Wednesday, March 12, 2008

அவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்


எங்கள் தெருவின் மூத்த குடிமகன் நேற்று இறந்து விட்டார். கொஞ்ச நாளாகவே அவரை வீட்டுக்கு வெளியே காணவில்லை. அவரை வீட்டுக்கு வெளியே காணவில்லை என்பதே எங்களுக்குக் கொஞ்ச நாள் பொறுத்துத் தான் தெரிய வந்தது. இப்போதெல்லாம் அவர் அனேகமாக வீட்டினுள்ளே தான் அடைபட்டுக் கிடப்பார். எப்போதாவது தான் அவர் வெளியே வருவார். திறந்த மார்புடன், இடுப்பு வேட்டியை தூக்கிக் கட்டிக்கொண்டி ருப்பார். சில சமயம் அவரை வெறும் துண்டுடன் காணநேரும். வீட்டின் முன் இருக்கும் செமெண்ட் பெஞ்ச் போன்ற இருக்கையில் உட்கார்ந்திருப்பார். அவருக்கென சில வயது முதிர்ந்த நண்பர்கள் உண்டு. அவர்கள் எப்போதாவது வருவார்கள். சைக்கிளில் ஒருவர் வருவார். போகும் வழியில் சைக்கிளை நிறுத்தி, இரும்பு கேட்டைத் திறந்து உள்ளே போய் அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வார். பேசிக்கொண்டிருப்பார்கள் இருவரும். இப்படி சிலர் அவ்வப்போது வந்து போவார்கள். அவர்கள் வருகையும் சில நாட்களாக காணப்பட வில்லை. அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று தான் அவர்கள் வராதிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. அவர் வீட்டு முன் இருக்கையில் உட்கார்ந்திருக்கக் காணாது அவர்கள் தம் வழி போயிருக்கக் கூடும். நான் என் வீட்டு முன் திண்ணையில் (sit out) உட்கார்ந்த படி பத்திரிகை படிக்கும் போது அல்லது வேறு எந்த வேலையிலும் இருக்கும்போது அவர் தன் வீட்டு முன் இருக்கையில் இருப்பதும் இல்லாததும் கண்களில் படும். நான் அவர் அவ்வாறு வெளியே உட்கார்ந்திருக்கும் வேளைகளில் அவரிடம் சென்று பேசுவோம் என்று நினைத்தது கிடையாது. என்னவோ, ஏதும் காரியம் இல்லாது இங்கு நான் எவர் வீட்டுக்குள்ளும் போனது கிடையாது.


இறந்த பெரியவரின் வீட்டுக்கு நான் சில முறை போயிருக்கிறேன். ஏதோ விசேஷங்களுக்காக என்று தான். அவருடைய பெண்ணுக்கு குழந்தைகள் பிறந்த இரண்டு முறை. அவருடைய மகனுக்கு குழந்தை பிறந்த இரண்டு முறை. பின் அவருடைய மகனின் முதல் குழந்தை பிரசவத்திலேயே இறந்த போது. அந்த குழந்தை இறந்தது அவர் வீட்டினருக்கு மாத்திரம் இல்லை. எங்களுக்கும் அது துக்கமாகத் தான் இருந்தது. காரணம் அவரது மகனுக்கும் மறுமகளுக்கும் மாத்திரமில்லை, அவருக்கும் தன் மகன் வழியில் சந்ததி இல்லாது போய்விடுமோ என்று வேதனைப் பட்டுக் கொண்டிருந்ததை, அவர்கள் சொல்லாமல் நாங்கள் உணரமுடிந்திருக்கிறது. மகன் சிறுவயதிலேயே போலியோவினால் கால் ஊனமுற்றவன். மறுமகள் தன் புருஷனிடம் ஒட்டுதலோடு தான் இருந்தாள். அவர்கள் வீட்டில் சண்டை நடந்தால் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காதை அடைத்துக் கொள்ள முடியாது. வீட்டுக்கார அம்மாள் மிகக் கொடூரமாகத் தான் திட்டுவாள் தன் மருமகளை. அதுவும் உரத்த குரலில். வீட்டில் வேறு யார் குரலும் கேட்காது. இறந்த நண்பர், வாய் பேசமாட்டார். அமைதியாகத்தான் இருப்பார். அவர் கோபித்தோ, கடுமையாகப் பேசியோ நான் கேட்டதில்லை.


வீட்டில் வீட்டுக்கார அம்மாள் தான் எந்த விஷயத்திலும் கடைசி முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றவர் போலும். அதுவும் தவறு. கடைசி முடிவு என்று சொல்ல முடியாது. அவர் சொன்ன சொல்லுக்கு ஏதும் விவாதம் நடந்தால் தானே கடைசி முடிவு என்று சொல்லலாம். என்ன செய்ய வேண்டும் என்று அந்த அம்மாள் சொல்வார். அது மறு பேச்சின்றி நடத்தப்படும். இப்படித்தான் விஷயங்களை நாங்கள் வெளியிலிருந்து யூகித்துக் கொள்ளமுடிந்தது. ஏனெனில் எந்த விஷயத்திலும் அந்த அம்மாள் சொல்வார். அது பற்றி விவாதம் நடந்ததாக எங்களுக்குப் பட்டதில்லை. இறந்த பெரியவர் குரல் என்றும் கேட்டதில்லை. இந்த வீட்டு விவகாரங்களையெல்லாம் தன் மனைவியின் முடிவுக்கே விட்டு விடுவது அவருக்கு சுலபமாகவும், விவாதங்கள் எழுமாயின் விளையும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வழியாகவும் அவருக்குத் தோன்றியிருக்கக் கூடும். 72 வயதான அவருடைய நீண்ட தாம்பத்யத்தில் அனுபவமும் விவேகமும் நிறைந்த காரியமாகத் தான் அது இருந்தி ருக்கும். கடந்த இரண்டு மூன்று வருஷங்களாகவே அவர் அவ்வளவு ஆரோக்கியத்துடன் இருந்ததாகச் சொல்ல முடியாது. ஒரு நாள் நடு இரவில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவசர அவசரமாக கொஞச தூரத்தில் இருந்த இருதய நோய் மருத்துவரிடம் சென்றதும், இரவு பூராவும் அவர் மருத்துவ மனையின் கண்காணிப்பில் இருந்ததும் மறு நாள் காலையில் தான் எங்களுக்குத் தெரிய வந்தது. அதன் பின் வெளியில் இருக்கும் எங்களுக்கு வீட்டுப் பொறுப்பு அத்தனையும் அந்த அம்மையார் தான் கவனித்துக் கொண்டார் எனத் தோன்றிற்று.


அந்த அம்மையார் தான் வீட்டு வேலைகள் அத்தனையையும் செய்பவர். அவ்வப்போது வந்து போகும் மகள் அம்மாவின் செல்லத்திற்கு உரியவள். குழந்தைகளை பாட்டியிடம் விட்டு விட்டு வேலைக்குப் போவாள். சாயந்திரம் வேலையிலிருந்து திரும்பியதும் இங்கு வந்து ஒரு ஆட்டோவில் குழந்தையை அழைத்துக்கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் தன் வீடு செல்வாள். இப்போது இரண்டு குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அந்த வீட்டு அம்மாளின் மீது சுமந்திருந்தது. செல்லம் கொடுத்து பிடிவாதம் வளர்ந்துள்ள ஏழு வயதுப் பெண் ஒன்று. பின் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று. அந்த அம்மாள் முகம் சுணங்கி நாங்கள் பார்த்ததில்லை. அந்தக் குழந்தைகள் இரண்டும் பெண்ணின் குழந்தைகள்.


இப்போதெல்லாம் மகனும் மருமகளும் அவர்களுடன் இல்லை. இரண்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள ஒரு புறநகர் பகுதியில் தனியாக வசிக்கத் தொடங்கியுள்ளார்கள். மருமகளுக்கும் அடிக்கடி கேட்கும் வசைகளுக்கு ஒரு முடிவு கிடைத்த நிம்மதி. மகனுக்கு தான் சம்பாதித்து தன் குடும்பத்தை ரக்ஷ¢க்கும் பொறுப்பு. ஆனாலும் தனியாக வந்த நிம்மதியில் ஒரு சந்தோஷம். தனித்துச் சென்றபிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்தது எல்லோருக்கும் சந்தோஷம் தருவதாக இருந்தது. முதல் பிரசவத்தில் குழந்தை இறந்தது அக்குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. "நீங்கள் வாய் திறந்து சொல்லாவிட்டாலும் மனதில் இந்தக் குறை உங்களை வருத்திக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும். இப்போது சந்தோஷம் தானே?" என்று என் மகிழ்ச்சியை அவரிடம் தெரிவித்தேன். அப்போது தான் முதன் முறையாக அவர் தன் வீடு சம்பந்தப்பட்ட சொந்த விவகாரங்களை மிக ஈடுபாட்டுடன் சொன்னார். அவர் எப்போதும் உணர்ச்சி வசப்படுபவர் இல்லை. ஆனாலும், அவர் பேச்சில் அடக்கி வைத்திருந்த வெகுநாள் ஆதங்கம் இப்போது வெளிப் படுவதை உணர முடிந்தது. மகன் சிறு பிராயத்திலேயே இப்படி அங்கஹீனனாகிப்போனதும், என்ன்வெல்லாம் வைத்தியங்கள் பார்த்தும் குணமாகாது போய்விட்ட வருத்தமும், அவனுக்கு கல்யாணம் செய்யப்பட்ட பாடும், பின் பிரசவத்தில் குழந்தை மரித்ததும், அவனுக்கு குழந்தை பாக்கியமே இல்லாது போய்விடுமோ என்று வேதனைப் பட்டதுமான ஒரு பெரிய கதையே அவரிடமிருந்து வெளிப்பட்டது. இம்மாதிரியான சமயங்களில் எந்த மனிதனுக்கும் ஒரு ஆற்றாமையில் எழும் 'கடவுளே, ஆண்டவனே" என்ற பெருமூச்சுடன் வெளிவரும் வார்த்தையை அவர் உச்சரிக்கவில்லை. வெகு நிதான மாகத் தான் பேசிக்கொண்டு போனார். ஆனாலும் அதற்கிடையில், இந்த வீட்டில் இருக்கும் வரையில் அவர்களுக்குக் குழந்தை பிறக்காது என்றும் அது வாஸ்து சம்பந்தப்பட்டது என்று சொன்னதன் பேரில் அவர்கள் பிரிந்து சென்ற பிறகு இப்போது அவர்களுக்குக் குழந்தை பிறந்திருப்பதையும் சொல்லி அவர் சந்தோஷப்பட்டார். அவர்களால் தனித்து வாழ முடிகிறதா, போதிய வருமானம் வருகிறதா என்று கேட்டேன். அவ்வப்போது நாங்கள் உதவுவோம் என்று சொன்னார் அவர். ஆனால் என் மனைவி சொன்ன விவரம் வேறு மாதிரியாக இருந்தது. ஒரு நாள் மாமியார் மருமகளைத் திட்டும் படலம் மகனின் பொறுமைக்கு மீறிவிடவே, 'இனி நாங்கள் இங்கிருக்கப் போவதில்ல், நாங்கள் தனியாகப் போய்விடுகிறோம்" என்று சொல்லிவிட்டு மகன் மனைவியை அழைத்துக் கொண்டு தனியாகப் போயிருக்கிறான், என்று என் மனைவி சொன்னாள். "என்னங்கம்மா, அவங்களாலே சமாளிக்க முடிகிறதா, மகன் சம்பாதிப்பது வீட்டு வாடகைக்கே சரியாப் போய்விடுமே, பின் சாப்பிடுவது எங்கே?" என்று வீட்டுக்கார அம்மாளைக் கேட்டேன். "அவங்க என்னமோ தனியாப் போகணும்னாங்க. அவங்க அப்படி ஆசைப்படும் போது நாம ஏன் தடுக்கணும், அவங்களாலே முடியும்னா இருந்துக்கட்டுமே. முடியலேன்னு திரும்பி வந்தா வராதேன்னா சொல்லிடப்போறோம்?" என்று அந்த அம்மையார் சொன்னார்கள். இது என் மனைவி சொன்னதையே ஒரு வகையில் சாட்சியப்படுத்துவதாகத் தோன்றியது. அந்த அம்மையார் வாஸ்துவைக் காரணம் காட்டியிருக்கலாம். வம்பற்ற பாடு. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.


நண்பர் தனக்கென ஒரு தனி உலகத்தைச் சிருஷ்டி த்துக் கொண்டு அதில் அமைதி காண்கிறார் என்றே தோன்றிற்று


நான் சென்னையின் மடிப்பாக்கம் புறநகர் பகுதிக்கு எட்டு வருஷங்களுக்கு முன் குடி பெயர்ந்த போது, மடிப்பாக்கத்தின் எங்கள் தெருவின் மூத்த குடிமகன் அவர்தான் என்று சொல்லப்பட்டவர் அவர். எங்கள் தெருவுக்கென்ன, மடிப்பாக்கத்திலேயே அந்த விளைநிலங்களில் முதல் காலடி எடுத்து வைத்து வீடு கட்டியவர் அவராகத்தான் இருக்கவேண்டும். இரண்டு கிரௌண்ட் கொண்ட விஸ்தாரமான மனையில், 'இவ்வளவு தான் என்னால் முடியும் என்று சொல்லி விட்டேன், இது போதும் எங்களுக்கு" என்று ஒரு க்ரௌண்டில் வீடு கட்டிக்கொண்ட மடிப்பாக்கத்தின் முதல் குடிமகன் அவர். நாங்கள் இந்த தெருவுக்கு வீடு கட்டிக்கொண்டு வந்த போது, தெருவுக்கே மூத்தவராக, அனுபவமும், மனிதர் களிடையே செல்வாக்கும் மிகுந்தவராக அவரிடம் எல்லோரும் மரியாதை செலுத்தினார்கள். அப்போது புதியவனாக வந்து சேர்ந்த என்னிடம் அவர், நான் அணுகிய போதெல்லாம் அவரால் முடிந்த அளவு உதவ முயன்றார். என்னிடம் அடாவடித்தனமாக நடந்து கொண்ட ஒருவரை அவர் ஏன்? என்று கேள்வி கேட்கவில்லை. அது பாட்டிலே அது, என்று எனக்கு வேறு விதத்தில் உதவ முயன்றார். ஆக இருவரிடமும் அவருக்கு விரோதமில்லாது நடந்து கொண்டாயிற்று. சுற்றியிருக்கும் நாலைந்து தெருக்களு க்கான சங்கம் அமைத்த போது அதை பொறுப்பேற்று வழி நடத்தியவர் அவர். அப்போதும் தான் ஏதும் பொறுப் பேற்றுக் கொள்ளாது, வேலை செய்யும் மற்றவர்கள் செய்யும் வேலையில் குறைகள் காண்பதே தொழிலாகக் கொண்டு, அடாவடித்தனமாக குற்றம் சாட்டியவரை அவர் கடிந்து கொள்ளவில்லை. எதற்கும் சமாதானமாகப் போகும் வழி தான் அவரதாக இருந்தது.


எங்கள் வீடு கட்டி முடிந்ததும் புது மனை புகு விழாவிற்கு, மடிப்பாக்கதில் முன்னர் நிர்வாகியாக இருந்து நல்ல பெயர் வாங்கியிருந்த ஒரு இளம் அதிகாரி அப்போது முதல் அமைச்சரின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக முதலமைச்சரின் செயலகத்தில் இருந்தார். அவர் என்னுடன் நெருங்கிய நட்புணர்வு கொண்டிருந்தார். அவரும் வந்திருந்தார். ஒன்றிரண்டு முறை அவர் நம் அண்டை வீட்டு நண்பரின் வீட்டு தொலை பேசியில் என்னை அழைத்துப் பேசும் சந்தர்ப்பங்களும் இருந்தன. அதனால் தானோ என்னவோ மூத்த குடிமகனான நண்பர் என்னிடம் தாமாக வந்து தாராளமாக தயக்கம் இன்றி பேசும் பழக்கத்தையும் கொண்டிருந்தார். அப்போது தான் எனக்கு அவர் கருணாநிதியின் அருமை பெருமைகளை, நிர்வாகத் திறமைகளை, அவரது ஆட்சியின் மகிமைகளைப் பற்றியெல்லாம் வியந்து பாராட்டிப் பேசத் தொடங்கினார். கருணாநிதி கெட்டிக்காரர் தான். சாமர்த்தியசாலியும் கூட. ஆனால் நான் அவரது வியப்பையெல்லாம் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை என்பதை அவருக்குச் சொல்வேன். "லஞ்சமெல்லாம் இந்தப் பசங்க, கீழே இருக்கற பசங்க செய்யறது, அவர் பேரு கெடுது", என்பார். "அப்படியென்றால் அது என்ன நிர்வாகம்?" என்று கேட்பேன். "அவருக்கு இப்படி ஆயிரங்கோடிக் கணக்கில் சொத்துசேர்ந்தது எப்படி?", என்று கேட்பேன். வாக்காளர் பதிவு நடந்து கொண்டிருந்தது. இரண்டு மூன்று முறை நான் முயன்றும் என் பெயர் பதிவாகவில்லை. என் நண்பர், முதலமைச்சர் செயலகத்தில் இருந்தவர் தம் அதிகாரத்தைச் செயல்படுத்திய பின்னும் என் பெயர் பதிவாகவில்லை. "வாருங்கள், நானும் வருகிறேன். பஞ்சாயத்து அலுவலகம் செல்வோம்" என்று சொல்லி அவர் பஞ்சாயத்து தலைவரிடம் சொன்னார். அவரும் இவர் சொல்வதைக் கேட்டு தலையாட்டினார். கடைசியில் நடந்தது என்னவோ ஒரு கூத்து. மடிப்பாக்கத்தின் மூத்த குடிமகனான அவர் பெயரே வாக்காளர் பட்டியலில், முதலில் இருந்தது இப்போது காணாமல் போயிற்று. என் பெயரும் பதிவாகவில்லை. என் மனைவியின் பெயர் வேறொரு வீட்டினரோடு சேர்க்கப்பட்டது. "இது தான் நீங்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும் ஆட்சியின் அழகு. உங்கள் பெயரையே காணோம்" என்றேன். அவர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. வரும் வழியெல்லாம் "இந்தக் கோயில் இருந்த இடம் நான் வரும்போது குப்பை மேடாக இருந்தது. நாய்கள் படுத்துக் கிடக்கும். இப்போது கோவில் கட்டியிருக்கிறார்கள் பெரிதாக. மனுஷனுக்கு வாழ இடம் இல்லை. கோயில் கட்டி விடுகிறார்கள்" என்றார். "ஏரிகளை அல்லவா வளைத்துப் போட்டு மனைகளாக்கியிருக்கிறார்கள். மடிப்பாக்கமே நெல் வயலாக இருந்த இடம் தானே" என்று கேட்டேன். ஆனால், அவர் கருணாநிதியின் புகழ் பாடுவது நிற்கவில்லை. அவ்வப்போது முதலமைச்சர் செயலகத்தில் தானே உடனிருந்து பார்த்தது போல, என்னென்ன கட்டளைகளை முதலமைச்சர் அவ்வப்போது போட்டிருக்கிறார், எப்படி அவரது முடிவுகள் அசகாய புத்திசாலித்தனமானவை, தீரச்செயல் போன்றவை, என்று சொல்வார். அப்படி புகழ் பாடும்போது, அவர் தன்னை ஒரு நாஸ்திகராகக் காட்டிக்கொள்வார். தெய்வ நம்பிக்கையெல்லாம் மூடத்தனம் என்பதாக அவர் பேச்சு இருக்கும். அவர் குறிப்பாகப் பெயர் சொல்லாது மறைமுகமாக இந்த மூடத்தனத்துக்கெல்லாம் காரணமான மேல் ஜாதியைச் சாடுவார். "இப்படியெல்லாம் கோபப் படும் நீங்கள் இங்கு சுத்தியிருக்கும் அடாவடித்தனத்தை ஒரு முறை கூட கண்டித்ததாகக் காணோமே, அவர்களோடு சமாதானமாகத் தானே போகிறீர்கள், ஒதுங்கி விடுகிறீர்கள்" என்று கேட்பேன். ஜெய லலிதா ஆட்சி வந்ததும் கலைஞர் செய்ததையெல்லாம் கெடுத்துவிட்டதாகவும் லஞ்சம் பெருகிவிட்டதாகவும் சொல்வார். "இப்போ நடப்பதைச் சொல்வது சரி. ஆனால் முன்னால் என்ன வாழ்ந்தது? இந்த ஊழலை ஆரம்பித்து வைத்ததே அந்தப் பெருமகன் தானே. அது ஏன் உங்கள் கண்ணில் படமாட்டேன் என்கிறது?" என்று கேடடால் அதற்கு பதில் சொல்ல மாட்டார்.

அவர் மத்திய அரசாங்கத்திலோ அல்லது தமிழ் நாடு அரசிலோ வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். எங்கு என்பது எனக்குப் புரிந்ததில்லை. மத்திய அரசு என்று எனக்குத் தோன்றும். ஆனால் தான் வேலல பார்த்த்த இடங்கள் , தான் சண்டை போட்ட அதிகாரிகள் போன்ற விவரங் களைச் சொல்லும் போது, தமிழ் நாடு அரசு வேலை என்று தோன்றும். அவர் தனக்கும், தன் மகனுக்கும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள், வேலை உயர்வுகள் கிடைக்காமல் போனது, "இந்த நாசமாப் போன ரிசர்வேஷன் காரணமாகத் தான்" என்று பல முறை அவர் வேதனைப் பட்டுப் பேசியிருக்கிறார். அவர் அலுவலகத்தி லேயே ரிசர்வேஷனில் பயனடைந்த அதிகாரிகளோடு வெளிப்படையாகப் பேசிய சம்பவங்களையும் அவர் சொல்லியிருக்கிறார்.


இதையெலாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் என் மனைவி, அவர் போன பின்பு, "இவர் தான் இப்படிப் பேசுகிறாரே ஒழிய அவர் வீட்டில், "எல்லாரும் கொள்ளையடிக்கிறாங்க. வர்ரவங்க எல்லாம் கொள்ளை யடிக்கத்தான் வராங்க, இதிலே அந்தக் கட்சி என்ன், இந்தக் கட்சி என்ன?" என்று அவங்க வீட்டுக்கார அம்மா சொல்றாங்க" என்பாள். என்னிடம் தாராளமாக அவர் மனம் விட்டுப் பேசுவது எதையும் அவர் வீட்டில் பேசுவது இல்லை என்று தான் தோன்றியது. இதுவும் என் யூகம் தான். எந்த விஷயத்திலும் அவர் தன் மனைவிக்கு எதிராக எதுவும் பேசிக் கேட்டதில்லை.


அவர் வீட்டின் முன் கூரை ஒன்று போட்டிருந்தது நான் வந்ததிலிருந்து பார்த்திருக்கிறேன். "அதை ஏன் எடுத்து விட்டீர்கள். வெயிலுக்கு பாதுகாப்பாக இருந்ததே?" என்று நான் கேட்டேன். "வாஸ்து, வாஸ்து" என்று சிரித்துக்கொண்டே கிண்டலாகச் சொன்னார்.. "வாஸ்துவா?" என்று நான் புரியாமல் கேட்க, "ஆமாம் அப்படித்தான் யாரோ வீட்டிலே சொல்லிட்டாங்க. அதை எடுத்துத்துட்டுத் தான் மறுவேலைன்னு எடுத்துட்டாங்க" என்றார். எனக்கு வருத்தமாக இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு பன்னீர் கொடி கூரை மேல் படர்ந்து நிறைய கொத்துக் கொத்தாக பன்னீர் புஷ்பங்கள் பூத்துக் குலுங்கும். "புழு வந்துட்டதுன்னு எல்லாத்தையும் எடுக்கச் சொன்னேன் என்று அந்தம்மா சொன்னாங்க" என்று என் மனைவி சொன்னாள். அதுவும் உண்மையாக இருக்கக் கூடும். ஏனெனில் அந்த அம்மாவுக்கும் என்னைப் போல் பூக்களின் மேல் மிகுந்த ஆசை உண்டு. அது தெரிந்தது. விடிகாலையில் அவர் வீட்டுக்குள் நுழைந்து சர்வ சுதந்திரமாக பூக்களைப் பறித்துச் செல்வதை அந்த அம்மாள் அனுமதிப்ப்பார். அதே சம்யம் வாசலில் பூக்களை விலைக்கு வாங்குவார். அந்த அம்மா நெற்றியில் பெரிதாக குங்குமப் பொட்டு இட்டுக் கொண்டிருப்ப்பார்கள். தலை வகிட்டிலும் தீட்டிய குங்குமத்தோடு தான் காட்சி தருவார்கள் எப்போதும். நிறைந்த பக்தி கொண்டவர்கள். தினம் விடியும் முன் எழுந்து வீட்டின் முன் பெருக்கு தண்ணீர் தெளித்து, பெரிதாக கோலம் போட்டிருப்பார்கள். விசேஷ தினங்களில் அது மிகப் பெரிதாகிவிடும் தெருவில் போவோர் வருவோர் அந்தக் கோலத்தை மிதித்துக் கொண்டே போகும் அந்த உதாசீனம் எனக்கு மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் கொடுக்கும். மார்கழி மாதங்களில் ஒவ்வொரு நாளும் தவறாது, அந்த அம்மையார் வெளியே நின்று கொண்டிரு ப்பார். பஜனை கோஷ்டி அவர் வீட்டுக்கு முன் வந்ததும் அவர் அவர்களை சுற்றி வலம் வந்து தெருவிலேயே அவர்களை நமஸ்கரிப்பார். "பெரியவர்களை நமஸ்காரம் பண்ணலாம் தான். ஆனால் தெருவிலே எப்படி பண்றது? தெரு சுத்தமாவா இருக்கு?" என்பாள் என் மனைவி.


ஐயப்பன் கோவிலுக்கு அரிசி கொடுக்க வேண்டிக் கொள்வார். தன் வீட்டின் முன் அரிசியைக் கொட்டி வைத்துக்கொண்டு தெருவில் இருக்கும் பெண்கள் எல்லோரையும் அழைத்து தான் கொட்டி வைத்திருக்கு அரிசியை எடுத்து தானம் செய்யச் சொல்வார். சுற்றி யிருக்கும் கோவில்களிலிருந்து விழாக்காலங்களில் சுவாமி ஊர்வலம் எப்போது எங்கள் தெருவுக்கு வரும் என்று அந்த அம்மாவுக்குத் தெரியும் ஒரு நாள் கூட அவர் தேங்காய் பழம் சூடம் கொண்ட தட்டோடு இக்கட்டுரையின் நாயகர், இத்தெருவின் மூத்த குடிமகன், தட்டோடு ஸ்வாமி ஊர்வலத்திற்காக காத்திருப்பதைப் பார்க்க நான் தவறியதில்லை. தட்டைக் கொடுத்து ஏற்றிய சூடத்தைக் கண்ணில் அவர் மிகுந்த பவ்யத்தோடு ஒத்திக்கொள்வதை நான் பார்க்காத நாள் இல்லை. மிகுந்த பய பக்தியோடு காணப்படுவார். நம் வீட்டுக்கு வந்து இவ்வளவு தெய்வ நிந்தனை செய்பவர் எப்படி தவறாது இக்காட்சி தருகிறார் என்று நானும் என் மனைவியும் வியப்போம். கருணாநிதி புகழ் பாடினால் நான் அவரோடு வாதிடுவேனே தவிர, இந்த விஷயத்தை அவரிடம் பேசி அவரை வாயிழக்கச் செய்யும் மனம் எனக்கு இருந்ததில்லை. எங்கள் வீட்டில் பேசும் அவர் வேறு. அவர் வீட்டின் முன் தட்டு ஏந்தி ஸவாமி ஊர்வலத்திற்காகக் காத்திருக்கும் அவர் வேறு. எங்கள் வீட்டில் பேசும் அவரை அவர் மனைவி அறிவாரா என்பதே எனக்குச் சந்தேகம் தான்.


வெகு அமைதியாக, எவ்வித சச்சரவும் இன்றி, தன் நம்பிக்கைகளை, தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு, இரு வேறு எதிர் எதிர் உலகங்களில் வாழ்ந்து காட்டியவரா அவர்? உண்மையான அவரது ஆளுமை, ஆத்மர்ர்த்தம் நம்பிக்கைகள் என்ன? அவர் உணர்வோட்டங்கள் என்ன? அமைதி நாடி, வாழும் நிர்ப்பந்தங்களுக்காக வேறு வேறு மனிதராக, வீட்டிலும் தெருவிலும், உலகிலும் நண்பர்களிடமும் வாழ்ந்தவரா அவர்? எங்களுக்கும் மற்றவர்களுக்கும் அவராகக் காட்டிக் கொண்ட அவரைத் தான் எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். தன் ஆசாபாசங்களை, தன் உள்ளுணர்வுகளை தன்னோடே அவர் எடுத்துச் சென்று விட்டார், அதை அவர் எங்களுக்குக் காட்டவில்லை என்று தான் தோன்றுகிறது. இனி அவர் தன் வீட்டின் முன் திறந்தமார்பும், இடுப்பில் கட்டிய வேட்டியுமாக நிற்கக் காணமுடியாது. தன்னோடு தன் உலகையும் அவர் எடுத்துச் சென்று விட்டார்.


வெங்கட் சாமிநாதன்/26.2.08

3 comments:

பாரதிய நவீன இளவரசன் said...

O, neengalum madipaakkam thaana? please see my blog 'மடிப்பாக்கம் - 25 வருடங்கள் ஓடியாச்சு!'
http://bharateeyamodernprince.blogspot.com/2008/02/25.html

வெ.சா said...

அன்புள்ள நண்பரே,

முதலில் உங்கள் புனைபெயருக்கு என் வாழ்த்துக்கள். புதுமையாக இருக்கிறது.

மடிப்பாக்கம் தானா உங்களை என் பக்கம் திரும்பச் சொல்லியிருக்கிறது? சரி, நல்லது, மடிப்பாக்கத்தினால் ஒரு நல்ல காரியமாவது நடந்திருக்கிறதே.

யாரது இந்த லக்கிலுக் ?(ஆங்கிலப்படுத்தப்பட்ட பெயராக இருந்தால் அவர் பெயர் 'சுதர்சனம்' ஆக இருக்கவேண்டும்)என்று சில சமயம் நான் திகைத்ததுண்டு. கடைசியில் அவரும் மடிப்பாக்கக் காரர்தானா?

மடிப்பாக்கம் பற்றிய உங்கள் மனோகரமான வர்ணணைகளை இன்றைய மடிப்பாக்கத்த்தில் நான் கற்பனை செய்யக்கூட இயலாது. நான் இங்கு குடியேறி எட்டு மாதங்களே ஆகியுள்ளன.நான் வந்த போதே 200 அடி தோண்டியும் உப்புத் தண்ணீர் தான் கிடைக்கிறது.

இனி வரும் காலம் எப்படியோ. இன்னமும் ஏரிகள் வீட்டு மனைகளாகின்றன. மடிப்பாக்கம், சென்னை, தமிழ் நாடு ஒரு பிரும்மாண்ட குப்பை மேடாக, சாக்கடைக்கும்பியாக வேகமாக உருமாறிக்கொண்டிருக்கிறது. வெ.சா.

வெ.சா said...

அன்புள்ள நண்பரே,

முதலில் உங்கள் புனைபெயருக்கு என் வாழ்த்துக்கள். புதுமையாக இருக்கிறது.

மடிப்பாக்கம் தானா உங்களை என் பக்கம் திரும்பச் சொல்லியிருக்கிறது? சரி, நல்லது, மடிப்பாக்கத்தினால் ஒரு நல்ல காரியமாவது நடந்திருக்கிறதே.

யாரது இந்த லக்கிலுக் ?(ஆங்கிலப்படுத்தப்பட்ட பெயராக இருந்தால் அவர் பெயர் 'சுதர்சனம்' ஆக இருக்கவேண்டும்)என்று சில சமயம் நான் திகைத்ததுண்டு. கடைசியில் அவரும் மடிப்பாக்கக் காரர்தானா?

மடிப்பாக்கம் பற்றிய உங்கள் மனோகரமான வர்ணணைகளை இன்றைய மடிப்பாக்கத்த்தில் நான் கற்பனை செய்யக்கூட இயலாது. நான் இங்கு குடியேறி எட்டு மாதங்களே ஆகியுள்ளன.நான் வந்த போதே 200 அடி தோண்டியும் உப்புத் தண்ணீர் தான் கிடைக்கிறது.

இனி வரும் காலம் எப்படியோ. இன்னமும் ஏரிகள் வீட்டு மனைகளாகின்றன. மடிப்பாக்கம், சென்னை, தமிழ் நாடு ஒரு பிரும்மாண்ட குப்பை மேடாக, சாக்கடைக்கும்பியாக வேகமாக உருமாறிக்கொண்டிருக்கிறது. வெ.சா.