தொலைக்காட்சியில் காலச்சுவடுகள் பற்றிச் சொல்பவர், ஏதோ தகவல் அறிவிக்கும் பாணியில் எவ்வித இழப்புணர்வும் இன்றி தான் இலக்கியத் தமிழ் என்று கருதிக்கொண்டிருக்கும் அலங்கார வார்த்தைகளில் ஏதோ சொல்லி முடிக்கிறார். அபத்தமான அலங்கார வார்த்தைகளே கலையாகிவிடும், இலக்கியமாகி விடும் என்ற எண்ணம் பரவல்லாகக் காணப்படுகிறது. மேல்மட்டத்திலிருந்து கீழ்த் தொண்டன் வரை. நுண்ணிய உணர்வுகளுக்குத் தான் இங்கு பஞ்சமாகி விட்டது. ஒவ்வொரு பாழடைந்த கலைச் செல்வத்தைப் பற்றியும் ஒரு நிமிடம் சொன்ன பிறகு அலங்கார வார்த்தைகள் முத்தாய்ப்பாக வந்து விழும். ஒரு உதாரணம்: "பக்தர்களுக்கு அபயமளித்துக் கொண்டிருந்த கோயில் இப்போது அபாயமளித்துக் கொண்டிருக்கிறது" "வரலாற்று ஆசிரியர்களைத் தவிக்க வைத்தது இது. இன்று வரலாற்றில் தவித்துக் கொண்டிருக்கிறது. " "லோகமாதா கட்டிய கோயில், இப்போது இந்த லோகத்திலிருந்தே விடைபெற்றுக் கொண்டிருக்கிறது" ஒவ்வொரு நாளும் ஒர் பாழடையும் கலைச்சின்னம் ஒரு அலங்கார வாக்கியத்துடன் மறக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு சில சிதிலங்களுக்கு 'தொல் பொருள் ஆய்வினரின் பாதுகாப்பில் உள்ளது" என்ற ஒரு அறிவுப்புப் பலகை இருக்கும். அவ்வளவே. பாது காப்பு அவர்கள் கையில் இல்லை. நமக்கு இவை பற்றி ஏதும் இழப்புணர்வு இல்லை எனில், நுண்ணிய கலை உணர்வு இல்லை எனில் வேறு எதுவும் பாது காப்பு தராது. கட்சி மகா நாடுகள், பிரம்மாண்ட கட்-அவுட் டுகளுக்கு ஆகும் செலவில் எத்தனையோ பாதுக்காக்கப் படக்கூடும். நமக்கு அது பற்றி உணர்வு இல்லை. நாம் நாஜி ஜெர்மனியை விட, ஆப்கனிஸ்தானை விட சைனாவை விட எகிப்தைவிட மோசமான நிலையில் இருக்கிறோம். காரணம் இடையில் நேர்ந்த ஒரு அராஜகம் உணரப்பட்டு திருத்தங்கள் நிகழ்கின்றன. இங்கு நம்மைத் திருத்திக் கொள்ளும் நிலையில் நாம் இல்லை. அழிவு மெதுவாக, நிச்சயமாக, திருந்தும், சிந்தனை இல்லாது முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. திடீரென நிகழ்ந்தால் அது சோக சம்பவம். நமக்கு அது பிரக்ஞையே இல்லாது கொஞ்சம் கொஞ்சமாக நாம் அழிந்து கொண்டிருந்தால் அது இயற்கை, நாம் ஒன்றும் செய்வதற்கில்லை என்று சமாதானம் செய்து கொள்கிறோம். தாலிபான்களை விட நாம் வெற்றி நிச்சயம் கொண்டவர்கள்.


வெங்கட் சாமினாதன்

Thursday, September 13, 2007

நினைவுகளின் தடத்தில்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அண்ணா கண்ணன் நான் என் சுயசரிதத்தை எழுதவேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார். அவர் அமுதசுரபியில் பொறுப்பு வகித்த காலத்திலிருந்து என்று சொல்லவேண்டும். என் வாழ்க்கை ஏதும் அதிசயங்களும் அவதார மகிமைகளும் நிறைந்ததென்று அவர் எண்ணியுள்ளதாக யாரும் அவசர அவசரமாக ஒரு முடிவுக்கு வரவேண்டாம். இப்படியான தம் அவதார மகிமைகளுடன் தான் நம் சினிமா நக்ஷத்திரங்கள் தம் பேட்டிகளைத் தொடங்குவதை நாம் படித்துப் பழக்கப்பட்டிருக்கிறோம். நம் கவிஞர்களுக்கும் சில எழுத்தாளர்களுக்கும் இப்படியான பிரமைகள் உண்டு தான். நியாயமாக நம் நர்த்தகிகளும், பாடகர்களும் தம் குழந்தைப் பருவத்திலிருந்தே இப்படியான சூழலில் தான் வளர்ந்துள்ளதாகச் சொல்ல வேண்டும். அவர்களைப் பற்றிய வரை அது உண்மை. நம்மூர் அரசியல் வாதிகள், சினிமா நடிகர்கள் தம் வாழ்க்கையை எழுதலாம். மிக சுவாரஸ்யமாக இருக்கும். அவர்கள் எழுதுவது உண்மையே யானால், அது நம் பண்பாட்டுக் கூச்சல்களுக்கும் நிமிடத்திற்கு ஒரு முறை, பேருந்துப் படிகளில் ஏறி இறங்கும் போதெல்லாம் என்று நமக்கு நினைவுறுத்தப்படும் வள்ளுவ வாசகங்களுக்கு அடியில் ஓரும் நீரோடையின் குணம், மணம் என்ன என்பது தெரிய வரும். இப்படியெல்லாம் சொல்லி அலட்டிக்கொள்ளாத மண்ணில், மகாராஷ்டிரத்தில் ஹம்ஸா வாடேக்கரும், வங்காளத்தில் வினோதினியும் தம் சுயசரிதையை ஒழிவு மறைவு இல்லாது அப்பட்டமாக எழுதியிருக்கிறார்கள். நம் அரசியல் தலைவர்களிடமிருந்தி இப்படி எழுத்துக்கள் பிறக்கு மானால்.......பின் அவர்கள் எப்படி அரசியல் வாதிகளாக இருப்பார்கள்?
ஆனால் என் வாழ்க்கையில் அப்படி எழுத ஒன்றுமே இல்லை. எழுத்துலகிலும் வெளியிலும் சில உன்னதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது சில குறைகளையும், பலவீனங்களையும் மீறியும் அவர்கள் உன்னதமான மனிதர்கள் தான். சில கடைத்தரமான இழிதகைகளையும் சந்தித்திருக்கிறேன், எழுத்துலகிலும், வெளியிலும். அவர்களது சில பலங்களையும் மீறி அவர்கள் இழிந்த மனிதர்கள் தான். 74 வருடங்கள் என்பது ஒரு நீண்ட காலம் தான். எவ்வளவோ மாற்றங்கள், வாழ்க்கை நியதிகளில், கலாச்சாரத்தில், வாழ்க்கை மதிப்புகளில். அவற்றை நினைத்துப் பார்த்தால், திகைப்பாக இருக்கும்.
இப்போது சென்னையின் புறநகர்ப் பகுதியான மடிப்பாக்கத்திற்கு வந்து எட்டு வருடங்களாகிவிட்டன. இந்த எட்டு வருடங்களில் நான் ஒரு சிட்டுக்குருவியைக் கூட இங்கு பார்த்ததில்லை. என் சிறு வயதில் நிலக்கோட்டை என்னும் தண்ணியில்லாக் காட்டில் கூட இராக்காலங்களில் தெருவில் பாடிவந்த இராப் பிச்சைக்காரனை நான் இங்கு பார்த்ததில்லை. பிச்சைக்காரர்கள் மறையவில்லை. அவர்கள் வருகிறார்கள். ஒரு பந்தாவோடு.
க.நா.சு. சொல்வார்: 'யாருடைய வாழ்க்கையிலும் சுவாரஸ்யமான சம்பவங்களும், மனிதர்களும் எதிர்ப்பட்டிருப்பார்கள். அவர்களைப் பற்றி கொஞ்சம் சிரத்தையெடுத்து எழுதினால் நல்ல சிறுகதைகள் நமக்குக் கிடைக்கும். ஆனால் நாவல் எழுதும் விஷயம் வேறு' என்பார். இப்படி எழுதியும் இருக்கிறார். அப்படிப் பார்த்தால், நானும் எழுபத்தைந்தாவது வயதில் அடி எடுத்து வைத்து விட்டேன். சென்னைப் பேருந்துகளும், பெண்களிடம் தன் வீரத்தைக் காட்ட நினைக்கும் டூ வீலரில் தம்மை ராணா பிரதாப் சிங் என்று கற்பித்து அமர்ந்திருக்கும் இளம் மீசைக் காரர்களும், மடிப்பாக்கம் தெருக்களுக்கு அம்மை வடு இட்டிருக்கும் குண்டு குழிகளும் என்னிடம் இரக்கம் காட்டினால் இன்னம் கொஞ்ச நாள் இருக்கலாம். இந்த நாட்களில், க.நா.சு. சொன்னது போல என் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட சுவாரஸ்யமான்ன மனிதர்கள் சம்பவங்கள் பற்றி எழுதலாம். அவர்கள் தான் என் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கியவை. இல்லையெனில் இந்த 74 வருடங்களும் தம் பாட்டில் தானே ஒடிய நாட்கள் தான். நான் அதற்கு ஏதும் வண்ணம் கொடுத்ததாக நினைக்கவில்லை. இதில் ஏதும் ஒரு ஒழுங்கு இராது. கால ஒழுங்கு, சம்பவ அடுக்கில் ஒர் வரிசைக் கிரமம் என்பது போல ஏதும் இராது. அவ்வப்போது எங்கிருந்தோ எங்கெங்கோ தாவுதல் நிகழும். நினைத்த போது இதைத் தொடரலாம். இடையில் வேறு விஷயங்களை எழுதத் தோன்றினால், இது அவற்றிற்கு இடம் அளிக்கும். மற்ற படி ஈக்ஷ்வரோ ரஷது.
நான் ஐம்பதுக்களில், ஹிராகுட்டிலும், புர்லாவிலும் பின் தில்லியில் அறுபதுகளில் இருந்த போது பழகிய இருவரை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. அவர்களை 40- 50 வருடங்களுக்குப் பிறகு சந்தித்தேன். அவர்களில் ஒருவரை எனக்கு முற்றிலுமாக அடையாளம் தெரியவில்லை. வெண்குஷ்டம் மாத்திரம் காரணமில்லை. கடைசியாக பார்த்து 50 வருடங்களுக்கு மேலாயிற்று. 'யார் என்று அடையாளம் சொல்லச் சொல்லி புதிர் விட்டுக்கொண்டிருந்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு யார் என்று எனக்குச் சொல்லப்பட்டதும், 'டேய் நீயாடா, எப்படிடா இப்படி மாறினே?' என்று கத்தத் தோன்றிற்று. எப்படி 'டா' போட்டு பேசுவது? நீண்ட காலம் கழித்துச் சந்திக்கும் எங்கள் யாருக்குமே அது அழகாக இருக்குமா? தயக்கத்தை மீறுவது எப்படி? 'டேய் ' என்று சத்தம் போட்டிருந்தால் தான் பழைய நாட்களின் நெருக்கத்துக்கு நியாயம் செய்வதாக இருந்திருக்கும். நாங்கள் பொய் மரியாதைகளில் தஞ்சம் புகுந்தோம்.
நினைத்துப் பார்க்கத் தோன்றியது. இந்த உலகில் என் இந்த இருப்பை உணர்த்திய முதல் கணம், என் ஞாபகத்தில் எது என்று. அது அக்காலத்தில் வளம் கொழித்த தஞ்சை ஜில்லாவில் இல்லை. கோடை காலங்களில் ராமநாதபுரம் போல தண்ணீருக்குத் தவிக்க வைக்கும் நிலக்கோட்டை என்ற ஊரில். மதுரையிலிருந்து கொடைக்கானல் போகும் வழியில் இருக்கும் ஊர். சுமார் எட்டு மைல் பெரிய குளம் நோக்கிச் சென்றால், வத்தலக்குண்டு (செல்லப்பா பெருமையோடு நினைவு கொள்ளும் ஊர். பி.ஆர். ராஜம் அய்யரையும், பி.எஸ் ராமையாவையும் நினைவு படுத்தும் ஊர். அது பொட்டல் காடல்ல. செழிப்பான இடம் தான். பின் இந்தப்பக்கம் மதுரைக்கு போகும் வழியில் சோழ்வந்தானும் நிலக்கோட்டை போல பொட்டல் காடல்ல. சோழ வந்தான் தெரியுமல்லவா, டி. ஆர். மகாலிங்கம் கண்டெடுக்கப்பட்ட ஊர். ஆனால் இடையில் அகப்பட்ட நிலக்கோட்டை கோடை காலத்தில் எங்களை மிகவும் வாட்டி விடும். சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய பிரக்ஞை முதலில் எனக்குப் பட்டது எனக்கு இரண்டு அல்லது இரண்டரை வயதாக் இருக்கும் போது. நிலக்கோட்டை வத்தலக்குண்டு ரோடில் ஊர் எல்லையில் தான் அந்த ஓட்டு வீடு இருந்தது. ஒரு வண்டிப் பேட்டை எங்கள் வீட்டுக்கு எதிர்த்தாற்போல் ரோடுக்கு அந்தப் புறம். நாங்கள் இருந்த வீட்டை ஒட்டி ஒரு பெரிய வீடு. அங்கு யாரிருந்தார்கள் என்று இப்போது எனக்கு நினைவில் இல்லை. வீட்டுக்குப் பின்னால் ஒரு பெரிய அரச மரம். அதில் ஒரு பிள்ளையார், எதிரில் ஒரு மூஞ்சுறும், இரு பக்கங்களிலும் நாக தேவதைகள் உடன் இருக்க. அதைத் தாண்டி ஒரு கிணறு. சுற்றிச் சுவர் எழுப்பப்படாத கிண்று. அதைத் தாண்டினால் ஒரு ஓடை. சில மைல்கள் தொலைவில் இருக்கும் செங்கட்டான் கரட்டில் மழை பெய்தால் அதிலிருந்து வடிந்து பெருகும் தண்ணீர் செக்கச் செவேலென்று பெருக்கெடுத்து, நிலக்கோட்டையின் மறு எல்லையில் ஏரி போல பரந்திருக்கும் கொக்கிர குளத்தில் சங்கமமாகும். எங்கள் வீட்டின் எதிரிலிருக்கும் ரோடோடேயே அம்மையநாயக்கனூர் (அதன் ரயில் நிலையத்திற்குப் பெயர் கொடைரோட்) நோக்கிப் போனால், கொக்கிர குள்த்தின் நீளும் கரையையும், அக்குளத்தின் மறு கரையில் நிலக்கோட்டை ஊரையே, அடுக்கி வைத்த பட்டாசுக் கட்டாகப் பார்க்கலாம்.

Wednesday, September 12, 2007

நினைவுகளின் தடத்தில் (6)

சிறுவயதில் நடந்த விஷயங்கள், சந்தித்த நண்பர்கள் இப்படி பலவற்றில் ஒரு சில மிக பசுமையாக, ஏதோ கண்முன் நேற்று நடந்து போல் நினைவில் இருக்கின்றன. பல மறந்து விடுகின்றன. நேற்று நடந்த விஷயங்கள் எவ்வளவு தான் நினைவைக் கிளறிப் பார்த்தாலும் ஞாபகத்திற்கு வருவதில்லை. பின் எப்போதாவது வேறு சிந்தனையில் இருக்கும் போது, தேடாத இந்த நினவுகள் மனதில் பளிச்சிடும். மனித மனது எப்படித்தான் செயல்படுகிறது, அல்லது செயல்பட மறுக்கிறது என்பது ஒரு புரியாத புதிர். ரஸ்ஸல் வேடிக்கையகச் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார்; மனவியல் அறிஞர்கள் (psychologists) மனது என்ற ஒன்று கிடையாது என்று வெகு தீர்மானமாகச் சொல்கிறார்கள். அதேசமயம் பௌதீகவியல் (physicists) அறிஞர்களும் தம் தரப்புக்கு பொருள் (matter) என்று ஏதும் கிடையாது என்று. இந்த விஞ்ஞானிகள் எதைப் பற்றி வாழ்நாள் முழுதும் ஆராயகிறார்களோ, அதுவே இல்லை என்றால்..... எதை ஆராய தம் வாழ்நாளைச் செலவிட்டார்கள் என்று கேட்க நமக்குத் தோன்றும். இப்படி மனோவியல் அறிஞர்களும் பௌதீக விஞ்ஞானிகளும் சொல்வது தையல்காரர்கள் இந்த ஊரில் யாருமே உடை அணிவதில்லை, நிர்வாணமாகத்தால் செல்கிறார்கள் என்றும், செறுப்புத் தைக்கிறவர்கள், எல்லோரும் வெறுங்காலோடு தான் நடந்து செல்கிறார்கள் என்று சொல்வது போல இருக்கிறது என்று வேடிக்கையாகக் கூறுவார். வேடிக்கை தான் ஆனால் அது உண்மையும் கூட. அது பற்றிப் பின்னர். இப்போதைக்கு மனது என்ற புதிர் பற்றி.

எதற்காகச் சொல்லவந்தேன் என்றால், எது இக்காலத்தில் நம் அரசியலின், சமூகத்தின் குரல் வளையைப் பிடித்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறதோ, எது எல்லோர் பிரக்ஞையையும் முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறதோ, அது என் சிறுவயதுப் பிராயத்தில் இருந்ததில்லை. அது ஒரு பெரிய விஷயமாகவே இருந்ததில்லை. எங்கள் நண்பர் குழு ஒன்றில் ஒருவர் எல்லோரையும் நோக்கி ஒரு கேள்வி கேட்டார். "உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கூடத்தில், வகுப்பில் ஒரு தாசியின் குழந்தையும் சேர்க்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? " அப்போது நான் சொன்னேன், "குழந்தைகள் எல்லாமே குழந்தைகள் தானே?" என்று. அப்போது உடனே எனக்கு மனதில் பட்ட பதிலைச் சொன்னேன். யோசிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏதும் ஆராய்ச்சிக்கான விஷயமும் இல்லை. பிறகு ஒரு நாள் கழித்துத்தான் எனக்கு அது என் சிறுபிராய அனுபவத்தில் நடந்ததைச் சொல்லியிருக்கலாம் என்று.

எங்கள் வகுப்பில், என் ஞாபகத்தில் அது ஏழாவது படிக்கும் போது என்று சொல்லவேண்டும். இரண்டே இரண்டு பெண்கள் தான் இருந்தார்கள். அவர்கள் தனியாக ஒரு பெஞ்சில் உட்கார்வார்கள். வகுப்பில் சுமார் 30 பையன்கள் இருக்கலாம். நான் ஒரு பெஞ்சில், கடைசி என்று சொல்லும் படிக்கு பின் வரிசையில் ஒன்றில். எங்கள் பெஞ்சில் நாலு பேர். அவர்களில் ஒருவன் அங்கண்ணன் என்று பெயர் என்று ஞாபகம். நல்ல உயரம். கறுப்பு. அவன் ஒரு தலித், இன்றைய சொல்லாடலில். என் வகுப்பிற்கு வாத்தியார் என் மாமா தான். அவர் தான் ஹெட்மாஸ்டரும். நாங்களை அவன் தலித் என்று அறிந்து கொண்டது, பெயரை ஊரை அல்ல்து இது போல பல விவரங்களை அறிந்து கொண்டது போலத் தான். அதற்கும் மேல் உள்ள அர்த்தங்கள் எங்களுக்குச் சொல்லப்படவுமில்லை. நாங்கள் அறிந்து கொண்டதுமில்லை. யாரும் அவனை தலித் என்று சொல்லி வித்தியாசமாக நடத்தியது கிடையாது. நல்ல உயரம் என்பதும், அடிக்கடி ஒவ்வொரு வகுப்பிலும் அவன் இரண்டு வருடங்களாவது தங்கி விடுவான் என்பதும் தான் முக்கிய தகவல்கள். அப்படி ஒரு வருடத்திற்கு மேல் அதே வகுப்பில் தொடர்வது என்பது பல மாணவர்களுக்கு சகஜமான விஷயம். அங்கண்ணன் கொஞ்சம் அதிகம் ஒரே வகுப்பில் தங்கி விடுவான்,. அவ்வளவே.

ஒரு முஸ்லீம் மாணவனும் எங்களுடன் படித்தான். அப்துல் வஹாப் என்று பெயர். அவனுடைய வீடு பள்ளிக்குப் போகும் வழியில் நீண்ட தெருவின் மத்தியில் இருக்கும். அப்துல் வஹாபின் அப்பா வீட்டின் முன் ஒரு கட்டிலில் உட்கார்ந்திருப்பார். நல்ல பாரியான உடம்பு. துருக்கிக்காரர் மாதிரி பின்னால் ஒரு குஞ்சம் தொங்கும் தொப்பி ஒன்றை எப்போதுன் அணிந்திருப்பார். அவர் லேவா தேவி செய்து வந்தார். முஸ்லீம்கள்கடனுக்கு பணம் கொடுத்து வட்டி வாங்கிப் பிழைப்பது ஹராம் என்று இஸ்லாத்தில் நம்பப்படுகிறது. ஆனால் நான் சிறு வயதில் பார்த்த முதல் முஸ்லீமின் தொழிலே அதாகத்தான் இருந்தது. நிலக்கோட்டையில் நான் அதிகம் முஸ்லீம்களைப்பார்த்ததில்லை. ஆனால் மெயின் ரோடை விட்டு உள்ளே தள்ளிச் செல்லும் ஒரு சந்தின் நடுவில் பள்ளி வாசல் இருந்தது. ஏதோ ஒரு முஸ்லீம் பண்டிகையின் போது தெருவில் புலிவேஷம் ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன். வேறு எந்தத் திருவிழாவிலும் புலிவேஷம் ஆடி நான் பார்த்ததில்லை. ஒரு சமயம் நாங்கள் விளையாடிக்கொண்டிருந்த போது அப்துல் வஹாப் என்னைத் துரத்த நான் ஓட, ஒரு மண்மேட்டின் அருகே அவன் என்னைப் பிடித்து விடுவான் போலிருக்க நான் சட்டென அந்த மேட்டைச் சுற்றி வளைந்து ஓடினேன். அவன் கால் சருக்கி குப்புற விழுந்து அவன் முன் பற்கள் உடைந்து ரத்தம் கொட்ட விழுந்து கிடந்தான். நான் பயந்து விட்டேன். நான் தான் தள்ளி விட்டேன் என்று சொல்வார்கள், மாமா அன்று என்னைத் துவைத்து எடுத்துவிடுவார் என்று பயந்து கிடந்தேன். ஆனால் ஆச்சரியம், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மாமாவும் பயந்து தான் இருந்தார். அப்துல் வஹாபின் அப்பா வந்து என்ன ரகளை நடக்கப் போகிறதோ என்று. பின்னால் எனக்குச் சொன்னார்கள். வாத்தியார் வீட்டுப் பிள்ளைதானே. ஏதோ விளையாட்டிலே இப்படி ஆகிப் போயிருச்சி. சரி விடுங்க" என்று சொன்னாராம். இன்னொரு பையன் பழனிச்சாமி. 'சாமிநாதா, நான் எட்டாம்புக்கு மேலே படிக்கப் போறதில்லே. எங்க ஐயா சொல்லிட்டாரு" என்று மிக சந்தோஷமாகச் சொல்வான். ஏன் என்று கேட்டதற்கு, "அதுக்கு மேலே படிக்கிறதுக்கு ரொம்ப மூளை வேணுமாம். பத்தாம்புக்கு போனாலே ஒவ்வொத்தருக்கு படிச்சுப் படிச்சு மூளையே கெட்டுப் போயிருமாம்" என்று சொல்வான்.

நான் முக்கியமாகச் சொல்ல வந்தது எங்கள் வகுப்புப் பெண்களைப் பற்றி. ஒருத்தி பெயர் சௌந்திரம் என்று நினைக்கிறேன். எங்கள் பள்ளிக்கூட மானேஜர், அல்லது கரஸ்பாண்டண்ட்டின் பெண். சௌராஷ்டிரர். மதுரை ஆர்.வி.மில்லின் நூல் ஏஜென்சி. அவர்கள் எங்கள் பள்ளியை நடத்தும் ஒரு குடும்பத்தின் மூன்று சகோதரர்களில் ஒருவர். மாறி மாறி அவர்கள் பள்ளிக்கு மானேஜராக இருப்பார்கள். நான் இருந்த காலத்தில் அந்த குடும்பம் தான் நிலக்கோட்டையிலேயே பணக்கார குடும்பம். அவர்கள் வசித்த தனித்தனி வீடு ஒவ்வொன்றும் பெரிய மாளிகை என்று சொல்லவேண்டும். அந்தப் பணக்கார சௌந்திரத்தோடு ஒட்டி உட்கார்ந்திருந்த இன்னொரு பெண் பெயர் ராம திலகம். மிக அழகானவள். கருப்பு நிறம் தான். என்றாலும் கருப்பு என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கறுப்பு இல்லை. ஆனால் அழகி. அவள் ஒரு தாசி குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்படியென்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. வகுப்பில் அவர்கள் இருவரே இருந்ததால், இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் இருவரும் வகுப்புத் தோழிகள். அவ்வளவே. மேலும், தாசி என்றால், ஏதோ ஒரு குலம், அல்லது உத்யோகம், என்பதற்கு மேல் அந்த பெயர் எங்களுக்கு எந்த அர்த்தத்தையும் கொடுத்ததில்லை. இந்த விவரமும் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது. எனக்குத் தெரியும். ஏனெனில் அவள் 'ட' வடிவத்தில் இருக்கும் எங்கள் தெரு என்று சொன்னேனே, எங்கள் வீடு அந்த 'ட' வின் இருகோடுகளின் சந்திப்பில் இருந்தது. ராமதிலகம் வத்தலக்குண்டு போகும் ரோடைத் தொடும் கோட்டின் நடுவே குளத்தை நோக்கி இருக்கும் வீட்டில் இருந்தாள். அவள் அம்மாவோ, பாட்டியோ ஒரு கிழவியோடு. அதற்கு அடுத்த வீட்டில் ஒரு இளம் பெண். அவ்வப்போது டூரிங் சினிமா நான் சொன்ன பேட்டையில் முகாமிட்டால், அதன் முதலாளி, அங்கு தான் தங்குவார். கழுத்தில் கையில் தங்க செயின். மல் வேஷ்டி. கறுப்பு தான், ஆனால் ஆணழகன் என்று சொல்லவேண்டும். என் மாமா கூட வீட்டில் யாருடனோ பேசும் போது அவரைப் பற்றி, "நல்ல மனிதர் தான். மரியாதை தெரிந்தவர். ஆனால், என்னவோ இப்படி ஒரு பலஹீனம்.." என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ராம திலகம் இருந்த எங்கள் தெருவின் நீட்சியில் அவள் வீடு நடுவில் இருந்தது என்றேன். அதன் இரு பக்கங்களிலும் முதலில் இரண்டு வீடுகளில் இரண்டு முஸ்லீம் குடும்பங்கள் இருந்தன. அவற்றில் முதல் வீட்டின் முன் ஆடு ஒன்று கட்டியிருக்கும். பின் ராமதிலகம் வீடு. பின் ஒரு இளம் பெண் இருந்த வீடும். அதற்கு அடுத்த வீட்டில் ரெவென்யூ இன்ஸ்பெக்டர். அதற்கு அடுத்த வீட்டில் அடிக்கடி யார் யாரோ வாடகைக்கு வந்து போவார்கள்.
எங்கள் தெருவின் பெயர், வெங்கடேஸ்வர அல்லது வெங்கடேச புர அக்கிரஹாரம். எது என்று நிச்சயமாக ஞாபகமில்லை. அந்த பெயர் வீண் தான். ஒரு சமயம் ஒரு தகரத் துண்டில் தெருப் பெயர் எழுதி சுவற்றில் ஆணி அடித்துச் சென்றார்கள். ஆனால் அந்தத் தெருப் பெயரை யாரும் எங்கும் உபயோகித்தது கிடையாது. பெயரை எழுதி, ஹெட்மாஸ்டர், நிலக்கோட்டை என்று எழுதினால் தபால் வந்து சேர்ந்து விடும். நிலக்கோட்டையில் வீட்டு எண், தெருப் பெயர் என்பதெற்கெல்லாம் ஏதும் அர்த்தம் கிடையாது. எங்கள் வீட்டின் எதிரே ஒரு சாரியில் ஒரு பெரிய வீடு காம்பௌண்டு சுவர் அடைக்க இருக்கும். அது எப்போதும் எங்கள் ஊருக்கு மாற்றலாகி வரும் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு என்று தீர்மானமாகிய வீடு. ஸ்ரீ ராமவிலாஸ் சர்வீஸோ அல்லது கொடைக்கானல் மோட்டார் யூனியன் (ஜெயராஜ் நாடார் என்பவர் நடத்தி வந்தது) பஸ்ஸோ, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் டூர் போகிறார் என்றால் அவர் வீட்டுக்கு முன்னால் வந்து பஸ் நின்று காத்திருக்கும். டிவிஎஸ் வண்டி வராது. அவர் வீட்டு வேலைக்கு என்று ஒரு ஏட்டையாவோ, கான்ஸ்டபிளோ இருப்பார். அவர் தினம் காலையில் ஷ¥வை பாலிஷ் செய்து கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். தினம் ஒரு பஸ் காலையில் அவர் வீட்டின் முன் வந்து நிற்கும். பஸ்ஸின் மேலேயிருந்து இரண்டு குடங்கள் வந்திறங்கும். அவை நிலக்கோட்டையிலிருந்து 22 மைல் தூரத்திலிருக்கும் பெரியகுளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொடுக்கும். அந்த வீட்டு காம்பவுண்டை அடுத்து ஒரு வெட்ட வெளி. அதன் ஒரு ஓரத்தில் ஒரு குடிசை. அதில் நாகு என்று அழைக்கப்பட்ட வற்றிய உடம்பும் ஏழ்மையின் வடிவே ஆன ஒரு ஸ்திரி. அவள் புருஷன் நல்ல தாட்டியான மனிதன். அவன் குடிசைக்கு வரும்போதெல்லாம் சண்டை தான், கூச்சல் தான். ஆனால் அவன் எப்போதாவது தான் காட்சியளிப்பான். நாகு தான் எந்நேரமும் ஏதோ செய்து கொண்டே இருப்பாள். அத்தோடு யாரையாவது வைது கொண்டும் இருப்பாள். அவள் ஆடு வளர்த்தாள். ஊரெல்லாம் சுற்றி சாணி பொறுக்கி வரட்டி தட்டி பிழைத்து வந்தாள். அவள் குடிசையைச் சுற்றி இருக்கும் சிதைந்து கிடக்கும் நீளக் குட்டிச் சுவரில் எப்போது வரட்டிகள் காய்ந்து கிடக்கும். அவள் குடிசைக்கு எதிரே, எங்கள் தெருவின் மறு சாரியில் நடுவே ஒரு பாழடைந்த வீடு இருக்கும். அதில்தான் அவள் வரட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்.
இதற்கு எதிர்த்த சாரியில் ஒரு பெரிய வீடு. அது நான் முன் சொன்ன எஸ்.ஆர். ராமய்யர் என்னும் எங்கள் பள்ளிக்கூடத்தை ஸ்தாபித்து நிர்வகித்து வந்த சௌராஷ்டிர குடும்பத்தின் மூத்த சகோதரர் வாங்கிப் போட்டிருந்த வீடு. அந்த வீட்டில் எப்போதாவது தான் ஒரு பெரிய அதிகாரி வாடகைக்கு வந்து தங்குவார். ஒரு சமயம் ஒரு சப் கலெக்டர் வாடகைக்கு இருந்தார். அவர் ஒரு வில் வண்டியில் தான் பயணம் செய்வார். பசு மாடு, வில்வண்டிக்கான மாடு எல்லாம் அந்த வீட்டின் ஒரு பக்கத்தில் இருந்த கொட்டகையில் கட்டி யிருக்கும். அதற்கு அடுத்த ஒரு சின்ன வீட்டில் தான் நடராஜன் என்னும் அம்பி வாத்தியார் இருந்தார், ஒரு வயோதிக அப்பா அம்மாவோடு, இரண்டு தம்பிகளோடும். அவர் வாங்கிய 19 ரூபாய் சம்பளத்தில் எப்படி காலம் தள்ளினாரோ என்று இப்போது நான் திகைக்கிறேன். அடுத்து ஒரு பெரிய வீடு. இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் இருந்த வீடு. அடுத்து ஒரு வாத்தியார் வீடு. ஒரு சமயம் நாராயண அய்யர் என்று ஒரு வாத்தியார் இருந்தார். பின் வெட்ட வெளி. பின் நாகு பயன் படுத்திய பாழடைந்த வீடு. அந்த வீட்டில் சில சமயங்களில் பகல் வேஷக்காரர்கள் வந்து தங்குவதுண்டு. தினம் ஒரு வேஷம் போட்டுக்கொண்டு வருவார்கள். அவ்வப்போது ஏதாவது கேட்பார்கள். அல்லது கடைசியில் ஊர் விட்டுப் போகும் போது அவர்களுக்கு ஏதோ கொடுப்பார்கள். அந்த நாற்பதுக்களுக்குப் பிறகு நான் வேறு எங்கும் இப்படியான பகல்வேஷக்காரர்கள் என்று கேட்டதுமில்லை. பார்த்ததுமில்லை. அதை அடுத்து மறுபடியும் ஒரு வாத்தியார் வீடு. ரங்கநாதன் என்றோ அல்லது ரங்கசாமி என்றோ பெயர். எனக்கு ஆறாம் வகுப்பு வாத்தியாராக இருந்தார். அது தவிர அவர் பாட்டும் சொல்லிக்கொடுப்பார். ஊரின் மற்றொரு கோடியில் வெகுதூரத்திலிருந்த பெருமாள் கோவில் பாட்டராச்சாரியார் குடும்பமோ என்னவோ இரண்டு சிறுமிகள் வந்து பாட்டுச் சொல்லிக் கொண்டார்கள். அத்தெருவின் நடுவே ரோட்டைப் பார்த்தவாறு பிள்ளையார் கோவில். தெருவின் மறுகோடியிலிருந்த நாங்களும் பிள்ளையாரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டிருப்போம்.

வெங்கட் சாமிநாதன்/24.8.07